Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-15

----------------------------
பொ.கா 11ம் நூற்றாண்டில் ஆரம்பித்து ஜெருசலேத்தை மையமாக கொண்டு நடந்த சிலுவைப்போர்களைப் பற்றியும் பொ.கா 1290 இல் இங்கிலாந்தை ஆண்ட மன்னன் முதலாவது எட்வர்ட் முழு இங்கிலாந்தில் இருந்தும் யூதர்களை வெளியேற்றும் கட்டளையொன்றை பிறப்பித்ததையும், ஏறக்குறைய 350 ஆண்டுகளின் பின்பே இங்கிலாந்து பேரரசிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு யூதர்கள் திரும்புவதற்கு அனுமதியளிக்கபட்டது என்பதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
1346ம் ஆண்டளவில் சீனாவில் தோன்றி பட்டுப்பாதை வழியாக ஐரோப்பாவெங்கும் பரவி ஏறக்குறைய அரைவாசி ஐரோப்பிய சனத்தொகையை காவுகொண்ட கருப்புச்சாவு (Black Death) என்னும் பிளேக் நோய் யூதர்களின் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. தற்போதைய வைரஸால் பரவும் கோவிட்-19 போலல்லாமல் பக்டீரியாவால் தொற்றிய இந் நோய் கப்பல்களில் மறைந்திருந்த எலிகளால் நாடுகளுக்கிடையில் பரவியது என்று சொல்லப்படுகின்றது. அடிக்கடி தலையெடுத்த இந்நோய் 20ம் நூற்றாண்டில் அண்டிபயோட்டிக் கண்டுபிடிக்கப்படும்வரை பல நாடுகளில் பலமுறை பரவி பல மில்லியன் மக்களை காவு கொண்டது.
விஞ்ஞானம் அவ்வளவாக முன்னேறியிருக்காத அக்காலத்தில் எப்படி மக்கள் கொத்துக்கொத்தாக சாகின்றனர் என்று புரியாத மக்கள் அதற்கான காரணங்களை தேடிக்கொண்டிருந்தனர். யூதர்கள் பெருமளவில் இறக்காததை அவதானித்தவர்கள் யூதர்கள் பொதுக் கிணறுகளுக்கு விஷம் வைக்கின்றனர் என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர். யூதர்கள் பிளேக்கால் பெருமளவு பாதிக்கப்படாததற்கு அவர்கள் நகரை விட்டு புறநகர்ப்பகுதிகளில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்ததும், பொதுக்கிணறுகளை பாவிக்காமல் இருந்ததும் காரணம் என்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அடித்த அடியில், அம்பாறை (கருத்தடை) கொத்துரொட்டி கடைக்காரன் போல, தாம் தான் கிணத்துக்கு விஷம் வைத்தது என்றும் சிலர் “ஒப்புதல் வாக்குமூலம்” கொடுத்ததும் இவ்வதந்தி பரவ ஒரு காரணமாகும். பிரான்சில் ஆரம்பித்த யூதர்களின் மீதான இனக்கலவரம் ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் பரவி ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டு யூத குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பத்து வருடத்தில் பிளேக் முடிவுக்கு வந்தாலும் யூதர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. கருப்பு சாவு முடிந்து 20 வருடங்களுக்கு பின்பாக 1370 இல் நடந்த பிரசல்ஸ் படுகொலையில் (Brussels massacre) பெல்ஜியத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். ஜேசு கிறிஸ்து ஒரு யூதராகையால் யூதர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கிறிஸ்தவ திருச்சபையின் உத்தியோகபூர்வ கொள்கையால் பெருமளவில் யூத படுகொலைகளை தடுக்க முடியவில்லை.
யூத விநோதங்கள்
----------------------
மரபுவழி யூதர்கள் (Orthodox Jews) என்று ஒரு வகையினர் உள்ளனர். அவர்களின் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையானவை. இதை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். இஸ்ரேலின் ஒரு பிரபல நிறுவனத்தின் R&D ஆய்வகத்தில் நான் சில வாரங்கள் வேலை செய்யவேண்டியிருந்தது. அப்பொழுது எனக்கு சில அறிவுறுத்தல்கள் அதன் தலைவரால் செய்யப்பட்டது. அதில் ஒன்று- ஒரு ஆய்வக அறையில் தனியே ஒரு மரபு வழி யூத பெண்ணுடன் நிற்க கூடாது. அப்படி சந்தர்ப்பம் வந்தால், உடனே வெளியே வந்து விட வேண்டும். 😁அப்பெண்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை டயல் செய்யவோ, வாட்சப் பண்ணவோ முடியாது. அருகில் உள்ள ஒரு ஆணிடம் கொடுத்தே தனது கணவருக்கு கோல் செய்ய சொல்வார்கள்.
(Painting- Pieter Bruegel the Elder, Triumph of Death, c. 1562, Museo del Prado, Madrid)
**குமாரவேலு கணேசன்**
11-08-2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...