Friday, February 14, 2025

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

முன்பு தண்டவாளங்கள் இப்படி fishplate என்னும் ஒரு இணைப்பு தகடு வைத்து நட்டுக்களால் பூட்டப்படும். வெப்ப காலத்தில் விரிவடையத்தக்கதாக இடைவெளி விடப்பட்டு நட்டுக்களுக்கான ஓட்டைகள் நீள்வட்டமாகவும் விடப்படும். இதைப்பற்றி விஞ்ஞான விளக்கம் எல்லாம் முன்பு கற்பிக்கப்பட்டு பரீட்சையில் வினாக்கள் எல்லாம் வருவதுண்டு.
படம்1- பாரம்பரிய தண்டவாள இணைப்பு 

இப்பொழுதெல்லாம் தண்டவாளங்களை வெல்ட் செய்து ஒட்டும் Continuous Welded Rail (CWR) என்னும் முறையே பாவிக்கப்படுகின்றது. இலங்கையிலும் புதிதாக போடப்பட புகையிரதப் பாதைகளான வவுனியா- காங்கேசன்துறை, கொழும்பு- மாத்தறை பாதைகளில் இந்த தொழில் நுட்பமே பாவிக்கப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தினால் புகையிரதம் வேகமாகவும், குலுக்கல் இல்லாமலும் பயணிக்க முடிவது மாத்திரமல்லாமல் புகையிரத வீதி , புகையிரதம் ஆகியவை பராமரிக்கும் செலவும் குறைகின்றது. முக்கியமாக, முன்பு கேட்கும் கடக்-கடக் சத்தம் இப்போது இல்லாமல் போய்விட்டது. 
குளிரில் சுருங்கும்போது உடையாமலும், வெப்பத்திற்கும் விரியும்போது வளையாமலும் எப்படி CWR சாத்தியமாகின்றது என்று நீங்கள் யோசித்ததுண்டா?

படம்2- நவீன  தண்டவாள ஒட்டு இணைப்பு 

பெளதிக விதிப்படி CWR முறையில் அமைக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை மாற்றத்திற்கு உட்படும்போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடைய வேண்டும். இப்படியான அதி கூடிய வெப்ப நாட்களில்  buckle அல்லது sun kink என்றழைக்கப்படும் வளைவுகள் தண்டவாளங்களில் ஏற்பட்டு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்படவேண்டிவரும். 

படம் 3: ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடையும்.

இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக பல உபாயங்களை உபயோகிக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று தண்டவாளங்களை tensile stess என்னும் இழுவை விசையில் இருக்கக்கூடியவாறு அதிக வெப்பமான நாளில் அல்லது தண்டவாளங்களை வெப்பமாக்கி அப்பிரதேச சராசரி வெப்ப நிலையிலும் பார்க்க சிறிது அதிக வெப்ப நிலையில் தண்டவாளங்களை ஒட்டி விடுவார்கள். இந்த வெப்ப நிலையை Rail Neutral Temperature (RNT) என்று அழைப்பார்கள். இலங்கையில் RNT ஆனது 35-40   வரை இருக்கும். மலைநாட்டுக்கு வேறாகவும் யாழ்ப்பாணத்திற்கு இது வேறாகவும் இருக்கும். 

தொடர்ந்து இழுவை விசையில் இருக்கும்போது இரவு வெப்பநிலை மிகவும் குறைந்தால் இழுவை மிக அதிகரித்து தண்டவாளம் உடைந்து விடவும் வாய்ப்புள்ளது. அண்மையில் இலங்கையில் அப்படி ஒரு சம்பவம் நடதது. அதிக இழுவை விசையை தாங்கக்கூடிய தண்டவாளங்களையே தற்போது உபயோகிக்கின்றனர். 

ஆனால் 40-50 C வெப்ப நிலை வரும் நாட்களில் தண்டவாளங்கள் இழுவை விசைக்கு பதில் தள்ளல் விசைக்கு (compression) மாறும். அப்போது அவை வளையாமல் இருக்க ஒவ்வொரு சிலீப்பர் கட்டையுடனும் (இப்பொழுது கொன்கிறீட்) ஒரு கிளிப் (railway Clip) போட்டு பொருத்தியிருப்பார்கள்.


படம்4: Railway clip

இந்த கிளிப் தண்டவாளங்களை நீட்சியடையாமல் உராய்வை பாவித்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால் மிக அதிக வெப்பநிலை நிலவும் நாட்கள் தொடர்ந்தால் தண்டவாளம் வளைவதை தவிர்க்க முடியாது.


படம் 5: sun kink என்றழைக்கப்படும் தண்டவாள வளைவு.


Thursday, February 13, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை - தீர்வுக்கான ஒரு முன்மொழிவு.

தையிட்டி விகாரை விவகாரத்தை சில விட்டுக்கொடுப்புக்களுடன் எப்படி சமாதானமாக தீர்க்கலாம் என்று நான் சிந்தித்ததன் விளைவாக இந்த கட்டுரை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 2 தலைமுறையினரின் காணிப்பிரச்சனையை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தாமல் தீர்க்கும் ஒரு உபாயமாக சில முன்மொழிவுகளை நான் முன்வைத்துள்ளேன். 

தேவனம்பியதீசனால் கட்டப்பட்டதாக கருதப்படும் திஸ்ஸ விகாரை என்னும் பெயருடைய ஒரு பெளத்த விகாரை காங்கேசந்துறைக்கு அருஆமையில் அமைந்துள்ள தை≠≠≠யிட்டி பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று நம்பிய சில பெளத்த பிக்குகள் 1946 ஆம் ஆண்டு உலுத்தன் வளவு என்னும் 20 பரப்புக் காணியில் (படம்-1:சிவப்பு)  ஒரு பன்சல அமைத்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.  இந்த செய்மதிப்படத்தில் காட்டப்பட்டுள்ள வரைபுகள் ஓரளவு அளவிடைக்கமைய வரையப்பட்டுள்ளது. 

1958 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சிங்கள இனக்கலவரத்தின் பின்பாக இப்பகுதியில் வாழ்ந்த சிங்கள குடிகளின் வெளியேற்றத்துடன் இந்த பன்சாலையும் அழிந்து போய் விட்டது. யுத்தம் முடிவடைந்த பின்பாக இப்பிரதேசம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் இராணுவத்தின் உதவியோடு இந்தக்கோவில் பிரமாண்டமாக பழைய காணிக்கருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி கட்டப்பட்டுவிட்டது.  7 ஏக்கர் நிலத்தில் வேலியமைத்து (படம்-1:  ஊதா) போதிமரம், தாதுகோபம், பெளத்தகுருவுக்கான தங்குமடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், முன்பு பன்சல இருந்ததாக கருதப்படும் காணி இப்பொழுதும் இவ்வேலிக்கு வெளியே தனியாக காடு வளர்ந்து இருக்கின்றது. 

படம்1: தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ள பகுதியின் செய்மதிப்படம் (2024).
1. சிவப்பு: 1946 இல் பன்சல அமைக்கப்பட்ட 1.24 ஏக்கர் காணி.
2. ஊதா: தற்போதைய விகாரை அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தின் வேலி.
3. மஞ்சள் : பெளத்த மகாசஙம் உரிமை கோரும் 16 ஏக்கர்  நிலம். 
4. நீலம்: அரச மரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி. 

கடந்த பல வருடங்களாக ஏறக்குறைய  20 குடும்பங்கள் தமது நிலம் தமக்கு வேண்டும் என்று தமது காணிப் பத்திரங்களுடன் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில், இலங்கை பெளத்த மகாசங்கம் தமக்கு 16 ஏக்கர் காணி (படம்-1: மஞ்சள்)  சொந்தமானது என்றும் அவற்றை பெற்றுத்தருமாறும் கேட்டு யாழ் மாவட்ட செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

தற்போது  இனவாதிகள் இதை பேசுபொருளாக்கி அரசியல் செய்ய முயன்று வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில விட்டுக்கொடுப்புக்களுடன் இப்பிரச்சனையை சமாதானமாகத் தீர்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். தீர்வுக்கான எனது முன்மொழிவாக பின்வருவனவற்றை பரிந்துரைக்கின்றேன். 

பரிந்துரைகள்

  1. போதிமரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி (படம்-1: நீலம்) முறைப்படி விகாரைக்கு அளிக்கப்படலாம். 
  2. இவ்விகாரையின் முகப்பு கலைவாணி வீதிக்கு மாற்றப்படலாம்.
  3. விகாரை முறைப்படி பெளத்த விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டு உரிமம்  மாற்றப்பட வேண்டும். 
  4. ஏற்கனவே பன்சல இருந்த 1.25 ஏக்கர் காணி (படம்-1: சிவப்பு) இத்துடன் இணைக்கப்பட்டு மேலதிக கட்டடங்கள் அமைக்கப்படலாம். 
  5. இந்த 1.5 எக்கர் காணி உரிமையாளர்களுக்கு வேறு காணி அல்லது அதற்கீடான நட்ட ஈடு வழங்கப்படலாம். அல்லது அருகில் உள்ள மற்றைய காணிகளில் இருந்து வழங்கப்படலாம்.  
---------------------------------------------------------------

Tissa Viharai – A Proposal for Settlement

Kumaravelu Ganesan
Believing that a Buddhist Vihara named Tissa Viharai, thought to have been built by Devanampiyatissa, should be located in this area, some Buddhist monks established a Pansala in 1946 on a 1.25 acre plot of land called Ulutan Valavu (Figure 1: Red) and began worshipping there. The diagrams in this map are drawn approximately to scale.
Following the 1958 Tamil-Sinhala ethnic riots, the Pansala became abandoned due to the exodus of Sinhalese residents from the area. After the end of the war, when the area was under military control, a temple was constructed on a grand scale by occupying land near the old temple, with the assistance of the army. A 7-acre area was fenced off (Figure 1: Purple), including a Bodhi tree, a stupa, a Vihara, and monks’ residences.
However, the land where the original Pansala is believed to have stood remains outside this fenced area. Around 20 families are currently fighting legal battles to reclaim their land.
At this juncture, the Sri Lanka Buddha Maha Sangha has submitted a letter to the Jaffna District Secretariat requesting ownership of 16 acres of land (Figure 1: Yellow). At present, it appears that South Sri Lankan nationalist groups are attempting to politicize the issue. Reaching an amicable settlement with some concessions would be beneficial to all parties.
My proposed recommendations are given below. 

Proposed Solution:
  1. 1.5 acres of land (Figure 1: Blue), including the Bo tree and the stupa, should be formally granted to the Vihara.
  2. The front entrance of the Vihara should be relocated to Kalaivani Street.
  3. The Vihara should be formally registered with the Ministry of Buddhist Affairs, and its custody should be transferred.
  4. 1.25 acres of land (Figure 1: Red), where the original Pansala once stood, should be attached to the Vihara, allowing for the construction of additional buildings.
  5. The owners of the 1.5-acre plot (Figure 1: Blue) should be provided with alternative land or equivalent compensation, potentially from nearby available lands.

Monday, February 10, 2025

தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரை

இற்றைக்கு 2250 ஆண்டுகளுக்கு முன்பாக அனுராதபுரத்தை ஆண்ட மூத்தசிவன் என்னும் அரசனின் இரண்டாவது மகனான தேவநம்பியதீசன்  நாகதீபத்தில் கட்டிய 3 புத்த கோயில்களைப் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. நாகதீபம் என்பது யாழ்ப்பாண தீபகற்பத்தை முழுவதுமாகப் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகக் கருதப்படுகின்றது. இந்த 3 கோயில்களும் ஜம்புகோள விஹாரை (மாதகல்) , திஸ்ஸ மகா விஹாரை மற்றும் பச்சினாராமயா விகாரை ஆகும் (?).


மகாவம்சம் என்பது ஒரு புராணக்கதை ஆகினும் அதையே முழுவதும் உண்மையென்று பெளத்தர்கள் கொண்டாடுகின்றனர்.

முதலியார் செ இராசனாயகம் என்பவர் 1926 இல் எழுதிய Ancient Jaffna என்னும் ஒரு புத்த்கத்தில் இவ்விடத்தில் ஒரு கந்தசுவாமி கோவில் இருந்ததாகவும் அதற்கண்மையில் உள்ள் Tissa Maluva என்னுமிடத்தில் இந்த விகாரை இருந்திருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

திஸ்ஸமகா விஹாரை தையிட்டியில் அமைந்திருந்ததாக அங்கு காணப்பட்ட அரச மரத்தை வைத்து கண்டுபிடித்து 1946ஆம் ஆண்டு களுத்துறை ஷீலாதரதிஸ்ஸ தேரர் மற்றும் கௌதர பன்னாந்த தேரர் ஆகிய இரு பௌத்த குருமார்களால் அங்கு ஒரு சிறிய தாதுகோபமும் விகாரையும் கட்டப்பட்டன. 1946 ஆம் ஆண்டில், ஆபிரகாம் பெரேரா என்ற பக்தர் கோயிலுக்கு 1.25 ஏக்கர் (20 பரப்பு) நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த விகாரை அமைந்திருந்த காணி படம்-1 இல் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் திஸ்ஸ விஹாரை என்ற கோயில் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
(ஆனால் இந்த நிலப்பத்திரமானது ஒரு சத்தியச்க்கடதாசியினூடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது சட்டத்தின்படி செல்லுமடியாகாது என்று காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார்)

1958 இல் நடைபெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து இந்த புத்த விகாரை கைவிடப்பட்டு 70 களின் பின்னான போரில் முற்றாக அழிந்து போய் விட்டது. 1959 இல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான வரைபடத்தில் இந்த விகாரையும் 15 ஏக்கர் அளவான நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. (படம்-2). கீழே உள்ள படம்-1 இல் மஞ்சள் நிறத்தால் இந்த 15 ஏக்கர் காணி காட்டப்பட்டுள்ளது. 1.25 ஏக்கர் காணி எப்படி 15 ஏக்கர் ஆனது என்று தெரியவில்லை.  இதை அப்பகுதி மக்கள் சிங்களவன் கலட்டி என்று அழைத்து வந்துள்ளனர்.

படம்-1 : 2025 செய்மதிப்படம். மஞ்சள் - 1959 வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள 15 ஏக்கர் காணி. சிவப்பு- 40 களில் விகாரை அமைக்கப்பட்ட 1.25 ஏக்கர் காணி. ஊதா- தற்போது வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் காணி.


2009 இல் போர் முடிவடைந்த பின்னர் இந்த விகாரையை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் 2017 ஆம் ஆண்டிலேயே அப்போதைய வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேயால் முன்பு விகாரை இருந்த (சிவப்பு பெட்டி) இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு  கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சவேந்திர சில்வா அவர்களால் புதிதாக  அடிக்கல் இடப்பட்டு   விகாரையை அந்த இடத்தில் கட்டாமல் அதற்கு வட மேற்கு திசையில் 100 மீட்டர் தூரத்தில் கட்டிவிட்டனர்.

படம்-2 (1959 இல் வெளியிடப்பட்ட வலிகாமம் வரைபடம் )


கடந்த 75 வருட காலத்தில் பல வீடுகள் இந்த 15 ஏக்கர் காணியில் கட்டப்பட்டு விட்டதால் ஒரு 7 ஏக்கர் காணியை உள்ளடக்கிய ஒரு வேலி (ஊதா) இவ்விகாரையை சுற்றி தற்போது போடப்பட்டுள்ளது. இதற்கான நிலவளவையாளரின் வரைபடம் கீழே படம்-3 இல் காட்டப்பட்டுள்ளது. முன்பு விகாரை இருந்த 20 பரப்பு காணி தற்போது இதில் உள்ளடக்கப்படவில்லை என்பதை அவதானிக்கவும்.

இந்த 7 ஏக்கர் காணிக்குள் பல பொதுமக்களின் காணிகளூம் உள்ளடக்கப்பட்டு விட்டதாக காணி உரிமையாளர்களால் போராட்டங்கள் செய்யப்படுகின்றன.

தற்போது தெற்கில் இருந்து இயங்கும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தமக்கு  14 ஏக்கர் காணியும் தரப்படவேண்டும் என்று யாழ் மாவட்ட செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகின்றது.


படம்-3: 2021 ஆம் ஆண்டுக்கான விகாரையின் கட்டடங்களுக்கும் வேலிக்குமான நில அளவையாளர் வரைபடம்.


ஐ.நா ஆணையாளரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு! UN High Commissioner Press Conference Sri Lanka. - YouTube கூகிள் மொழிபெயர்ப்பு:  பத்திரிகையாளர...