Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-03

---------------------------
இதுவரை நான் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையான குறிப்புகளையே எழுதினேன். சம்பவங்கள் உண்மையென்று நிறுவப்பட்டாலும் அதற்கான காரணங்களை சரியாக நிறுவுவது சுலபமல்ல. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மூன்று சமயத்தவரும் ஜெருசலேத்திற்கு உரிமை கோருகின்றனர் என்று கூறியிருந்தேன். அதற்கான காரணத்தை இப்பொழுது மேலோட்டமாக கூறிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். இதற்கு அவர்களின் வேத நூல்களான தோரா, பைபிள், குரான் மாத்திரமே ஆதாரமாகும்.
இறைவனின் படைப்பான ஆதாம் ஏவாளின் 19வது தலைமுறையில் வந்த ஆபிரகாமுக்கும் அவரின் ஒரு மனைவி சாராவுக்கும் பிறந்த ஈசாக் என்ற மகனின் வாரிசுக்களே யூதர்கள் என்றும், இன்னொரு மனைவிக்கு பிறந்த மகனான இஸ்மாயிலின் வாரிசுக்களே அரேபியர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக சொல்லப்பட்டாலும் அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் கிமு 700 அளவில் யூதமத சின்னங்கள் பாவிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதற்கு 700 வருடங்களின் பின்பு கிறிஸ்தவ மதமும், அதற்கு 600 வருடங்களின் பின்பாக இஸ்லாம் மதமும் தோற்றுவிக்கபப்டுகின்றது. கி பி 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் தோற்றுவிக்கப்படும் வரை அரேபியர்கள் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கி வந்தனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இம்மூன்று சமயங்களையும் ஆபிரகாமிய சமயங்கள் என்று சொல்வார்கள். ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுன்னத் எனப்படும் விருத்த சேனம் செய்து வைக்கப்பட்டதுடன் இம்மரபை யூதர்களும் இஸ்லாமியர்களும் இன்றுவரை கடைப் பிடித்து வருகின்றனர்.
ஈசாக்கின் வாரிசுகள் எகிப்தில் வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களின் பெருக்கத்தையும் செல்வத்தையும் பொறுக்கமுடியாத எகிப்திய மன்னனும் மக்களும் அவர்களுக்கு கொடுமை செய்தார்கள் என்றும் அவர்களை மீட்டெடுத்து அழைத்து வந்த மோசஸ் (Moshe என்றும் சொல்வர்) அவர்களின் தலைவரானார் என்பதும் பைபிள் கதை. வரும் வழியில் சினாய் பாலை வனத்தில் தங்கியிருந்த போது இவர்களின் மதக் கொள்கைகளும் ,தோரா எனப்படும் யூதர்களின் வேத நூலும் பிறந்தன என்றும், ஜோஷுவா என்னும் தளபதியின் தலைமையில் இஸ்ரவேலை கைப்பற்றி அங்கு உள்ளவர்களை கொன்று ஆட்சி செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. இதன் பின்பு அவர்களின் மன்னர்களாக சவுலும், பின்பு தாவீதும் அதன்பின்பு சொலமனும் வருகின்றனர். இந்த தாவீது தான் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்து கோலியாத்தினை கவண் கொண்டு சண்டையிட்டு கொல்வதாக நாம் முன்பு படித்திருப்போம். இந்த சொலமன் மன்னன் தான் யூதர்களின் முதலாவது கோவிலை (Solomon Temple ) கிமு587 இல் கட்டியவன். இக்காலப்பகுதியில் தான் நான் முன்பு கூறியது போல பாபிலோனியர்கள் படையெடுத்து இஸ்ரவேலை அழித்ததும் சொலமன் கோவிலை இடித்ததும் நடந்தது.
இதன்பின்பு அலெக்ஸ்சாண்டரின் வாரிசுகளான கிரேக்கர்மீண்டும் இஸ்ரவேலை கைப்பற்றி 50 ஆண்டுகாலம் ஆண்டபோது இடிக்கபப்ட்ட சொலமன் கோவிலுக்கு மேல் மீண்டுமொரு கோவில் (2nd temple ) கட்டினார்கள். அதைத்தொடர்ந்து நடந்த முக்கியமானசம்பவமான இயேசு பிறந்த கதையையும் சிலுவையில் அறையப்பட்ட வரலாற்றையும் அதில் யூதரின் பங்கையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அண்மையில் இஸ்ரேலுக்கு சென்றபோது இயேசு பிறந்ததாக கருதப்படும் குகையின் மேல் கட்டப்பட்ட Church of the Nativity ஐ தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவில் தற்பொழுது பாலஸ்தீனியர் வசம் உள்ள பெத்லஹெம் என்னும் இடத்தில் உள்ளது. இஸ்ரவேல் - பாலஸ்தீன எல்லைச்சுவர் கடந்து செல்ல வேண்டுமாதலால் எந்த இஸ்ரவேல் யூதர்களும் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை பணயக் கைதிகளாக பிடித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணம் என்று நினைக்கின்றேன்.
இயேசு பிறந்த இடத்தை குறிப்பதற்காக ஒரு வெள்ளி நட்சத்திரம் நிலத்தில் பதிக்கப்பட்டுள்ளது. படம்கீழே.
Kumaravelu Ganesan
27.05.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...