Friday, July 17, 2026

செயற்கை நுண்ணறிவுக் காலத்துக்கேற்ற பல்கலைக்கழகக் கல்வி:

காலாவதியான பழைய பட்டப்படிப்புகளை மறுசீரமைத்து புதிய கற்கைநெறிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம்


ஒரு நாடு தனது பல்கலைக்கழகங்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதே அதன் எதிர்கால பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம், வேலைவாய்ப்பு நிலை, சமூக வளர்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும். பல்கலைக்கழகம் என்பது வெறும் பட்டம் வழங்கும் இடமல்ல. அது ஒரு நாட்டின் அறிவாற்றல், தொழில்நுட்ப திறன், மனிதவளத் தயாரிப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் அடித்தளம்.

இலங்கையில் பல ஆண்டுகளாகப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் பெரும்பாலும் பழைய கட்டமைப்பிலேயே தொடர்கின்றன. சில பாடப்பிரிவுகள் இன்னும் அவசியமானவையாயினும் சில பட்டங்கள் வேலைவாய்ப்பு சந்தையுடன் தொடர்பில்லாதவை. சில பட்டங்கள் பெயரில் நவீனமாகத் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் பழமையானவையாக உள்ளன. சில பட்டங்கள் அதிகளவில் பட்டதாரிகளை உருவாக்குகின்றன; ஆனால் அந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. இதன் விளைவாக பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை இன்றி நிற்கின்றனர், அல்லது தமது படிப்புடன் தொடர்பில்லாத வேலைகளில் சேர வேண்டிய நிலை உருவாகிறது.

இலங்கை போன்ற பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய பிரச்சினை. அரசாங்க வேலைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு பட்டதாரிகளை உருவாக்கும் முறை இனி நிலைத்திருக்க முடியாது. உலகம் Artificial intelligence, robotics, automation, biotechnology, semiconductors, clean energy, digital finance, smart agriculture, medical technology, and data-driven public administration  போன்ற துறைகளுக்கு நகர்கிறது. இதற்கு ஏற்றவாறு இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியும் மாற வேண்டும்.


ஏன் பல காலாவதியான பட்டங்கள்/கற்கைகள் நீக்கப்படவும்  புதிய பட்டங்கள்/கற்கைகள் சேர்க்கப்படவும் வேண்டும்?



"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"! 
இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு ஒரு தனித் தொழில்நுட்பம் மட்டும் அல்ல. அது மருத்துவம், விவசாயம், நிதி, வங்கி, கல்வி, சட்டம், ஊடகம், மொழிபெயர்ப்பு, உற்பத்தி, போக்குவரத்து, சுற்றுலா, பாதுகாப்பு, அரச நிர்வாகம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
முன்னர் ஒரு பட்டதாரிக்கு ஒரு அடிப்படைப் பட்டம் இருந்தால் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது போதாது. இன்றைய வேலைவாய்ப்புச் சந்தை கேட்பது வேறு. பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் திறன், எண்ணிம அறிவு (digital literacy), தரவு கையாள்தல் (data handling), செயற்கை நுண்ணறிவு செயலிகளை (AI tools) பயன்படுத்தும் திறன், தொழில்நுட்பத்தை துறைக்கு ஏற்ப இணைக்கும் திறன், புதிய சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவை அவசியமாகின்றன.
இலங்கையில் பல மாணவர்கள் பட்டம் பெற்ற பின் வேலை தேடும்போது சந்திக்கும் கேள்வி இதுதான்: “இந்தப் பட்டம் வேலைவாய்ப்பு சந்தையில் என்ன மதிப்பு தருகிறது?” இந்தக் கேள்விக்குப் பல கற்கை நெறிகள் தெளிவான பதில் தர முடியவில்லை. அதனால் பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடப்பிரிவுகளை கடுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். (சில செய்கின்றன அல்லது முயற்சிக்கின்றன)
 1️⃣வேலைவாய்ப்பு இல்லாத கற்கை நெறிகள் தொடர்ந்து இயங்கக்கூடாது
ஒரு கற்கை நெறி வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குகிறது. ஆனால் அந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறைவு. அப்படியானால் அந்த கற்கை நெறியை மாற்றாமல் தொடர்ந்து நடத்துவது மாணவர்களுக்கும் நாட்டுக்கும் அநீதி. இலங்கையில் இலவசக் கல்வி என்பது மிகப் பெரிய சமூக முதலீடு. அந்த முதலீடு வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, ஆராய்ச்சி, சமூக சேவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் திரும்பிக் கிடைக்க வேண்டும்.
2️⃣பெயர் நவீனமாக இருந்தாலும் பாடத்திட்டம் பழையதாக இருக்கக்கூடாது
சில பட்டப்படிப்புகள் பெயரில்  நவீனமாகத் தோன்றினாலும் பாடத்திட்டம் பழையதாக இருக்கும். உதாரணமாக “Information” என்ற சொல் இருக்கும் பட்டப்படிப்பு ஒன்று உண்மையில் Data Science, Artificial Intelligence, Software Engineering, Cybersecurity, Cloud Computing, Database Systems போன்ற திறன்களை கற்பிக்காமல், பழைய நிர்வாகப் பாடங்களையே கற்பித்தால் அது மாணவர்களுக்கு உதவாது.
3️⃣ ஒரே மாதிரியான கற்கை நெறிகள் பல பெயர்களில் இயங்கக்கூடாது
சில பல்கலைக்கழகங்களில் Management, Public Management, Business Administration, Social Administration, Development Studies போன்ற பாடப்பிரிவுகள் ஒரேமாதிரியாக இருக்கலாம். அவை தனித்த அடையாளம், தனித்த திறன், தனித்த வேலைவாய்ப்பு பாதை இல்லாமல் இருந்தால் அவற்றை ஒன்றிணைக்க வேண்டும். பல பலவீனமான பட்டப்படிப்புகளுக்குப் பதிலாக சில வலுவான, நவீனமான, வேலைவாய்ப்பு மையப்படுத்தப்பட்ட பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 
4️⃣ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றமடையும் வேலைகளுக்காக பழைய முறையில் மாணவர்களை உருவாக்கக்கக்கூடாது
வழக்கமான மொழிபெயர்ப்பு (Routine translation), அடிப்படை கணக்கியல் (basic accounting), எளிய எழுதுவினைஞர் பணி (simple clerical work), மாதிரி-அடிப்படையிலான வடிவமைப்பு (template-based design), கீழ்நிலை அறிக்கையிடல் (low-level reporting)  , எளிய தரவு உள்ளீடு (simple data entry) , அடிப்படை ஊடகத் தொகுப்பு (basic media editing)  போன்ற பல வேலைகள் ஏற்கனவே நுண்ணறிவு தானியக்கம் (AI automation) மூலம்  மாறிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய பணிகளுக்காக மட்டும் மாணவர்களைப் பயிற்றுவிப்பது எதிர்காலத்திற்குப் பொருத்தமற்றது.
கணினிக்காலத்திற்கு முன்பான 80 களில் (90 களில் கூட) தட்டெழுத்து, சுருக்கெழுத்து கற்றது பலருக்கும் ஞாபகம் இருக்கக்கூடும். 
இதற்கு பதிலாக மாணவர்கள் உயர் திறன்களை (higher-order skills) கற்க வேண்டும்.   விமர்சன சிந்தனை (Critical thinking) , அறநெறி பகுத்தறிவு (ethical reasoning) , துறைசார் அறிவு (domain knowledge), எண்ணிமக் கருவிகள்/செயலிகள் (digital tools), ஆராய்ச்சித் திறன்கள் (research skills), புத்தாக்கம் (innovation), தொழில்முனைவு (entrepreneurship) ஆகியவை அவசியம்.
5️⃣ பழைய பாடங்களை அழிப்பது நோக்கம் அல்ல; அவற்றை நவீனப்படுத்துவதே நோக்கம்
இங்கு முக்கியமான கருத்து ஒன்று தெளிவாக இருக்க வேண்டும். பழைய பாடங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. வரலாறு (History), தத்துவம் (Philosophy), சட்டம் (Law), மொழி (Languages), இலக்கியம் (Literature), சமூகவியல் (Sociology), அரசறிவியல் (Political Science), நுண்கலை (Fine Arts) போன்ற துறைகள் ஒரு சமூகத்திற்கு அவசியமானவை. ஆனால் அவை பழைய முறையில் மட்டும் கற்பிக்கப்படக் கூடாது.
உதாரணமாக, மொழிகளைப் படிக்கும் மாணவர் AI மொழிபெயர்ப்பு செயலிகள் (AI translation tools), சர்வதேச தொடர்பாடல் (international communication), வெளியுறவு/ இராஜதந்திர உறவு (diplomacy), வர்த்தக உறவு (trade relations), சுற்றுலா தொடர்பாடல் (tourism communication), ஊடக பகுப்பாய்வு (media analysis), பிராந்தியக் ஆய்வுகள் (regional studies) ஆகியவற்றையும் கற்க வேண்டும். நுண்கலை படிக்கும் மாணவர் எண்ணிம ஊடகம் (Digital Media), Game Art, Virtual Space Design, Animation Technology, Creative Industries, Copyright Law ஆகியவற்றையும் கற்க வேண்டும். விவசாயம் படிக்கும் மாணவர் Smart Agriculture, Climate Resilient Farming, AgriTech, Soil Data Analysis, Drone Applications ஆகியவற்றையும் கற்க வேண்டும்.
அதாவது, அறிவை நீக்குவது அல்ல; அறிவை எதிர்காலத்திற்குப் பொருத்தமாக மாற்றுவது தான் நோக்கம்.

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உலகின் தற்போதைய தேவைகளுக்கு  தயாராக இருக்கின்றனவா?


ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அதன் பழமை, புகழ், கட்டிடங்கள் அல்லது மாணவர் எண்ணிக்கை மட்டும் தீர்மானிப்பதில்லை. இன்று மிக முக்கியமான கேள்வி இதுதான்:
அந்தப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் (Faculties) மற்றும் துறைகள் (Departments) இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளனவா?
உலகம் இன்று வேகமாக மாறிவருகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), உயிர்மருத்துவ தொழில்நுட்பம் (Biomedical Technology), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology), வணிக பகுப்பாய்வு (Business Analytics), சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environmental Sustainability), ரோபோடிக்ஸ் (Robotics), தானியக்க முறைமைகள் (Automation), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) போன்ற துறைகள் இன்றைய உலகின் மையத் தேவைகளாகிவிட்டன.
இந்தப் பின்னணியில் இலங்கையின் முக்கிய பல்கலைக்கழகங்களின் பீட/துறை அமைப்புகளைப் பார்த்தால், சில முக்கியமான வேறுபாடுகள் தெரிகின்றன.
🔸மிகவும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு: மொரட்டுவை பல்கலைக்கழகம் (University of Moratuwa)
தற்போதைய உலகத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான அமைப்பைக் கொண்ட பல்கலைக்கழகமாக மொரட்டுவை பல்கலைக்கழகம் தெரிகிறது. அங்கு பொறியியல் (Engineering), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), கட்டிடக்கலை (Architecture), வணிகம் (Business), மருத்துவம் (Medicine), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற துறைகள் ஒரே பல்கலைக்கழக சூழலில் இணைந்திருக்கின்றன.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), வணிக பகுப்பாய்வு (Business Analytics), வணிக செயல்முறை மேலாண்மை (Business Process Management), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற துறைகள் மொரட்டுவையின் அமைப்பை நவீன உலகத் தேவைகளுடன் நெருக்கமாக இணைக்கின்றன.
இது வெறும் பழைய பொறியியல் பல்கலைக்கழகமாக இல்லாமல், தொழில், தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம் ஆகியவை சந்திக்கும் இடமாக மாறியுள்ளது.
🔴மற்ற நவீன அமைப்பைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
🔸ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் செய்துள்ளது. கணினியியல் பீடம் (Faculty of Computing), தொழில்நுட்ப பீடம் (Faculty of Technology), பொறியியல் பீடம் (Faculty of Engineering) ஆகியவை அதன் அமைப்பை நவீனப்படுத்துகின்றன. கணினி அறிவியல் (Computer Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), தகவல் முறைமைகள் பொறியியல் (Information Systems Engineering), அறிவு பொறியியல் (Knowledge Engineering), அறிவியல் கணினியியல் (Scientific Computing) போன்ற துறைகள் இன்றைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
🔸சப்பிரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University) கூட ஆச்சரியமான அளவில் நவீனப்படுத்தப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. கணினியியல் (Computing), தொழில்நுட்பம் (Technology), நிலஅளவியல்/புவியியல் தகவல் அறிவியல் (Geomatics), மருத்துவம் (Medicine), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering) போன்ற துறைகள் அங்கு இடம்பெறுகின்றன.
🔸களனி பல்கலைக்கழகமும் (University of Kelaniya) கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் (Faculty of Computing and Technology) மூலம் நவீன துறைகளுக்குள் நுழைந்துள்ளது. பயன்பாட்டு கணினியியல் (Applied Computing), மென்பொருள் பொறியியல் (Software Engineering), கணினி முறைமைகள் பொறியியல் (Computer Systems Engineering) போன்ற துறைகள் அங்கு காணப்படுகின்றன.
🔸 கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo) இலங்கையின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. குறிப்பாக கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலை (University of Colombo School of Computing) அதன் பலமாக உள்ளது. ஆனால், முழு பல்கலைக்கழக அமைப்பில் தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற துறைகள் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் மொரட்டுவை அளவுக்கு தெளிவாக இல்லை.
🔴பீட/துறை அமைப்பின் நவீனத்தன்மை அடிப்படையிலான தரவரிசை 
இது கல்வித் தரவரிசை அல்ல. இது பல்கலைக்கழகங்களின் பீடங்கள் (Faculties), துறைகள் (Departments), பாடநெறிகள் (Degree Programs), மற்றும் அவை இன்றைய உலகத் தேவைகளுடன் எவ்வளவு பொருந்துகின்றன என்பதைக் காட்டும் ஒரு அமைப்பு சார்ந்த மதிப்பீடு.
1. மொரட்டுவை பல்கலைக்கழகம் (University of Moratuwa) — மிகவும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு
2. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura)
3. சபரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University)
4. களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya)
5. கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)
6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Ruhuna / University of Jaffna)/ ருஹுணு பல்கலைக்கழகம் 
7. ரஜரட்ட பல்கலைக்கழகம் / ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் / வயம்ப பல்கலைக்கழகம் (Rajarata University / Uva Wellassa University / Wayamba University)
8. பேராதனை பல்கலைக்கழகம் (University of Peradeniya) — மிகவும் பாரம்பரியமான அமைப்பு
இந்த தரவரிசை பல்கலைக்கழகங்களின் மொத்த கல்வித் தரத்தைக் குறிக்கவில்லை. இது அவற்றின் அமைப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), தானியக்கம் (Automation), சுகாதார தொழில்நுட்பம் (Health Technology), பொறியியல் பயன்பாடுகள் (Applied Engineering), வணிக பகுப்பாய்வு (Business Analytics), தொழில்முனைவு (Entrepreneurship), மற்றும் தொழில் இணைப்பு (Industry Linkage) போன்ற இன்றைய தேவைகளுடன் எவ்வளவு பொருந்துகிறது என்பதையே பார்க்கிறது.
மிகவும் பாரம்பரியமான அமைப்பு: பேராதனை பல்கலைக்கழகம் (University of Peradeniya)
பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் மிகப் புகழ்பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று. அதன் ஆசிரியர்கள், ஆராய்ச்சிகள், பழைய மாணவர்கள், கல்வி மரபு ஆகியவை மிக உயர்ந்தவை. ஆனால், பீட மற்றும் துறை அமைப்பைப் பார்த்தால், அது இன்னும் பெரும்பாலும் பாரம்பரிய அமைப்பிலேயே உள்ளது.
அங்கு விவசாயம் (Agriculture), கலை (Arts), மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), அறிவியல் (Science), பல் மருத்துவம் (Dental Science), மிருக மருத்துவம் (Veterinary Medicine), மேலாண்மை (Management), துணை சுகாதார அறிவியல் (Allied Health Sciences) போன்ற பாரம்பரிய பீடங்கள் வலுவாக உள்ளன.
ஆனால் தனியான கணினியியல் பீடம் (Faculty of Computing), தகவல் தொழில்நுட்ப பீடம் (Faculty of Information Technology), செயற்கை நுண்ணறிவு துறை (Artificial Intelligence Department), தரவு அறிவியல் துறை (Data Science Department), தொழில்நுட்ப பீடம் (Faculty of Technology), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற தெளிவான நவீன அமைப்புகள் இன்னும் போதுமான அளவில் தெரியவில்லை.
இதனால் பேராதனை பல்கலைக்கழகம் கல்வித் தரத்தில் குறைவானது என்று அர்த்தமல்ல. ஆனால் அதன் அமைப்பு உலகம் இன்று நகரும் திசையை ஒப்பிடும்போது மெதுவாகப் புதுப்பிக்கப்படுகிறது என்று சொல்லலாம்.
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் எனது Masers in Materials Science பட்டத்தை 30 வருடங்களுக்கும் முன்பாக பெற்றேன். இன்றும் அதைப்போன்றதொரு அழகான புவியியல் தோற்றமுடைய ஒரு பல்கலைக்கழகத்தை நான் வேறெங்கும் காணவில்லை. 
🔴இது ஏன் முக்கியம்?
இன்றைய மாணவர்கள் வெறும் பட்டம் பெறுவதற்காக மட்டும் பல்கலைக்கழகத்துக்கு போவதில்லை. அவர்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, தொழில்முனைவு (Entrepreneurship), புதுமை (Innovation), ஆராய்ச்சி (Research), தொழில் இணைப்பு (Industry Linkage), உலகளாவிய போட்டித்திறன் (Global Competitiveness) ஆகியவற்றுக்காக படிக்கிறார்கள்.
எனவே பல்கலைக்கழகங்கள் இன்னும் பழைய பீட அமைப்புகளிலேயே நின்றுவிட்டால், மாணவர்கள் உலக சந்தையில் பின்தங்கிவிடுவார்கள்.
🔴  இலங்கைக்கு தேவையான மாற்றங்கள்
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பின்வரும் துறைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்:
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), சைபர் பாதுகாப்பு (Cybersecurity), உயிர்மருத்துவ பொறியியல் (Biomedical Engineering), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy), காலநிலை அறிவியல் (Climate Science), உணவு தொழில்நுட்பம் (Food Technology), ரோபோடிக்ஸ் (Robotics), தானியக்க முறைமைகள் (Automation), வணிக பகுப்பாய்வு (Business Analytics), தொழில்முனைவு (Entrepreneurship) ஆகியவை இன்றைய உலகின் அடிப்படைத் தேவைகளாகிவிட்டன.
🔴முடிவாக
இலங்கையில் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்பதற்காக மட்டும் அது மிக நவீனமானது ஆகிவிடாது. அதேபோல் புதிய பல்கலைக்கழகம் என்பதற்காக மட்டும் அது தரமற்றது என்றும் சொல்ல முடியாது.
பீடங்கள் (Faculties), துறைகள் (Departments), பாடநெறிகள் (Degree Programs), தொழில் இணைப்புகள் (Industry Linkages), ஆராய்ச்சி மையங்கள் (Research Centres) ஆகியவற்றின் அமைப்பை வைத்து பார்த்தால், மொரட்டுவை பல்கலைக்கழகம் தற்போதைய உலகத் தேவைகளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர, சபரகமுவ, களனி, கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்களும் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளன.
ஆனால் பேராதனை போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் தங்கள் புகழைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், புதிய உலகத் தேவைகளுக்கு ஏற்ப பீட மற்றும் துறை அமைப்பை வேகமாகப் புதுப்பிக்க வேண்டும்.
இது பல்கலைக்கழகங்களுக்கான விமர்சனம் அல்ல. இது மாணவர்களின் எதிர்காலத்துக்கான அவசரமான கல்வி மறுசீரமைப்பு வேண்டுகோள்.

-Dr Kumar Ganesh 


Thursday, June 26, 2025

ஐ.நா ஆணையாளரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு! UN High Commissioner Press Conference Sri Lanka. - YouTube

கூகிள் மொழிபெயர்ப்பு:

 பத்திரிகையாளர் சந்திப்பு உரை (செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்):

நான் இலங்கையில் பல நாட்கள் செலவழித்துள்ளேன், மாற்றம் குறித்த உண்மையான உத்வேகத்தை நான் உணர்கிறேன். எனது விஜயத்தின் போது, அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் முதல் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் வரை பல்வேறு தரப்பினருடன் மனித உரிமைகள் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தேன்.

இந்த கலந்துரையாடல்கள், சவால்களை மட்டுமல்லாமல், இந்த வளமான, பன்முகத்தன்மை கொண்ட, மற்றும் பிரமிக்க வைக்கும் அழகான நாட்டிற்கான எதிர்கால வாய்ப்புகளையும் நான் நன்கு புரிந்துகொள்ள உதவின.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் நான் அதிபரைச் சந்தித்தேன், இந்த வார தொடக்கத்தில் நான் பிரதமரை, மற்ற அமைச்சர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் அரசியல் ரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தேன்.

எங்கள் கலந்துரையாடல்கள் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான வெளிப்படைத்தன்மையைப் பிரதிபலித்தன. கொழும்பில் நான் தலைமை நீதிபதி, சட்டமா அதிபர், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் - என உண்மையிலேயே பரந்த அளவிலான பங்குதாரர்களைச் சந்தித்தேன்.

முழுக்க, நான் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் மதிப்புமிக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டேன் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களிடமிருந்து மனதை உருக வைக்கும் சாட்சியங்களைக் கேட்டேன்.

மன்னாரில் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட புதைகுழிக்கு எனது நேற்று விஜயம், கடந்த காலம் பல இலங்கையர்களை எவ்வாறு தொடர்ந்து துன்புறுத்துகிறது என்பதற்கான ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகும், ஒரு அன்பானவரைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையுடன் தேடும் மற்றும் துயரப்படும் ஒரு குடும்பத்தைச் சந்தித்த அந்த இடத்திற்கான அனுமதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆயிரக்கணக்கானோரைப் போலவே, அவர்களும் பல தசாப்தங்களாகத் தெரியாமல் இருந்ததற்கு ஒரு முடிவைத் தேடுகிறார்கள்.

காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களுக்கான உண்மை மற்றும் நீதிக்காக பாதிக்கப்பட்ட குழுக்கள் தொடர்ந்து வாதிடுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு நான் விஜயம் செய்தபோது பல தாய்மார்களிடமிருந்தும், அத்துடன் தெற்கில் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் நான் கேட்டேன். தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் 1989 இல் காணாமல் போனவர், இன்றும் அவர் நகரங்கள் தோறும் தேடிச் செல்வதாக இன்று காலைதான் என்னிடம் கூறினார். "சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணீர் ஒரே மாதிரியானது" என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நான் கண்டது போல, பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான இடம் வளர்ந்து வருவதைக் கண்டு நான் உற்சாகமடைகிறேன். இருப்பினும், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான பழைய கண்காணிப்பு முறைகள் தொடர்வதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

சிவில் சமூகம் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேம்பாட்டிலும் ஒரு முக்கிய பங்காளியாகும் - குறிப்பாக வளங்கள் குறைவாக இருக்கும் போது. கடந்த காலத்தின் மரபு புதிய அரசாங்கத்திற்கு ஒரு கடினமான சவாலாக உள்ளது.

அதிபர் அண்மைய மாதங்களில் ஆற்றிய உரைகளைப் பின்தொடர்ந்து, அனைத்து சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் பகிரப்பட்ட வலி மற்றும் துயரத்தை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது எனக்கு ஊக்கமளிக்கிறது.

இந்த உத்வேகத்தை மேலும் வளர்த்து, அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய அதை உறுதியான விளைவுகளாக மாற்றுவது முக்கியம்.

அங்கீகாரம் மற்றும் உண்மை பேசுதல் ஆகியவை குணப்படுத்துதல் மற்றும் ஒரு முடிவை நோக்கிய முக்கியமான படிகள் - நீதி, இழப்பீடுகள், மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்கள் போலவே.

பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையைப் பெறும் நம்பகமான உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகளுடன் முன்னேற இலங்கை போராடி வருகிறது. இதனால்தான் பல இலங்கையர்கள் நீதிக்காக சர்வதேச சமூகத்தை நாடியுள்ளனர்.

இறுதியில், பொறுப்பு அரசுடன் உள்ளது, மேலும் இந்த செயல்முறை தேசிய ரீதியாக சொந்தமானதாக இருக்க வேண்டியது மிக முக்கியம் - சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்யப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும். எனது அலுவலகம் தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாத்தல், மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நோக்கத்திற்காக ஒரு பிரத்யேக திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது இலங்கை மற்றும் உலகளவில் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் உட்பட சில முக்கியமான வழக்குகளில் அரசாங்கம் விசாரணைகளையும் வழக்குத் தொடர்தல்களையும் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் முன்னேற்றத்தை நான் ஊக்குவிக்கிறேன். சில நீண்டகால மற்றும் பிரதிநிதித்துவ வழக்குகளில் நீதியைப் பெறுவது ஒரு சக்திவாய்ந்த, demonstrative மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் விளைவைக் கொண்டிருக்கும்.

இன்று சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவான சர்வதேச தினமாகும். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை மோதலின் போது பரவலாக இருந்தன, மேலும் இலங்கை சட்டத்தின் கீழ் சித்திரவதை குற்றமாக்கப்பட்டுள்ள போதிலும் இன்றும் கூட அறிவிக்கப்படுகின்றன. புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.

எனவே, பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தம் மிக முக்கியம். இந்த முறையான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நிறைய செய்யப்பட வேண்டும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நீண்டகாலப் பணியை நான் அங்கீகரிக்கிறேன், அத்துடன் எங்களுக்கும் ஒரு வலுவான கூட்டாண்மை உள்ளது. குறிப்பாக காவல் துறையுடன் காவலில் உள்ள மரணங்கள் குறித்து இந்த ஆணைக்குழு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.

ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் ஒரு மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் நான் புரிந்துகொள்கிறேன். அது விரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் நம்புகிறேன்.

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) பயன்படுத்துவதில் ஒரு தடையை நான் கோருகிறேன், மேலும் நீண்டகால PTA தடுப்புக் காவல் மற்றும் கைதிகளை விரைவாக மறுபரிசீலனை செய்து விடுவிக்க வலியுறுத்துகிறேன். இணைய பாதுகாப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் பெண்கள் மற்றும் பாலின உரிமைகள் முன்னேற்றத்தையும், தொடர்ச்சியான சவால்களையும் கண்டுள்ளன. நவம்பர் 2024 தேர்தல்களில், 22 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், பெண் பங்கேற்பு 9.8% ஆக இரு மடங்கானது. இது ஒரு முன்னேற்றம், ஆனால் இன்னும் நிறைய தேவை என்பது தெளிவாகிறது. அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலும், பணியிடத்திலும் பெண்கள் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். ஒரே வேலைக்கு அவர்கள் ஆண்களை விட 27% குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். பொது வாழ்வில் தாம் இன்னும் வலிமையாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் குறிப்பிட்ட கவலைகள் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும் என்றும் பல பெண்கள் என்னிடம் தெரிவித்தனர்.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டமும் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க திருத்தப்பட வேண்டும்.

2022 இல், இலங்கையர்கள் - குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் - வாழும் நினைவில் இல்லாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ஏற்பட்ட தீவிர கஷ்டங்கள் குறித்த கணக்குகளைக் கேட்டு நான் மன உளைச்சலடைந்தேன். நிலம், வீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உட்பட அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

2022 அரகலய போராட்டங்கள் ஊழல் மற்றும் பொருளாதார தவறான நிர்வாக வழக்குகளில் பொறுப்புக்கூறலுக்கான பிரபலமான கோரிக்கைகளைப் பிரதிபலித்தன. இந்தத் துறையில் அரசாங்கத்தின் முயற்சிகளால் நான் உற்சாகமடைகிறேன், மேலும் இந்த நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் அலை தொடரும் என்று நம்புகிறேன். இது ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் - அது ஒரு "மனித உரிமைகள் பொருளாதாரத்தை" தழுவுகிறது. அதாவது, சமூகப் பிரச்சினைகளின் மூல காரணங்களை (சமத்துவமின்மை, அநீதி, மற்றும் கடந்த காலத்தின் நிலையற்ற நடைமுறைகள்) சமாளிக்க பொருளாதாரத்திற்கு அப்பால் செல்வதாகும்.

மதத் தலைவர்களுடனான எனது சந்திப்புகளில், மனித உரிமைகளையும் மதங்களுக்கு இடையேயான புரிதலையும் மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்கை நான் வலியுறுத்தினேன் - ஒரு அமைதியான மற்றும் நெறிமுறை சமூகத்தின் முக்கிய கூறுகள். வெறுப்புப் பேச்சு மற்றும் மதத் தூண்டுதல் பெருகிய முறையில் பொதுவானதாகி வரும் உலகில், இலங்கையின் மதத் தலைவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இதை ஒழிக்க உதவுமாறு நான் வலியுறுத்துகிறேன்.

புதிய அரசாங்கம் தேசிய ஒற்றுமையை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. விரைவான வெற்றிகளும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு முக்கியம். எனது அலுவலகம் தொடர்ந்து உதவ தயாராக உள்ளது.

நான் இலங்கையை ஒரு வலுவான நம்பிக்கையுடன் விட்டுச் செல்கிறேன். அரசாங்கத்திலும் சமூகத்திலும், இனம், மதம், மொழி, சாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றிய அடையாள அரசியலுக்கு அப்பால் செல்ல ஒரு உண்மையான விருப்பத்தை நான் உணர்கிறேன்.

போர், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் மனித உரிமை மீறல்கள் சாதாரணமாகி வரும் உலகில், இலங்கை மீள்தன்மை மற்றும் அமைதியின் கதையாக மாற முடியும் என்பது எனது நம்பிக்கை. பன்முகத்தன்மை ஒரு பலமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடம். அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்:

இப்போது நாம் கேள்விகளை எடுத்துக்கொள்வோம். தயவுசெய்து உங்கள் பெயர் மற்றும் அமைப்பை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு இறுக்கமான அட்டவணையில் இயங்குவதால், ஒரே நேரத்தில் மூன்று கேள்விகளை எடுத்துக்கொள்வோம்.

கேள்வி 1:

பத்திரிகையாளர்:

எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவதாக, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் OHCHR ஆல் தயாரிக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை ஆதரிக்கவில்லை. இந்த மீறல்களை நிவர்த்தி செய்ய உள்நாட்டு பொறிமுறைக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராக, தற்போதைய உள்நாட்டு பொறிமுறைகளில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா, அல்லது சர்வதேச ஈடுபாடு இன்னும் அவசியமா என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இரண்டாவதாக, இலங்கை பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது, அவற்றில் மிகக் கடுமையானது அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி. சுகாதாரம், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அடிப்படை மனித உரிமைகள் குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்டன. இந்த கடந்தகால நிகழ்வுகளை நிவர்த்தி செய்வதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள், மேலும் எதிர்காலத்திற்கான உங்கள் பரிந்துரைகள் என்ன?

 

கேள்வி 2:

பத்திரிகையாளர் (ஷினி வாசன், தி இந்து, இந்தியா):

சில நாட்களுக்கு முன்பு கொழும்பில், சர்வதேச சட்டத்தின் நம்பகத்தன்மை அதிர்ச்சியூட்டும் மீறல்களாலும், அரசுகளால் சட்டத்திற்கான பலவீனமான, சீரற்ற வக்காலத்துகளாலும் அரிக்கப்படுவதாக நீங்கள் கூறினீர்கள். காசாவில் உணவு உதவிக்காகக் காத்திருந்தவர்கள் உட்பட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொல்லும்போது சக்திவாய்ந்த நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். இதைக் கருத்தில் கொண்டு, ஒரு பலவீனமான உள்நாட்டு அமைப்புக்கும், அதிகார அடிப்படையிலானதாகத் தோன்றும் சர்வதேச ஒழுங்கிற்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கை போன்ற சிறிய நாடுகளுடன் உங்கள் அலுவலகம் எவ்வாறு ஈடுபடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

 

கேள்வி 3:

பத்திரிகையாளர்:

சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, காசாவில் நடப்பவற்றுக்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டையும் கடுமையாக கண்டித்தீர்கள். அதன் பின்னர், தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன?

 

உயர் ஸ்தானிகரின் பதில்:

நன்றி. உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் குறித்த முதல் கேள்வியுடன் நான் தொடங்குகிறேன்.

உள்நாட்டு வழிமுறைகள் நம்பகமானதாகவும் செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியம். அரசாங்கத்துடனான எனது கலந்துரையாடல்களின் போது, சுதந்திரமான வழக்கறிஞர்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நம்பக்கூடிய பொறுப்புக்கூறல் அமைப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நாங்கள் பேசினோம். சர்வதேச சிறந்த நடைமுறைகளால் இந்த அமைப்புகள் தகவலறிந்திருப்பதை உறுதிப்படுத்த உதவுவதற்கு நான் ஆதரவை வழங்கினேன். நீதி பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டதாகவும், உயிர் பிழைத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். இது இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்முறை.

மனித உரிமைகள், இலங்கையிலும் மற்ற இடங்களிலும், எப்போதும் சர்வதேச அக்கறைக்குரிய ஒரு விஷயமாகும்.

பொருளாதார நெருக்கடி குறித்த இரண்டாவது கேள்விக்கு: ஆம், 2022 ஒரு கடினமான ஆண்டாக இருந்தது. மனித உரிமைகளில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாமல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் தேசிய பொருளாதார அமைப்புகளின் அடித்தளமாக உள்ளன. நிதி மற்றும் பொருளாதார முடிவுகள் ஒரு நாட்டின் மனித உரிமை கடமைகளுக்கு இணங்க வேண்டும்.

இதனால்தான் நாங்கள் ஒரு மனித உரிமைகள் பொருளாதாரத்தின் கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் - இது உள்நாட்டு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதுடன், சர்வதேச நிதி அமைப்பில் உள்ள உலகளாவிய சமத்துவமின்மையையும் அங்கீகரிக்கிறது. உதாரணமாக, சிக்கன நடவடிக்கைகள் பெரும்பாலும் மனித உரிமை தாக்கங்களை புறக்கணிக்கின்றன. சர்வதேச நிதி அமைப்புகள் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் கட்டப்படும் ஒரு எதிர்காலத்தை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம்.

சிறிய நாடுகள் குறித்த உங்கள் கேள்விக்கு - நான் ஆஸ்திரியாவிலிருந்து வருகிறேன், அது வெறும் 8 மில்லியன் மக்கள் கொண்ட ஒரு நாடு. இலங்கையில் 22 மில்லியன் மக்கள் உள்ளனர். சிறிய நாடுகளாக, நமது மிகப்பெரிய பாதுகாப்பு சர்வதேச சட்டம். இது சக்திவாய்ந்த நாடுகளும் பின்பற்ற வேண்டிய விதிகளை உருவாக்குகிறது. ஐக்கிய நாடுகள் சபை - மற்றும் பலதரப்புவாதம் - சமத்துவத்தை உறுதி செய்கிறது. சர்வதேச சட்டம் இல்லாமல், உலகளாவிய ஒத்துழைப்பு சரிந்துவிடும். "வலிமையே சரி" என்ற நிலைக்கு திரும்புவதை நாம் எதிர்க்க வேண்டும். சர்வதேச சட்டம் அமைதி, வர்த்தகம், பயணம் மற்றும் மனித மாண்புக்கு மிக முக்கியம்.

காசா தொடர்பாக, நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஜூன் 25 ஆம் தேதி நிலவரப்படி, காசாவில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது 598 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். உணவு அல்லது மருந்துக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது வருத்தமளிக்கிறது. இராணுவமயமாக்கப்பட்ட உதவி விநியோக முறைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. நமக்குத் தேவையானது ஒரு போர் நிறுத்தம், பிணையாளிகளை விடுவித்தல், மற்றும் காசாவிற்கு மனிதாபிமான நிவாரணத்தை வழங்குவதற்கான முழுமையான முயற்சி.

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்:

இப்போது அடுத்த மூன்று கேள்விகளை எடுத்துக்கொள்வோம்.

 

கேள்வி 4:

பத்திரிகையாளர்:

எனக்கு இரண்டு குறுகிய கேள்விகள் உள்ளன. முதலாவதாக, பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) குறித்து - அரசாங்கம் அதை ரத்து செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறினாலும், சமீபத்திய மாதங்களில் மேலும் கைதுகள் நடந்துள்ளன. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

இரண்டாவதாக, காவல்துறை சீர்திருத்தம் அவசியம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். எந்த வகையான சீர்திருத்தங்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதை விரிவாக விளக்க முடியுமா?

 

கேள்வி 5:

பத்திரிகையாளர் (சண்டே டைம்ஸ்):

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய அதிகாரம் போன்ற சர்வதேச வழிமுறைகள் இங்கு ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு உண்மையாக பங்களிக்க முடியும் என்று இலங்கையர்கள் ஏன் நம்ப வேண்டும்?

மேலும், உங்கள் 2024 அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சொத்து முடக்கம் மற்றும் பிற தடைகளை நீங்கள் பரிந்துரைத்தீர்கள். உங்கள் அடுத்த அறிக்கையிலும் இதேபோன்ற பரிந்துரைகளை நீங்கள் செய்யப் போகிறீர்களா?

 

கேள்வி 6:

பத்திரிகையாளர் (இந்திவாரி, ஆதனா):

விசாரணைகளை உண்மையான முன்னேற்றமாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் குறிப்பிட்ட படிகளை நீங்கள் விவாதித்தீர்களா? காலக்கெடுவுடன் கூடிய அளவுகோல்களை நீங்கள் முன்மொழிந்தீர்களா? அரசாங்கத்திற்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இடையிலான ஈடுபாட்டின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும்?

 

உயர் ஸ்தானிகரின் பதில்:

ஆம், நாங்கள் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) குறித்து விவாதித்தோம். எங்கள் பார்வையில், அது முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அந்த திசையில் சில தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எங்கள் நிலைப்பாடு மாறாமல் உள்ளது, இது எங்கள் அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக உள்ளது.

காவல்துறை சீர்திருத்தம் குறித்து: சித்திரவதை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. பல நாடுகள் இதை சமாளிக்க போராடுகின்றன, ஆனால் இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். சுதந்திரமான புகார் வழிமுறைகள் மிக முக்கியம். மக்கள் பாதுகாப்பாக முன்வர வேண்டும் என்று உணர வேண்டும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்டது, மேலும் அது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் - குறிப்பாக பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் மற்றும் காவல்துறை பொறுப்புக்கூறலுக்கு ஆதரவளிக்க.

சர்வதேச வழிமுறைகள் குறித்து: உள்நாட்டு பொறுப்புக்கூறல் அடித்தளமாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் உள்நாட்டு முயற்சிகள் பற்றாக்குறையாக இருக்கும்போது, சர்வதேச ஆதரவும் அழுத்தமும் பூர்த்தி செய்யவும் உதவவும் முடியும்.

நாங்கள் இன்னும் வரவிருக்கும் அறிக்கையைத் தயாரித்து வருகிறோம், எனவே அது என்ன குறிப்பிட்ட பரிந்துரைகளை உள்ளடக்கும் என்று என்னால் கூற முடியாது. ஆனால் இந்த விஜயம் மிக முக்கியமானது. நான் நேரடியாகக் கவனிக்கவும், பல்வேறு தரப்பினருடன் ஈடுபடவும், நிலைமையை மதிப்பீடு செய்யவும் முடிந்தது.

நாங்கள் பல அடையாள வழக்குகளை விவாதித்தோம். அவற்றை நாங்கள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம், மேலும் முன்னேற்றம் அடைவது முக்கியம். இந்த வழக்குகள் அரசாங்க அதிகாரிகளுடனான எங்கள் உரையாடலின் ஒரு பகுதியாக இருந்தன, மேலும் நாங்கள் அவற்றைப் பின்தொடர்வோம்.

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்:

இவ்வளவுதான் எங்களுக்கு நேரம் உள்ளது. உங்கள் வருகைக்கு நாங்கள் நன்றி
 




Thursday, April 24, 2025

உயிர்த்தஞாயிறு தாக்குதல் (2019)- வெளிவந்த-வராத உண்மைகள் - பகுதி-2

🕰️ 2019 உயிர்த்தஞாயிறு  தாக்குதல் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் வரிசை - Timeline

படம்: LankaWeb 

📌 2018 நவம்பர் 28

🔸 வவுனதீவு காவல் துறையினர் இருவர் கொலை 

ஆரம்பத்தில் இந்தக் கொலைக்கு முன்னாள் விடுதலை *லி உறுப்பினர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணைகளில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) உறுப்பினர்கள், குறிப்பாக சஹ்ரான் ஹாஷிம், இந்தக் கொலைக்குப் பொறுப்பாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

📌 2018 டிசம்பர் – 2019 ஏப்ரல்

🔸 வெடிகுண்டுப் பொருட்கள் வாங்கல்

சஹ்ரான் தலைமையிலான NTJ குழுவினர் 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிமருந்துகளை ஒரு உள்ளூர் வர்த்தகர் மூலம் வாங்கி பல பாதுகாப்பு இல்லங்களில் சேமிக்கப்பட்டு தாக்குதலுக்காக தயார் செய்யப்பட்டது.

📌 2019 மார்ச்

🔸 இந்திய ரோவிலிருந்து பல்வேறு எச்சரிக்கைகள் இலங்கை புலனாய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டது

இந்திய புலனாய்வு அமைப்பு (RAW) இலங்கைக்கு தாக்குதல் திட்டம், தாக்குபொருட்கள் மற்றும் இலக்குகள் தொடர்பான தகவல்களை அனுப்பியது.

ஆனால் இலங்கை அரசு மற்றும் புலனாய்வுத் துறைகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

📌 2019 ஏப்ரல் 16–19

🔸 இறுதி திட்டமிடல் கூட்டங்கள்

தற்கொலைப்படை உறுப்பினர்கள் இறுதி கூட்டங்களை நடத்தினர். தாகுதல் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு வெடிகுண்டுகள் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.

📌 2019 ஏப்ரல் 21 — உயிர்த்த ஞாயிறு (Easter Sunday)

🔴 ஒரே நேரத்தில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்வுகள்:

காலை 8:45 – புனித அந்தோனியார் தேவாலயம், கொழும்பு.

8:47 – Kingsbury ஹோட்டல்.

8:47 – புனித செபாஸ்தியார் தேவாலயம்,  நீர்கொழ்ம்பு.

8:50 – Cinnamon Grand ஹோட்டல்.

8:54 – Shangri-La ஹோட்டல்.

9:05 – சியோன் தேவாலயம், மட்டக்களப்பு.

மாலை 1:20 – New Tropical Inn, தெஹிவளை (Taj Samudra-வில் வெடிக்க தவறிய குண்டு).

📍 உயிரிழந்தோர்: 270-க்கும் மேற்பட்டோர் (5 அமெரிக்கர்கள் உட்பட 50 வெளி நாட்டவர்), 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

📌 2019 ஏப்ரல் 21 (மாலை)

🔸 தெமட்டகொட குண்டு வெடிப்பில் குடும்பத்துடன் பாத்திமா ஜிஃப்ரி தற்கொலை

போலீசார் வீட்டில் சோதனை நடத்தியபோது  இல்ஹாம் இப்ராஹிமின் மனைவி பாத்திமா ஜிஃப்ரி, தன்னையும் மூன்று பிள்ளைகளைகள் மற்றும் 3 STF அதிகாரிகளை கொன்றுகொண்டார். 

📌 2019 ஏப்ரல் 26

🔸 சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் (safe house) தாக்குதல்

இராணுவம் சஹ்ரான் ஹாஷிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் உட்பட பல NTJ உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது.

📌 2019–2021

🔸 கைது மற்றும் விசாரணைகள்

முக்கிய NTJ உறுப்பினர்கள் நவ்பார், மில்ஹான், ரிஸ்கான், மற்றும் வெடிகுண்டு வழங்கியவர் M.M.M.H.ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி விசாரணைக் குழு (PCoI) தாக்குதலுக்கு முன்னர் தகவல்களை புறக்கணித்தது குறித்து அதிகாரிகளை குற்றம் சாட்டியது.

📌 2023 செப்டம்பர்

🔸 Channel 4 ஆவணப்படம் – புலனாய்வுத் துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்

முன்னாள் TMVP ஊடக செயலாளர் அசாத் மௌலானா NTJ மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் இடையிலான சந்திப்புகள் நடந்ததாகக் கூறினார்.

📌 2024–2025

🔸 தொடரும் விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள்

பிள்ளையான் மற்றும் அவரது முன்னாள் டிரைவர் ஹுஷைன் /குகன் உள்ளிட்டோர் மீது புதிய விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் TRO உறுப்பினர்கள்  காணாமல் போனது உள்ளிட்ட பழைய வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

பகுதி -3: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்களாக சொல்லப்படுபவற்றின் தர்க்கரீதியான பகுப்பாய்வு. 

உயிர்த்தஞாயிறு தாக்குதல்- வெளிவந்த-வராத உண்மைகள் - பகுதி-1


சதிக்கோட்பாடுகளுக்கப்பால் 220 இலங்கையரையும் 50 வெளிநாட்டவரையும் பலிகொண்டதும் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயத்துக்குள்ளாகவும் காரணமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் எப்படி நடைபெற்றது, யாரெல்லாம் பங்குபற்றினர் என்று ஆதாரபூர்மான ஆய்வு ஒன்றை செய்துகொண்டிருக்கின்றேன். அதன் முதற்பகுதி இது. இக்குண்டுத்தாக்குதலில் பங்கு பற்றிய முக்கியமானவர்களின் பெயர்கள் கீழே தந்துள்ளேன். இதில் மிக முக்கிய பங்குதாரர்களான நௌஃபர், மில்ஹான், ரிஸ்கான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். இவர்களின் பங்களிப்பை சுருக்கமாக இப்பதிவில் பார்ப்போம். 

1.சஹ்ரான் ஹாஷிம் -(சஹ்ரான்)- இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவன்.  ஷாங்கிரிலாவில் தற்கொலை குண்டுதாரியாகி உயிரழந்து விட்டார்.
2.முகமது நௌபர் (நௌஃபர்)- இரண்டாம் நிலை, ஊடகம் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், வெடிபொருள் பயிற்றுவிப்பாளர் - தற்போது சிறையில் உள்ளார். 
 3.அஹமட் மில்ஹான்(மில்ஹான்)- பயிற்சியாளர், இணை சதிகாரர், துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்- தற்போது சிறையில் உள்ளார்
4.மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்(ரிஸ்கான்)- இரகசிய முகாம் வீடு வாங்கியவர், வெடிபொருட்கள் வாங்கியவரும் அவற்றை வினியோகித்தவரும்.- தற்போது சிறையில் உள்ளார் 
5அஹமட் முஅத் அலாவுதீன் (முஆத்)- புனித அந்தோணியார் ஆலயத்தில் தற்கொலை குண்டுதாரி.
6.முகமது ஆசாம் முகமது முபாரக் (முபாரக்)- கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
7.ஆச்சி முஹம்மது ஹஸ்துன் (ஹஸ்துன்)- நீர்கொழும்பு செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாரி, வெடிபொருள் நிபுணர். புலஸ்தினி/ சஹ்ராவின் கணவர்.
8.முகமது இப்ராஹிம் இன்ஷாப் அகமது (இன்ஷாஃப்)- சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி
9.இல்ஹாம் முகமது முகமது இப்ராஹிம் (இல்ஹாம்)-  ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி, ISIS நிதியாளர். 
10.அப்துல் லத்தீப் ஜமீல் முகமது (லத்தீஃப்) - தாஜ் சமுத்ராவில் தோல்வியுற்ற குண்டிற்குரியவர்.  பின்னர் நியூ டிராபிகல் இன்னில் வெடிக்க வைத்ததில் இறந்தவர். 
11.முகமது நாசர் முகமது ஆசாத் (ஆசாத்)- மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாரி. 
12.பாத்திமா முகமது ஜிஃப்ரி(ஜிஃப்ரி)- இல்ஹாமின் மனைவி, தெமட்டகொடையில் IED ஐ வெடிக்கச் செய்து, தன்னையும், 3 குழந்தைகளையும் மற்றும் STF அதிகாரிகளையும் கொன்றவர்.
13.புலஸ்தினி ராஜேந்திரன்/ சாஹ்ரா - ஈஸ்டர் குண்டு வெடிப்பின் ஒரு வாரத்தின் பின்பாக சாய்ந்தமருது இரகசிய மறைவிட முற்றுகையின்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. அவர் உயிர்தப்பி இந்தியா சென்றுவிட்டதாக ஒரு வதந்தியும் உண்டு. 
14. எம்.எம்.எம்.எச்- சஹ்ரானுக்கு 1,900 டெட்டனேட்டர்கள் மற்றும் 1,300 வாட்டர் ஜெல் வெடிபொருட்கள் வழங்கிய ஒரு கொழும்பு வர்த்தகர். தற்போது சிறையில்/பிணையில்(?)
அடுத்த பகுதியில் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் தொடர் நிகழ்வுகளையும் வெளிவராத உண்மைகளையும்   பார்ப்போம்.  -Kumaravelu Ganesan

Tuesday, March 18, 2025

சுனிதா ரிட்டேர்ண்ஸ்


நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி "புட்ச்" வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட எதிர்பாராத விதமான காலதாமததத்திற்கு பின்பு நாளை பூமிக்குத் திரும்ப உள்ளனர். ஏற்கனவே புறப்பட்டு விட்டனர். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்ட பயணம் ஏறக்குறைய 9 மாதத்திற்கு பின்பாக முடிவுக்கு வருகின்றது. 

சுனிதா வில்லியத்தையும் அவரது குழுவையும் முந்தைய முட்*ள் ஜனாதிபதி பைடன் அந்தரிக்க விட்டுவிட்டுவிட்டார், நான் தான் மீட்டுள்ளேன் என்று இந்நாள் ஜனாதிபதி ட்றம்ப் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் கூறியுள்ளது உண்மையா என்று பார்ப்போம். 



சர்வதேச விண்வெளி நிலையம் (ISS): ஒரு கூட்டு சுற்றுப்பாதை ஆய்வகம்

ISS என்பது அமெரிக்கா (NASA), ரஷ்யா (Roscosmos), ஜப்பான் (JAXA), ஐரோப்பா (ESA) மற்றும் கனடா (CSA) ஆகியவற்றின் விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றும், ISS ஆனது ஒரு நுண்புவியீர்ப்பு மற்றும் விண்வெளி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது, அங்கு பூமியில் சாத்தியமில்லாத அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறன. 1998 இல் அதன் முதல் பாகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து இயங்கி வருவதுடன் அங்கு தொடர்ந்து ஆராச்சியாளர்கள் இருந்து வருகின்றனர்.   இது விண்வெளி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்பைக் குறிக்கிறதுபுக்கு அடையாளமாக இருந்து வருகின்றது.

ஒரு ஒப்பீட்டுக்கு- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான தரைவழிப் பயணத்தின்  தூரமும் 400 km தான். ஆனால் சந்திரனுக்கு பூமியில் இருந்து பயணம் செய்ய வேண்டிய தூரம் இதைப்போல் ஆயிரம் மடங்கு (384,400 km) என்பதை கவனிக்கவும். 

தாமதத்திற்கான காரணங்கள்: 

சுனிதா குழுவின் Crew-9 திரும்பி வர ஏற்பட்ட காரணம் நாசா என்னும் அமெரிக்க வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் செயற்பாடுகள் தனியார்மயமாக்கப்பட்டதும் அவற்றை போயிங் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-X நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டதில் இருந்தும் ஆரம்பிக்கின்றது. நாசாவின் சலஞ்சர்(1986) கொலம்பியா (2003) விண்ணூர்திகளின் வெடிப்பும் 14 விண்வெளி வீரர்களின் உயிரிழப்பும் இந்த தனியார் மயமாக்கலிற்கான காரணமாக சொல்லப்படுகின்றது. 

சுனிதா மற்றும் வில்மோர் ஆகியோர் ஜூன் 5, 2024 அன்று போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  ஸ்டார்லைனர் விண்கலத்தில் பரீட்சார்த்த பறப்புக்கு (Crew Flight Test) பணியின் ஒரு பகுதியாக ISS க்கு அனுப்பப்பட்டனர். ஒரு வாரம்  மட்டுமே நீடிக்கும் நோக்கம் கொண்ட இந்த பணி, ISS க்கு வந்தவுடன் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் உள்ள சிக்கல்கள்  மற்றும் ஹீலியம் கசிவுகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன, இது ஒரு குழுவினர் திரும்பும் பயணத்திற்கான விண்வெளிக்கப்பலின்  தயார்நிலை குறித்த கவலைகளை எழுப்பியதால்  விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, விண்வெளி வீரர்களை ஸ்டார்லைனரில் மீண்டும் கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா கருதியது.   பாதுகாப்பான திரும்பும் முறையை ஏற்பாடு செய்யும் வரை ISS இல் அவர்கள் தங்குவதை நீட்டிக்க முடிவு செய்தது.

உண்மையில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் அந்தரிக்க விடப்பட்டனரா?



கடந்த செப்டம்பர் மாதத்திலேயே ரஸ்யாவின் Soyuz MS-26 விண்ணூர்தியும், அமெரிக்காவின் SpaceX Crew-9 Dragon Capsule உம் அங்கு போய்ச் சேர்ந்து ISS கராச்சில் பார்க் பண்ணியுள்ளன. விரும்பினால் அவசரத்திற்கு அவற்றில் திரும்பியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விண்ணூர்தியும் அவற்றிற்கான விண்வெளி வீரர்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்குமாக வடிவமைக்கப்பட்டிருந்ததால் அவற்றை அவர்கள் குழப்ப விரும்பவில்லை. அது தான் உண்மை.

ஸ்பேஸ்-X - போயிங் நிறுவனக்களுக்கிடையிலான போட்டி, அதன் பின்னாலுள்ள அரசியல், ISS இல் என்ன ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள், அவை உண்மையில் அவசியமா என்பவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

Saturday, March 1, 2025

மலரும் புலத்து நினைவுகள் -10-

அழகி, ஆட்டொகிராப், தவமாய் தவமிருந்து, பின்பு வந்த 96 போன்ற திரைப்படங்கள் எமது பாடசாலை, பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் அசைபோட தூண்டுபவை. அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் எனது பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

எமது பல்கலைக்கழக காலம் என்பது 35 விடுதலை இயக்கங்கள் உருவாகி பின்பு அவையெல்லாம் அழிக்கப்பட்டு ஒரு பெரிய இயக்கமாக உருவான 1985-89 காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் தான் வடமாட்சி ஒப்பரேசன், இந்திய இராணுவம் அமைதிகாக்கும் பணிக்கு வந்தது, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை, 13 ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது போன்ற மறக்கமுடியா அரசியல் சம்பவங்கள்  நடந்தன. சிறைக்கைதிகள் விடுதலை, பாலஸ்தீன ஆதரவு போன்றவற்றிகும் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருத்ததை எனது முன்னைய அத்தியாயங்களில் கூறியிருந்தேன். 



பிரச்சனைகள் ஆரம்பித்த காலம் என்பதால் எம்மில் பெரும்பாலானோருக்கு எமது பல்கலைக் கல்வி 3-4 வருடங்கள் நீடிக்கும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை. மின்சாரம், பெற்றோல், டீசல் என்பவை உட்பட பெரும் பொருளாதார தடைக்கு வடமாகாணம் உட்பட்டிருந்தது. எம்மில் பல மாணவர்கள் பல்கலைக்கழக முதலாம் வருடத்தில் சித்தியடையவில்லை. மேலும் பலர் பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துக்கொண்டிருந்தனர். எனது இரண்டாவது தடவை தோற்றிய A/L பரீட்சை முடிபின்படி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததால் நானும் பெரிதாக படிக்காமல் மட்டுமட்டாகவே சித்தியடைந்திருந்தேன். இரண்டாம் வருடம் முடியும் காலத்தில் பலருக்கு 10 பாடங்கள் கூட அரியர்ஸ் இருந்தன. அவர்களில் பலர் இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர் என்பது வேறு விடயம். நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமையால் அவர்களுக்கு அந்த நேரம் கற்கும் மன நிலை இருக்கவில்லை என்பதே அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் தான் ஆண்டிறுதி பரீட்சை என்பது செமெஸ்டர் முறைக்கு மாற்றப்பட்டது. 6 மாதத்தில் கொஞ்ச பாடங்களையும் மிகுதியை ஆண்டிறுதியிலும் எழுதுவது சுலபமாயினும் வருச முடிவில் மாத்திரம்  நோட்சை தூசு தட்டுவோருக்கு இது ஒத்துவராது.  எமக்கு அடுத்த வருடத்தில் கற்றவர்கள் செமெஸ்டர் பரீட்சைகளை ஆண்டிறுதிக்கு பின்போட போராடும்போது அவர்களுக்கெதிராக அரியர்ஸ் பாசக்கார நண்பர்களுக்காக  நாம் போராடி பெரும் அடிதடி சண்டை எல்லாம் வந்தது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் கற்பித்தல் போர் அடிச்சாலும் சிலரின் கற்பித்தல் ஆர்வமாக கற்கத் தூண்டும். முக்கியமாக,  இளமையான, அழகான விரிவுரையாளர்களின் பாடங்கள் வகுப்பை கலகலப்பாக்கி எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். டிராகன் திரைப்படத்தில் வருவது போல ரொக்கெட் எல்லாம் விட்டு நேரே விரிவுரையாளரின் தலைமுடியில் லாண்ட் ஆன சம்பவம் எல்லாம் உணமையில் நடந்தது. 



பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் பசுமையாக காட்சி தருவது நுண்கலை, கலைப்பீடங்கள் தான். பொறியியல், பெளதிக விஞ்ஞானம் போன்ற கற்கை  நெறிகள் வரண்டு பாலைவனமாக காட்சி தரும். பாலைவனப் பசுஞ்சோலைகளை தேடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். 

எனது வகுப்பில் ஆகக்குறைந்த வயதில் கல்வி கற்ற ஒரு சிலரில் நானும் ஒருவன். எனது “தம்பி” மூஞ்சியை மறைக்க தாடி, மீசை எல்லாம் வைத்து கொஞ்சம் டெரராக என்னை மாற்றி வைத்திருப்பேன். ஒரு சண்டியன் போன்ற ஒரு தோற்றம் கெத்து என்று நினைக்கும் வயது அது. 

பின்பு இந்திய இராணுவம் வந்தபோது கிளீன் சேவ் எடுத்துக்கொண்டு திரிஞ்சது வேற கதை. 


Friday, February 14, 2025

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

முன்பு தண்டவாளங்கள் இப்படி fishplate என்னும் ஒரு இணைப்பு தகடு வைத்து நட்டுக்களால் பூட்டப்படும். வெப்ப காலத்தில் விரிவடையத்தக்கதாக இடைவெளி விடப்பட்டு நட்டுக்களுக்கான ஓட்டைகள் நீள்வட்டமாகவும் விடப்படும். இதைப்பற்றி விஞ்ஞான விளக்கம் எல்லாம் முன்பு கற்பிக்கப்பட்டு பரீட்சையில் வினாக்கள் எல்லாம் வருவதுண்டு.
படம்1- பாரம்பரிய தண்டவாள இணைப்பு 

இப்பொழுதெல்லாம் தண்டவாளங்களை வெல்ட் செய்து ஒட்டும் Continuous Welded Rail (CWR) என்னும் முறையே பாவிக்கப்படுகின்றது. இலங்கையிலும் புதிதாக போடப்பட புகையிரதப் பாதைகளான வவுனியா- காங்கேசன்துறை, கொழும்பு- மாத்தறை பாதைகளில் இந்த தொழில் நுட்பமே பாவிக்கப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தினால் புகையிரதம் வேகமாகவும், குலுக்கல் இல்லாமலும் பயணிக்க முடிவது மாத்திரமல்லாமல் புகையிரத வீதி , புகையிரதம் ஆகியவை பராமரிக்கும் செலவும் குறைகின்றது. முக்கியமாக, முன்பு கேட்கும் கடக்-கடக் சத்தம் இப்போது இல்லாமல் போய்விட்டது. 
குளிரில் சுருங்கும்போது உடையாமலும், வெப்பத்திற்கும் விரியும்போது வளையாமலும் எப்படி CWR சாத்தியமாகின்றது என்று நீங்கள் யோசித்ததுண்டா?

படம்2- நவீன  தண்டவாள ஒட்டு இணைப்பு 

பெளதிக விதிப்படி CWR முறையில் அமைக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை மாற்றத்திற்கு உட்படும்போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடைய வேண்டும். இப்படியான அதி கூடிய வெப்ப நாட்களில்  buckle அல்லது sun kink என்றழைக்கப்படும் வளைவுகள் தண்டவாளங்களில் ஏற்பட்டு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்படவேண்டிவரும். 

படம் 3: ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடையும்.

இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக பல உபாயங்களை உபயோகிக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று தண்டவாளங்களை tensile stess என்னும் இழுவை விசையில் இருக்கக்கூடியவாறு அதிக வெப்பமான நாளில் அல்லது தண்டவாளங்களை வெப்பமாக்கி அப்பிரதேச சராசரி வெப்ப நிலையிலும் பார்க்க சிறிது அதிக வெப்ப நிலையில் தண்டவாளங்களை ஒட்டி விடுவார்கள். இந்த வெப்ப நிலையை Rail Neutral Temperature (RNT) என்று அழைப்பார்கள். இலங்கையில் RNT ஆனது 35-40   வரை இருக்கும். மலைநாட்டுக்கு வேறாகவும் யாழ்ப்பாணத்திற்கு இது வேறாகவும் இருக்கும். 

தொடர்ந்து இழுவை விசையில் இருக்கும்போது இரவு வெப்பநிலை மிகவும் குறைந்தால் இழுவை மிக அதிகரித்து தண்டவாளம் உடைந்து விடவும் வாய்ப்புள்ளது. அண்மையில் இலங்கையில் அப்படி ஒரு சம்பவம் நடதது. அதிக இழுவை விசையை தாங்கக்கூடிய தண்டவாளங்களையே தற்போது உபயோகிக்கின்றனர். 

ஆனால் 40-50 C வெப்ப நிலை வரும் நாட்களில் தண்டவாளங்கள் இழுவை விசைக்கு பதில் தள்ளல் விசைக்கு (compression) மாறும். அப்போது அவை வளையாமல் இருக்க ஒவ்வொரு சிலீப்பர் கட்டையுடனும் (இப்பொழுது கொன்கிறீட்) ஒரு கிளிப் (railway Clip) போட்டு பொருத்தியிருப்பார்கள்.


படம்4: Railway clip

இந்த கிளிப் தண்டவாளங்களை நீட்சியடையாமல் உராய்வை பாவித்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால் மிக அதிக வெப்பநிலை நிலவும் நாட்கள் தொடர்ந்தால் தண்டவாளம் வளைவதை தவிர்க்க முடியாது.


படம் 5: sun kink என்றழைக்கப்படும் தண்டவாள வளைவு.


செயற்கை நுண்ணறிவுக் காலத்துக்கேற்ற பல்கலைக்கழகக் கல்வி:

காலாவதியான பழைய பட்டப்படிப்புகளை மறுசீரமைத்து புதிய கற்கைநெறிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஒரு நாடு தனது பல்கலைக்கழகங்களை எவ்வாறு வடிவமைக்கி...