Saturday, March 1, 2025

மலரும் புலத்து நினைவுகள் -10-

அழகி, ஆட்டொகிராப், தவமாய் தவமிருந்து, பின்பு வந்த 96 போன்ற திரைப்படங்கள் எமது பாடசாலை, பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் அசைபோட தூண்டுபவை. அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் எனது பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

எமது பல்கலைக்கழக காலம் என்பது 35 விடுதலை இயக்கங்கள் உருவாகி பின்பு அவையெல்லாம் அழிக்கப்பட்டு ஒரு பெரிய இயக்கமாக உருவான 1985-89 காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் தான் வடமாட்சி ஒப்பரேசன், இந்திய இராணுவம் அமைதிகாக்கும் பணிக்கு வந்தது, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை, 13 ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது போன்ற மறக்கமுடியா அரசியல் சம்பவங்கள்  நடந்தன. சிறைக்கைதிகள் விடுதலை, பாலஸ்தீன ஆதரவு போன்றவற்றிகும் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருத்ததை எனது முன்னைய அத்தியாயங்களில் கூறியிருந்தேன். 



பிரச்சனைகள் ஆரம்பித்த காலம் என்பதால் எம்மில் பெரும்பாலானோருக்கு எமது பல்கலைக் கல்வி 3-4 வருடங்கள் நீடிக்கும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை. மின்சாரம், பெற்றோல், டீசல் என்பவை உட்பட பெரும் பொருளாதார தடைக்கு வடமாகாணம் உட்பட்டிருந்தது. எம்மில் பல மாணவர்கள் பல்கலைக்கழக முதலாம் வருடத்தில் சித்தியடையவில்லை. மேலும் பலர் பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துக்கொண்டிருந்தனர். எனது இரண்டாவது தடவை தோற்றிய A/L பரீட்சை முடிபின்படி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததால் நானும் பெரிதாக படிக்காமல் மட்டுமட்டாகவே சித்தியடைந்திருந்தேன். இரண்டாம் வருடம் முடியும் காலத்தில் பலருக்கு 10 பாடங்கள் கூட அரியர்ஸ் இருந்தன. அவர்களில் பலர் இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர் என்பது வேறு விடயம். நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமையால் அவர்களுக்கு அந்த நேரம் கற்கும் மன நிலை இருக்கவில்லை என்பதே அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் தான் ஆண்டிறுதி பரீட்சை என்பது செமெஸ்டர் முறைக்கு மாற்றப்பட்டது. 6 மாதத்தில் கொஞ்ச பாடங்களையும் மிகுதியை ஆண்டிறுதியிலும் எழுதுவது சுலபமாயினும் வருச முடிவில் மாத்திரம்  நோட்சை தூசு தட்டுவோருக்கு இது ஒத்துவராது.  எமக்கு அடுத்த வருடத்தில் கற்றவர்கள் செமெஸ்டர் பரீட்சைகளை ஆண்டிறுதிக்கு பின்போட போராடும்போது அவர்களுக்கெதிராக அரியர்ஸ் பாசக்கார நண்பர்களுக்காக  நாம் போராடி பெரும் அடிதடி சண்டை எல்லாம் வந்தது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் கற்பித்தல் போர் அடிச்சாலும் சிலரின் கற்பித்தல் ஆர்வமாக கற்கத் தூண்டும். முக்கியமாக,  இளமையான, அழகான விரிவுரையாளர்களின் பாடங்கள் வகுப்பை கலகலப்பாக்கி எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். டிராகன் திரைப்படத்தில் வருவது போல ரொக்கெட் எல்லாம் விட்டு நேரே விரிவுரையாளரின் தலைமுடியில் லாண்ட் ஆன சம்பவம் எல்லாம் உணமையில் நடந்தது. 



பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் பசுமையாக காட்சி தருவது நுண்கலை, கலைப்பீடங்கள் தான். பொறியியல், பெளதிக விஞ்ஞானம் போன்ற கற்கை  நெறிகள் வரண்டு பாலைவனமாக காட்சி தரும். பாலைவனப் பசுஞ்சோலைகளை தேடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். 

எனது வகுப்பில் ஆகக்குறைந்த வயதில் கல்வி கற்ற ஒரு சிலரில் நானும் ஒருவன். எனது “தம்பி” மூஞ்சியை மறைக்க தாடி, மீசை எல்லாம் வைத்து கொஞ்சம் டெரராக என்னை மாற்றி வைத்திருப்பேன். ஒரு சண்டியன் போன்ற ஒரு தோற்றம் கெத்து என்று நினைக்கும் வயது அது. 

பின்பு இந்திய இராணுவம் வந்தபோது கிளீன் சேவ் எடுத்துக்கொண்டு திரிஞ்சது வேற கதை. 


No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவுக் காலத்துக்கேற்ற பல்கலைக்கழகக் கல்வி:

காலாவதியான பழைய பட்டப்படிப்புகளை மறுசீரமைத்து புதிய கற்கைநெறிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஒரு நாடு தனது பல்கலைக்கழகங்களை எவ்வாறு வடிவமைக்கி...