Sunday, April 28, 2024

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi)

ஏப்ரல் 18, 2024 அன்று, எதிர் என்று அன்புடன் அழைக்கப்படும் கலாநிதி நாகலிங்கம்

எதிர்வீரசிங்கம், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர்

சூழ அமைதியாக காலமானார். 89 வயதில், கலாநிதி எதிர்வீரசிங்கம், விளையாட்டு, கல்வி மற்றும்

அர்ப்பணிப்புள்ள மனிதாபிமானப் பணிகள் மூலம் வாழ்க்கையைத் தொட்டு, கண்டங்கள் கடந்தும்

ஒரு மரபை விட்டுச் சென்றுள்ளார்.

1934 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் ஒரு சிறிய கிராமமான பெரியவிளான் என்ற இடத்தில் ஒரு

சாதாரண ஒரு அறை மண் குடிசை வீட்டில் பிறந்த எதிரின் வாழ்க்கைப்பயணம் எதிர்கால சந்ததிக்கு

ஒரு வழிகாட்டியாகும். இந்த எளிய தொடக்கத்திலிருந்து, அவர் உலக அரங்கில் முன்னேறி இரண்டு

ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது

மாத்திரமன்றி 1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின்

முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

இதற்காக அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. என்ன தான் சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தாலும்

இலங்கையில் நிலவ் வந்த இனத்துவேசம் அவரி பலமுறை புறக்கணித்தது. அதை அவரது புதல்வர்

அர்ஜுனன் பின்வருமாறு எழுதுகின்றார். 

“ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடந்த போட்டி ஒன்றில் அவருக்குப் பரிசாகக் கிடைத்த தடகள

மெய்வல்லுனர் புத்தகமொன்றில் இருந்த படங்களைக் கவனமாக ஆராய்ந்து உயரம் பாய்வது எப்படி

என்று தமது சிறிய பின்வளவில் எதிர் தானாகவே கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு

திரையரங்கில் 1948 ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர் இப்படியான

ஓர் ஒலிம்பிக் போட்டிக்குத் தானும் போவேன் என்று ஓர் உறுதியை எதிர் தனக்குள் எடுத்துக்கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதான எதிர் ஹெல்சிங்கி - பின்லாந்து 1952 ஒலிம்பிக் போட்டிகளில்

பங்கேற்றார். மெல்பேண் - அவுஸ்திரேலியா 1956 ஒலிம்பிக் போட்டிகளினூடாகத் தொடர்ந்த அவரது

தடகளப் பயணத்தில், ரோக்கியோ - ஜப்பான் 1958ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எ

திர் கண்ட வெற்றி எந்த விளையாட்டிலும் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையையும்

பெற்றது. நான்கு ஆண்டுகளின் பின்னர், ஜகார்த்தா - இந்தோனேசியா 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்

போட்டிகளில் எதிர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயரம் பாய்தல் போட்டிகளில் எதிர் கலந்து கொண்ட ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருந்த சாதனைகளை முறியடித்தார். பழைய பஸ் வண்டி அச்சுகள் மற்றும் பிற பஸ் பாகங்களைப் பயன்படுத்தி வீட்டில் உருவாக்கிய பொருட்களைத் தனது உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுக்காக எதிர் பயன்படுத்தினார். கொழும்பில் 1951ஆம் ஆண்டு நடந்த தேசிய மட்டத்திலான  போட்டியில் வென்ற பின்னர் அவருக்கு முதற்தடவையாக ஒரு சிறப்பு தடகள பயிற்சியாளரான பி. இ. ராஜேந்திராவின் நெறிப்படுத்தலும்  கட்டமைப்பான உடற்பயிற்சி வழிமுறைகளும் கிடைத்தன. பின்னர்,

1952 ஒலிம்பிக் போட்டிகளுக்கான  அணியில் எதிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்லாந்து நாட்டிலுள்ள

ஹெல்சிங்கி நகரத்தை அடைய ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடற்கப்பலிற் பயணம் செய்து எதிர் அதிலே

கலந்து கொண்டார். 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருக்குப் பதக்கம் ஏதும் கிடைக்காவிட்டாலும்,

தங்கம் - வெள்ளி - வெண்கலம் என்று பதக்கங்கள் வென்ற வீரர்கள் தாண்டிய 1.95 மீற்றர் உயரத்தை அவரும்

தாண்டியிருந்ததால் அவருக்கு விதிகளின்படி நான்காவது இடம் கிடைத்ததுடன், வெற்றியாளர்களுடன் புதிய

உயரம் பாய்தல் ஆசிய சாதனையை எதிர் மூன்று வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

உயரம் பாய்தலில் இலங்கைக்கான சாதனையை மட்டுமன்றி ஆசிய மட்டத்திலும் சாதனையைக் கொண்டிருந்த

போதிலும், 1958ஆம் ஆண்டு ரோக்கியோ - ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில்

எதிர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும், டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளையாட்டுப்  பிரிவு

செய்தியாசிரியர் காள்ரன் செனிவிரத்தின தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் அழுத்தம் காரணமாகத்

தெரிவுக்குழு இறுதியில் தன்னைத் தளர்த்திக்கொண்டு கொண்டு எதிர் இந்த போட்டிகளிற் கலந்து கொள்ள

அனுமதித்தது. இருந்தாலும், பிந்தி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்ற காரணத்தைக் காட்டிய

தெரிவுக்குழு இந்தப் போட்டிகளிற் கலந்து கொள்வதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ரோக்கியோ

சொல்வதற்கான செலவை அவரே பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. அப்போது அவருக்கு

ஆதரவாக புரவலர் டொனவன் அந்திரே கொடுத்த ஐயாயிரம் அமெரிக்க டொலர்களின் உதவியுடன் அந்தப்

பயணத்தை எதிர் மேற்கொண்டு, போட்டிக்குச் சில நாட்கள் மட்டுமே இருக்கையில் ரோக்கியோவில் அணியுடன் 

இணைந்து கொண்டார். இந்தப் போட்டிகளின் போது அவருக்கான சீருடைகளை இலங்கை வழங்கவில்லை

என்பதால், அவரது பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் சீருடையில் இலங்கை அணியின் இலச்சினையை

குத்திக்கொண்டு எதிர் அந்தப் போட்டிகளிற் கலந்து கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, இலங்கையின்

அணியிலிருந்த மற்றைய போட்டியாளர்கள் அவரையே இலங்கை அணியின் தலைவராகத்  தீர்மானித்தார்கள்.”

எதிரின் கல்வித் தேடல்கள் அவரது தடகள சாதனைகளைப் போலவே சிறப்பாக இருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) உதவித்தொகையில் அவர் அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி மற்றும் தடகள திறமை அவரை விளையாட்டில் மட்டுமல்ல, கல்வி சீர்திருத்தம் மற்றும் சமூக மேம்பாட்டிலும் எல்லோரலும் மதிக்கப்படும் ஒரு மாமனிதனாக மாற்றியது.

இலங்கையில், குறிப்பாக அதன் மிகவும் கொந்தளிப்பான போர் நடந்துகொண்டிருந்த  90களில்  தனது

மக்கள் பணிகளை மீண்டும் ஆரம்பித்தார். வெளிநாட்டில் புகழ்பெற்ற கல்வித் தொழிலில் இருந்து ஓய்வு

பெற்ற பின்னர், அவர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் திரும்பினார். அங்கு,

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமாதானத்தை வளர்ப்பதற்கும்

இலக்காகக் கொண்ட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இரண்டு தசாப்தங்களுக்கும்

மேலாக அர்ப்பணித்தார்.

2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததன் பின்பாக உலகளாவிய தமிழ் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும்

நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட Global Tamil Forum என்னும் அமைப்பின் தலைவராக எதிர் தெரிவு

செய்யப்பட்டு ஒரு வருடம் கடைமையாற்றினார் என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. 

எதிரின் முன்முயற்சிகள் பரந்ததாகவும் மாறுபட்டதாகவும் இருந்தன. உள்ளூர் மொழிகளில் விநுபொக

கல்வி (STEM-Education) காணொளிகளை உருவாக்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதற்கான

முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அக்காணொளிப் பாடங்களே கோவிட்-19 காலத்தில் பல வறிய

பிந்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு விரலிகளின் ஊடாகவும் இணையம் ஊடாகவும் கற்றலுக்கு  உதவி

செய்தது என்றால் மிகையாகாது.  

இலங்கை முழுவதிலும் உள்ள இளம் தடகள திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதை இலக்காகக் கொண்டு

பல பாசறைகளை நடத்தினார். 2004 சுனாமி மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து மீட்புக்

காலத்தில் அவரது பணி முக்கியமானதாக இருந்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவையான

நிவாரணம் வழங்கப்படுவதை ஒருங்கிணைத்ததில் அவரின் பங்கு முக்கியமானது.  

கலாநிதி எதிர்வீரசிங்கத்தின் செல்வாக்கு எண்ணிமக் கல்வி மற்றும் தடகள சாதனைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர் வடமாகாணத்தில் புரையோடிப்போயிருந்த சாதி அமைப்புக்கு எதிராக ஒரு உறுதியான செயற்பாட்டாளராக

இருந்து சமூகத்தின் ஒடுக்கட்டப்பட்ட பிரிவினரை உயர்த்த அயராது உழைத்தார். 

வடமாகாணத்தின் கல்வி நிலை கீழ் நோக்கி சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து 2014 ஆம் ஆண்டு அவர்

தலைமையிலான குழு தயாரித்த "வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு" என்னும் 250 பக்க அறிக்கை அப்போதைய

கல்வியமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

01. மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் சகல பாடசாலைகளிலும் தாமதமின்றி

நிறுத்தப்பட வேண்டும். இதற்குப் பதிலாக ஆசிரியர்கள், அதிபர், மாணவர் தலைவர் உள்ளடக்கிய

மாணவர்களுக்கான வகுப்பறை நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

02. தற்பொழுது முன்னிலைப்படுத்தப்படும் எழுத்து மூலமாக விடையளிக்கும் பரீட்சை முறைக்குப் பதிலாக

மாணவர்களின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட செயன்முறையை ஆராய்ந்து அறியும் திறமையை

மையமாகக் கொண்ட செயற்றிட்டம் போன்றவற்றை ஆசிரியர்களினால் முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பதை

மையமாகக் கொண்டு தேசிய பரீட்சைகள் மீளமைக்கப்பட வேண்டும்.

03. பொது நிர்வாகம், நியமனங்கள், இடமாற்றம், பதவியுயர்வு மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

சம்பந்தமாக முன்வைக்கபட்ட அனைத்து சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும்

உத்தியோத்தர்கள் தமது துறைகளில் முதுமாணிப் பட்டங்களைப் பெறவோ அல்லது துறைசார் கல்வியை

விருத்தி செய்யவோ அவர்களுக்கு 1-4 வருடங்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கக்

கூடியவாறு 10 வருட காலத்திற்கான உத்தியோகத்தர்களின் விருத்தி சார்ந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

04. பாடசாலை நேரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதை தடுத்து

நிறுத்த வேண்டும்.

05. கல்வி சம்பந்தமான சகல தரவுகளையும் சேகரித்து வழங்கக் கூடியதாக கல்வி முகாமைத்துவ தகவல்

முறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

06. தமிழ்மொழி மூலம் கற்றலுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் நாட்டின் சகல

தமிழ்மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கல். பாடவிதானம்

தயாரித்தல், அதற்கான நூல்கள், கற்பித்தல் முறை. தமிழ்மொழி மூலம் கற்றல் கற்பித்தலில் சம்பந்தமான

நூல்களை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கும்.

07. வலய மட்டத்தில் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளின் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வலய

மட்டத்தில் கல்விச் சபையொன்று அமைக்கப்பட வேண்டும். இச்சபை நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களையும்

தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். வலய மட்டத்தில் இயங்கும்

பாடசாலைகளை நிர்வகித்தல் அவை சம்மந்தமான தீர்மானம் எடுத்தல்

இச்சபையைச் சார்ந்ததாக இருக்கும். 

08. வலய மட்டத்தில் தற்பொழுது இயங்கும் முறைசாரா கல்விமுறை மாற்றப்பட்டு இதற்குப் பதிலாக

தொடர்கல்விப் பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இப்பாடசாலையில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்

கற்றுப் பயன்பெறும் வகையில் பாடவிதானம் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட

வேண்டும்.

09.தற்போதைய நிதிமுகாமைத்துவ முறை உயர்நிலையில் வினைத்திறனுடன் செயற்படும் வகையில்

மாற்றியமைக்கப்பட வேண்டும்.

10. தற்பொழுது அமுலில் இருக்கும் தை மாதத்தில் தொடங்கி மார்கழியில் முடிவடையும் வரை கல்வி வருடத்தை

செப்டம்பரில் தொடங்கி ஓகஸ்டில் முடிவடையக் கூடியதாக மாற்றியமைத்து.


மேலே தரப்பட்டுள்ள அவ்வறிக்கையின் முக்கியமான 10 பரிந்துரைகளில் சிலவற்றை வட மாகாணசபை

ஆரம்பித்திருந்தாலும் எவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. EMIS

தரவுத்தளம் மற்றும் வலயக் கல்வி வாரியம் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டாகும். 


வட-மாகாணசபையில் கல்வியமைச்சின் ஆலோசகராக அவர் வகித்த பதவியானது 2017 இல் ஏற்பட்ட

மாகாண அமைச்சரவை மாற்றத்தின் பின்பாக வந்த புதிய மாகாண கல்வியமைசரினால் துரதிஷ்டவசமாக

நீடிக்கப்படவில்லை.  அது மட்டுமல்லாமல் பாடசாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு அவருக்கு

வழங்கப்பட்டிருந்த அனுமதியும் நீடிக்கப்படவில்லை. அதன் பின்பு அவர் அமெரிக்கா திரும்பிச்சென்றுவிட்டாலும்

பல விளையாட்டு, கல்விசார் தொண்டு நடவடிக்கைகளை இலங்கையில் தொடர்ந்தார். 


எதிரின் சமூகப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், கலாநிதி எதிர்வீரசிங்கத்திற்கு இலங்கை

அரசாங்கத்தினால் 'தேசபந்து' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . அவரது குணாதிசயத்திற்கு உண்மையாக,

அவர் உள்நாட்டு மோதலின் போது தனது மக்கள் அனுபவித்த துன்பங்களைக் காரணம் காட்டி, அவ்விருதை

நிராகரித்திருந்தார். அவரது முடிவு சமூக நீதிக்கான அவரது ஆழ்ந்த பச்சாதாபத்தையும் அர்ப்பணிப்பையும்

அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எதிரின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது தொழில் முயற்சிகளைப் போலவே சிறப்பாகவும் நிறைவாகவும் இருந்தது.

அவர் சியரா லியோன் நாட்டில் இருந்த காலத்தில், 1965ஆம் ஆண்டு ஜூலியற் ஆன் பவர் (Juliet Ann Power)

என்ற அமெரிக்காவில் இருந்து வந்து அங்கு தொண்டுப்பணி செய்துகொண்டிருந்த பெண்ணை  காதலித்து

திருமணம் செய்து கொண்டார்.


எதிர்- ஜூலியட் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகளும் அவர்களினூடாக எட்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர். 

அமெரிக்க குடியுரிமைக்கு தகுதியுடையவராக இருந்தும் கடைசிவரை இலங்கை மண்ணின் மைந்தனாக

இலங்கைக் குடியுரிமையுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையை எதிர் நிறைவு செய்து கொண்டார். 

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை நாம் நினைவுகூரும்போது, ​​அவர் படைத்த சாதனைகளைகளையும்

அவர் பெற்ற பாராட்டுகளையும் மட்டும் அல்லாது ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் மீதான அவரின்  கருணை, கல்வி

பற்றிய அவரின் தொலைநோக்குப் பார்வை, மனித மாண்பு மற்றும் தேசியத்தின்  மீதான அவரின் அசைக்க

முடியாத நம்பிக்கைகளையும் நாம்  நினைவுகூர்வது அவசியமாகின்றது.  அவரது வாழ்க்கை வரலாறு

நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், விடாமுயற்சி மற்றும் மனிதநேயத்தின் சக்திக்கு சான்றாகவும்

உள்ளது.

மலர் வளையங்களுக்கு பதிலாக, அவரது குடும்பத்தினர் இலங்கைத் தொண்டு நிறுவனங்களுக்கு

நன்கொடைகளை வழங்குமாறு கோருகின்றனர்.  கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாணத்தின் ஒரு சிறிய

கிராமத்திலிருந்து உலக அரங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணமும், உலகில் அவர் ஏற்படுத்திய ஆழமான

தாக்கமும், அவரை அறியும் அல்லது அவரது செல்வாக்கை உணரும் பாக்கியம் பெற்ற அனைவராலும்

நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.


Tuesday, December 19, 2023

இலங்கையில் பலகலைக்கழக தரப்படுத்தலின் வரலாறு

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் சம்பந்தமான வரலாறு தொடர்பாக பலருக்கும் தெளிவின்மை காணப்படுகின்றது. இவை பற்றி நான் சில முகப்புத்தக பதிவுகளை முன்பு இட்டுள்ளேன். அவற்றை தொகுத்து மீண்டும் இங்கு எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை ஓரளவுக்கு நியாயமானதே. இந்த முறையில்
1. 55% ஆன அனுமதி மாவட்டங்களின் சனத்தொகைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றது. இதை district quota என்பர்.
2. 40% ஆன அனுமதி திறமை அடிப்படையில் நிரப்பப்ப்டும். இதை merit quota என்பர்.
3. 5% ஆன அனுமதி பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படும். இதை Educationally Disadvantaged District Quota என்பர்.
ஆனால் 1970 இல் இந்த பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது இது இனவாரியாகவே (medium based) அமுல்படுத்தப்பட்டது. அதாவது எந்த மொழியில் பரீட்சை எழுதினார்களோ அவர்களின் வீதத்திற்கேற்ப பல்கலைக்கழக அனுமதி வழங்கும் முறை. தமிழர்களும் பெரும்பாலான சோனகர்களும் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியதால் அவர்கள் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகள் என்று கணக்கிடப்பட்டது. இலங்கையின் இன வீதாசாரத்திற்கமைவாக இந்த பல்கலைக்கழக அனுமதி வழக்கப்பட்டது.
இந்த முறையின்போது சிங்கள மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் 229 புள்ளி எடுத்தால் மருத்துவம் கற்கலாம் என்னும்போது தமிழ் மூலம் பரீட்சை எழுதியவர்கள் 250 புள்ளிகள் எடுக்கவேண்டியிருந்தது. இதுவே பொறியியலுக்கு 227 உம் 250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. (கீழே அட்டவணையை பார்க்க).
அடுத்த வருடம், 1971 இல், இனவாரி வீதாசாரத்துக்கமைய கணக்கிடப்பட்ட எண்ணிக்கையை மாவட்ட சனத்தொகைக்கேற்ப பகிரப்பட்டது. இந்த கலப்பு முறை 1975/76 வரை நீடித்தது. அதன் பின்பு இனவாரி வீதாசார முறை முற்றாக நீக்கப்பட்டு மாவட்ட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 55% + 40% +5% என்பது மீண்டும் செய்த திருத்தத்தில் உருவானது.
இதே காலத்தில் அரச வேலைக்கும் இந்த இனரீதியான வீதாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, இலங்கை நிர்வாக சேவையில், எழுதுவினைஞர் சேவை உட்பட பல அரச சேவைகளுக்கு சேர்க்கப்படும் தமிழரின் தொகை 1965 இல் 20% ஆக இருந்து 1971 இல் 5% ஆக குறைக்கப்பட்டது. அந்த புள்ளிவிபரமும் கீழே இணைத்துள்ளேன்.


 இதற்கான பின்புலம் ஒன்று உள்ளது. 1970 ஆம் ஆண்டு பொறியியல் அனுமதி பெற்றவர்களில் 60 வீதமானோர் தமிழர்கள் என்று ஒரு வதந்தி காட்டுத்தீ போல நாடெங்கும் பரவியதாம். தமிழ்ப் பரீட்சகர்கள் தமிழ் மாணவர்களுக்கு புள்ளிகளை அள்ளிப்போட்டுள்ளனர் என்று காது மூக்கு வைத்து அவ்வதந்தி இறக்கை கட்டிப் பறந்ததாம். உடனே சிறிமா அரசாங்கத்தால் ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு வினாத்தாள்கள் மீள் திருத்தம் செய்யப்பட்டதாம். ஆனால் அப்படி ஒரு மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டு பிடிக்கமுடியவில்லை. அந்தக்காலகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சேகுவேரா கிளர்ச்சி (ஜேவிபி கிளர்ச்சி-1), சிங்கள இளைஞர்கள் மட்டத்தில் நிலவிய அமைதியின்மை என்பவற்றைத் தணிக்க இந்த தரப்படுத்தல் யுக்தியை சிறிமா தலைமையிலான அரசாங்கம் எடுத்தது என்று வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர்.
1976 இல் இருந்து நடைமுறையில் இருந்துவரும் மாவட்ட ஒதுக்கீடு (60%)& திறமை(40%) முறையானது தனியே தமிழ் மாவட்டங்களிலும், தனி சிங்கள மாவட்டங்களிலும் நியாயமானதாக இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்பிரகமூவா மாகாணங்களில் கலந்து வாழும் மலையகத்தமிழர்கள் இதனால் பயனடையவில்லை. வளங்கள் கூடிய பாடசாலைகளில் கற்கும் பெரும்பான்மை இன மாணவர்களுடன் வளங்கள் அறவே இல்லாத பாடசாலைகளில் கற்கும் மலையக மாணவர்கள் போட்டி போடும் நிலை காணப்படுகின்றது. இப்படியான பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான ஒரு இட ஒதுக்கீட்டுத்திட்டத்தை உருவாக்க எந்த அரசியல் தலைவர்களும் இதுவரை குரல் கொடுக்கவில்லை எனபது துரதிஷ்டவசமானது.
-Kumaravelu Ganesan-

Monday, July 31, 2023

 

தொழிற்புரட்சி 4.0 நோக்கி


அண்மையில் அவுஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் உயர்தரத்திற்கான பரீட்சை முடிவுகள் வந்திருந்தன. மாணவர்கள்  எந்தத் துறை தங்களுக்கு சரியானது என சிந்திக்கத் துவங்கியிருப்பர். மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையை இந்த தருணம் தான் தீர்மாணிக்கிறது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி. மாணவர்களிடம் உங்கள் துறை  எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்கும் போது பலருக்கும் அது ஒரு முடிவு தெரியாத குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நாட்களில் புதிய  துறைகளும், வேலைத்  தேவைகளும் மாறிக்கொண்டு வருகின்றன.


குறைந்த சத வீத மாணவர்கள் மட்டுமே தங்கள் எதிர்காலம் தொடர்புடைய தெளிவான கண்ணோட்டத்துடனும் அதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபடுகிறார்கள். கல்லூரிகளில் பாடப் பகுதியை முடிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத நிலையில் எதிர்கால வேலைவாய்ப்புத்துறை  குறித்த சில முக்கியத் தகவல்களை மாணவர்களிடம் கூறுவதற்கான சாத்தியமும் குறைவு தான். அப்படிப்பட்ட சில முக்கிய அம்சங்களை உங்களுக்காகத் தருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும். உங்கள் படிப்பு உங்கள் எதிர்கால எல்லைகளைக் குறுக்குவதில்லை. கல்லூரியில் நாம் என்ன பிரிவில் பட்டம் முடித்தோமோ, அதில் தான் நமக்கு எதிர்காலம் உள்ளது என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

துறை மாற்றி நாம் இயங்குவதற்கு தேவைகளான தகவல் பரிமாற்றத் திறன், துறை சார்ந்த அறிவு போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பௌதிகம், இரசாயனம், கணிதம் போன்றவற்றை முடித்துவிட்டு வங்கிப் பணிகளில் அமரவும், வணிகவியலை முடித்துவிட்டு கணினித்துறையில் பணியில் அமர்வதும் சாத்தியம் தான் என்ற உண்மையை உணர வேண்டும்.

நமது எதிர்கால வேலையை தேர்ந்து எடுப்பதில் கல்லூரிப் படிப்புக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் எப்படியான வேலைகள் இன்னும் 5-10 வருடங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று தெரிந்திருப்பது அவசியமானதாகும்.  இதை முழுவதும் நம்பாமல் உங்கள் பகுத்தறிவையும் உபயோகித்து உங்கள் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
 

முதல் தொழில்துறை புரட்சி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயந்திரமயமாக்கலுடன் இங்கிலாத்தில் தொடங்கியது. இரண்டாவது தொழில்துறை புரட்சி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  ஹென்றி ஃபோர்ட் பெருமளவில் கார் உற்பத்தியை தொடங்கியபோது வந்தது. முதல் இரண்டு தொழில்துறை புரட்சிகள் மக்களை பணக்காரர்களாகவும் நகரவாசிகளாகவும் ஆக்கின.  தொழில்களை இலத்திரனியல்  மயப்படுத்துவதால்  மூன்றாவது தொழிற் புரட்சி நடந்து வருகிறது. இனி வரப்போவது தான் 4வது தொழிற்புரட்சி. இது ஏற்கனவே தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.
எதிர்காலம் ஒருவர் கையாளக்கூடியதை விட வேகமாக நெருங்குகிறது! 1998 ஆம் ஆண்டில், கொடாக் நிறுவனம் 170,000 ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன்  85% புகைப்படக் காகிதங்களை உலகளவில் விற்றது. ஒரு சில ஆண்டுகளில், அவர்களின் வணிக மாதிரி மறைந்துவிட்டதுடன் நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைமைக்கே சென்றது (Chapter 11 bankruptcy). கொடாக் நிறுவனத்திற்கு நடந்தது போலவே அடுத்த 5-10 ஆண்டுகளில் நிறைய தொழில்களில் நடக்கும்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஒருபோதும் பிலிம் சுருள்களில் புகைப்படங்கள் எடுக்க மாட்டீர்கள் என்று 1998 இல் நினைத்தீர்களா? ஆரம்பத்தில் 10 KB  பிக்சல்கள் மட்டுமே இருந்த டிஜிட்டல் கமெராக்கள் மூரின் சட்டத்தைப் பின்பற்றி மிக வேகமாக வளர்ந்து அனைத்து அதிவேக தொழில்நுட்பங்கள் போல  சில குறுகிய ஆண்டுகளில் முக்கிய சாதனமாக மாறியது. செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், தானியங்கி  மற்றும் மின்சார கார்கள், கல்வி, 3D  பிரிண்டிங், விவசாயம் மூலம் இது இப்போது மீண்டும் மிக வேகமாக நிகழும். 

தொழிற்புரட்சி 4.0 பற்றி சில உண்மைகள் 

வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் மறைந்துவிடும்: ஒரு பெட்ரோல் / டீசல் இயந்திரம் 20,000 தனிப்பட்ட பாகங்களைக் கொண்டுள்ளது. ஒரு மின்சார மோட்டருக்கு 20 பாகங்கள் மட்டுமே. மின்சார கார்கள் வாழ்நாள் உத்தரவாதங்களுடன் விற்கப்படுகின்றன மற்றும் அவை விற்பனையாளர்களால் மட்டுமே சரிசெய்யப்படுகின்றன. மின்சார மோட்டரை அகற்றி மாற்ற 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பழுதுபட்ட  மின்சார மோட்டர்கள் திருத்துமிடங்களில்  பழுதுபார்க்கப்படாமல்  அவை பிராந்திய பழுதுபார்க்கும் கடைக்கு அனுப்பப்பட்டு அங்கு  அவை ரோபோக்களால் பழுதுபார்க்கப்படுகின்றன.
பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போய்விடும்.: தெரு மூலைகளில் மின்சாரம் வழங்கும் மீட்டர்கள் இருக்கும். நிறுவனங்கள் மின் ரீசார்ஜிங் நிலையங்களை நிறுவும்; உண்மையில், அவை ஏற்கனவே வளர்ந்த நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.  புத்திசாலிகளான பெரிய வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே மின்சார கார்களை மட்டுமே உருவாக்கும் புதிய ஆலைகளை உருவாக்க பணத்தை முதலீட்டுள்ளன.
நிலக்கரி, பெட்ரோலிய  நிறுவனங்களும் தொழில்களும்  போய்விடும்:  பெட்ரோலியத்துக்காக துளையிடுவது நிறுத்தப்படும். எனவே ஒபெக்கும் முக்கியமாக மத்திய கிழக்கும்  சிக்கலில் உள்ளன.
புதுபிக்கத்தக்க சக்தி வளங்கள் : வீடுகள் பகலில் அதிக மின்சார சக்தியை உற்பத்தி செய்து சேமித்து வைத்து மீதியை மின் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும்.  நிறுவனங்கள்  அதை சேமித்து அதிக மின்சாரம் பயன்படுத்தும்  தொழில்களுக்கு விநியோகிக்கும்.  
தனியார் கார்கள்:  எதிர்கால  குழந்தைகள் தற்போதைய கார்களை  அருங்காட்சியகங்களில்  மட்டுமே பார்க்கும். 
மென்பொருள் : அடுத்த 5-10 ஆண்டுகளில்  பெரும்பாலான பாரம்பரிய தொழில்களை மென்பொருள் சீர்குலைக்கும்.  இப்போது உள்ள உலகின் மிகப்பெரிய டாக்ஸி நிறுவனமான ஊபரிடம்   எந்த கார்களும் இல்லை. அது ஒரு மென்பொருட்கருவி மாதிரமே . எந்த ஹோட்டல் சொத்துக்களும் சொந்தமாக இல்லாமல் ஏர்பிஎன்பி (Airbnb) இப்போது உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு(AI): கணினிகள் உலகைப் புரிந்துகொள்வதில் அதிவேகமாக முன்னேறி வருகின்றன. 2017இல், ஒரு கணினி உலகின் சிறந்த செஸ் போன்றதொரு விளையாட்டான Go - விளையாட்டு வீரரை வென்றது. இது எதிர்பார்த்ததை விட 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நடந்துவிட்டது. 
ஐபிஎம் வாட்சன் (IBM Watson) மென்பொருள் காரணமாக அமெரிக்காவில் இளம் வழக்கறிஞர்களுக்கு ஏற்கனவே வேலை வாய்ப்புக்கள் குறைந்து விட்டன. மனிதர்கள் மணிக்கணக்காக செலவு செய்து 70% சரியாக செய்யும் சட்ட ஆலோசனைகளை வாட்சனை பாவித்து சில வினாடிகளில் 90% சரியாக செய்யலாம். எனவே, நீங்கள் சட்டம் படித்தால், உடனடியாக நிறுத்துங்கள். எதிர்காலத்தில்  எல்லாம் அறிந்த வல்லுநர்கள் தவிர  90% குறைவான வழக்கறிஞர்கள்  மாத்திரமே இருப்பார்கள். புற்றுநோயைக் கண்டறிய  வாட்சன் மென்பொருள் ஏற்கனவே உதவுகின்றது.  இது மனிதர்களைவிட 4 மடங்கு துல்லியமானது.
பேஸ்புக் இப்போது மனிதர்களை அடையாளம் காணும் மென்பொருளைக் கொண்டுள்ளது. இது முகங்களை மனிதர்களை விட சிறப்பாக அடையாளம் காண்கின்றது . 2030 ஆம் ஆண்டில், கணினிகள் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. 
ChatGPT போன்ற பல மென்பொருட்கள் இன்று சாதாரண மக்களாலேயே பாவிக்கப்படுகின்றது. 


தானியங்கி  கார்கள்: விரைவில் சாரதிகள் இல்லாத கார்கள் பொதுமக்களுக்கு பாவனைக்கு வரும்.  விரைவில் வாடகைக்கார் தொழில் பாதிக்கப்படத் தொடங்கும். நீங்கள் இனி ஒரு கார் வைத்திருக்க தேவையில்லாதநிலை உருவாகும். இன்றைய மிகச் சிறிய குழந்தைகள் ஒருபோதும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற மாட்டார்கள் என்பதுடன்  ஒருபோதும் கார் வைத்திருக்க மாட்டார்கள். 
ஏறக்குறைய 90-95% குறைவான கார்களே நகரங்களுக்கு தேவைப்படுமாதலால் இது நகரங்களை மாற்றிவிடும். முன்னாள் கார் நிறுத்தும்   இடங்களை பூங்காக்களாக மாற்றலாம்.   குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மக்கள் கார் விபத்துக்களில் இறக்கின்றனர். இப்போது ஒவ்வொரு 100,000 கி.மீ க்கு  ஒரு விபத்து நடைபெறுகின்றது.  தானியங்கி கார்களில்  10 மில்லியன் கி.மீ க்கு  1 விபத்தே நடைபெறும். இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஒரு மில்லியன் உயிர்களைக் காப்பாற்றும். பெரும்பாலான கார் நிறுவனங்கள் மூடப்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய கார் நிறுவனங்கள் பரிணாம அணுகுமுறையை முயற்சித்து ஒரு சிறந்த காரை உருவாக்கும் அதே நேரத்தில் டெஸ்லா, அப்பிள், கூகிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் புரட்சிகர அணுகுமுறையைச் செய்து சக்கரங்களில் கணினியை உருவாக்கும்.
விபத்துக்கள் இல்லாமல், செலவுகள் மலிவாக மாறும்போது காப்புறுதி  நிறுவனங்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும். அவர்களின் கார் காப்புறுதி  வணிக மாதிரி இல்லாமல் போய்விடும்.
வீடு-நிலம் வியாபார நிலவரங்கள் எல்லாம் தலைகீழாக மாறும். ஏனென்றால், நீங்கள் பயணிக்கும்போது வேலை செய்ய முடிந்தால், மக்கள் தங்கள் விலைகூடிய வீடுகளை  கைவிட்டு மிகவும் அழகான மலிவு விலையுள்ள பகுதிகளுக்குச் செல்வார்கள். அத்துடன் வீட்டிலிருந்தே பல வேலைகளையும் அதி வேக இணையத்தை பாவித்து செய்ய முடிவதால் வேலைக்கு கிட்டவோ அல்லது போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் குடியிருக்கவோ தேவையில்லை. 
மின்சார வாகனங்கள் : 2030 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்கள் பிரதானமாக மாறும். நகரங்கள் குறைந்த சத்தமாக இருக்கும், ஏனெனில் அனைத்து புதிய கார்களும் மின்சாரத்தில் இயங்கும்.
மின்சார வாகனங்களால் நகரங்களில்  மிகவும் தூய்மையான காற்று இருக்கும். 
மலிவான மின்சாரம்: மின்சாரம் நம்பமுடியாத மலிவாகவும் சுத்தமாகவும் மாறும். சூரிய உற்பத்தி 30 ஆண்டுகளாக ஒரு அதிவேக வளர்ச்சியில் உள்ளதாயினும்  இப்போது அதன் அசுர வளர்ச்சியை நீங்கள் நேரடியாகவே காணலாம். நிலப்பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்காக மிதக்கும் சூரிய கலங்கள் புதிய வரவாகியுள்ளன. கடந்த ஆண்டு பெட்ரோலிய சக்தியை விட உலகளவில் அதிக சூரிய சக்தி நிறுவப்பட்டது.  எரிசக்தி நிறுவனங்கள் வீட்டு சூரிய மின்கலங்களில் இருந்து போட்டியைத் தடுக்க  தீவிரமாக முயல்கின்றன.  
சுத்தமான நீர்:  மலிவான மின்சாரம் இருந்தால் மலிவாக  ஏராளமான நீர் சுத்திகரிக்கமுடியும். உவர் நீரை நன்னீராக்குவதற்கு இப்போது ஒரு கன மீட்டருக்கு 2 கிலோவாட் மணி (2KWh) மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் எங்களிடம்உவர்நீர் இருந்தாலும், எங்களிடம் குடிநீர் மட்டுமே குறைவாகவுள்ளது. கிட்டத்தட்ட எந்த செலவும் இல்லாமல், ஒவ்வொருவரும்  அவர் விரும்பும் அளவுக்கு சுத்தமான தண்ணீரை பெறுவது  சாத்தியமாகுமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தொழில்துறை புரட்சி 4.0 க்கு வருக. அதிவேக யுகத்திற்கு வருக !!





Saturday, July 1, 2023

யூதர்களின் வரலாறு -20

இருபதாம் நூற்றாண்டு தான் தாயக பூமியில் இருந்து 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக விரட்டப்பட்ட யூதர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய நூற்றாண்டு என்று சொல்லலாம். இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லொணாதவை.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5 மில்லியன் யூதர்கள் உருசியப்பேரரசிலும், 3 மில்லியன் யூதர்கள் போலந்திலும், 2 மில்லியன் யூதர்கள் ஒஸ்ரியா-ஹங்கேரியிலும் , 1.75 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவிலும் மேலும் பல இலட்சம் யூதர்கள் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தனர். இவர்களில் பலர் இக்காலத்தில் அரசியலிலும், வர்த்தகத்திலும் உச்சத்தை தொட்டுவிட்டனர்.
கடந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல சுவிட்சலாந்தின் பாசெல் மாநாட்டின் அறுவடையாக நிறுவப்பட்ட நில வங்கியினூடாக பாலஸ்தீனியர்களின் நிலங்களை அறமற்ற விதத்தில் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். பல உலக நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த செல்வந்தர்களிடம் இருந்து சேகரித்த நிதியை வைத்து நடாத்தப்பட்ட இந்த வங்கி பாலஸ்தீன பிரதேசத்தில் நிலம் வாங்க விரும்பிய யூதர்களுக்கு குறைந்த விலையிலும், குறைந்த வட்டிக்கடன்களை வழங்கியும் நிலங்களை விற்றது. அதே நேரத்தில் நிலங்களின் பத்திரத்தை வாங்கிக்கொண்டு அரேபியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் நிலவங்கி கடன்களை அள்ளி வழங்கியது. கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் கடன் பொறிக்குள் அகப்பட்டு தமது நிலங்களை இழந்தனர். சட்டத்தின் படி இவை சரியென்றாலும் அவை அறமற்ற செயலாக வரலாற்றாசிரியர்களால் பார்க்கப்படுகின்றது.
1914 இல் ஆரம்பமான முதலாம் உலகப்போரும், 1917 இல் ஆரம்பமான உருசியப்புரட்சியும், யூதர்களின் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையாகும்.
படம்: பிரித்தானியாவால் முதலாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட Mark V Tank


முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் கிட்டத்தட்ட 1 கோடி இராணுவ உயிரிழப்பையும், மேலும் 2 கோடி இராணுவத்திற்கு காயங்களும் ஏற்படுத்திய போர் ஆகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன் என்பன நேச நாட்டு அணியிலும் ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி என்பன மைய சக்தி அணியிலும் போர் ஆரம்பிக்கும் போது இருந்தன. ஆஸ்த்திரியா-ஹங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டை ஒரு செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து ஆரம்பித்த இப்போர் படிப்படியாக அண்டைய நாடுகளை உள் இழுத்து இறுதியில் அமெரிக்காவையும் இழுத்து விட்டிருந்தது.
யூதர்கள் இரண்டு அணியிலும் நின்று போரிட்டும், தமது அறிவையும், செல்வத்தையும் அள்ளி இறைத்தும் கொண்டிருந்தனர். அருச்சுனனுக்கு கிளியின் மீதுதான் கண் என்பது போல எவர் வென்றாலும் அவர்களின் உதவியுடன் இஸ்ரேலை உருவாக்குவது தான் அவர்களின் முழு நேர சிந்தனையாக இருந்தது என்றாலும் ஒவ்வொரு அணியிலும் அவர்களை சந்தேகக்கண் கொண்டே பார்த்தனர். அதே நேரத்தில் முழு ஐரோப்பாவையும் வங்குறோத்தடைய வைக்க யூதர்களின் சதியே இந்த போர் என்றும் அவர்களை குற்றம் சாட்டினர்.
முதலாம் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
—------------------
யூத வினோதங்கள்
ஒரு திருமணமாகாத பெண் ஒரு மேசையின் மூலையில் அமர்ந்தால் அடுத்த 7 வருடங்களுக்கு அவருக்கு திருமணமாகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கின்றது. விருந்துகளின் போது திருமணமாகாத ஒரு பெண் அப்படியான ஒரு இடத்தை தெரிவு செய்ய மாட்டார்.
—-------------------
-Kumaravelu Ganesan -

Thursday, June 29, 2023

சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு விவசாயம் - 60% நீர் சேமிப்பு

அறிமுகம்

கரும்புப்பயிர் உலகளவில் மிகவும் பரவலாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்றாகும். இது சீனி, சர்க்கரை, சாராயம் போன்ற குடிவகைக்கு தேவையான எதனோல் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
வடமாகாணத்தைப்பொறுத்த அளவில் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறி வரும் நிலையில், சொட்டுநீர் பாசனம் போன்ற விவசாய முறைகள் பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் போன்ற ஆதாரங்களை பாதுகாக்கவும், கரும்பு அறுவடையை மேம்படுத்தவும் ஒரு நிலையான தீர்வை வழங்குகின்றன. தாய்லாந்து, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் கரும்புப்பயிர்ச்செய்கைக்கு சொட்டு நீர்ப்பாசனம் பாவிக்கப்படுகின்றது. இந்த கட்டுரையில், கரும்புப் பயிர்ச்செய்கையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாட்டையும் அதன் நன்மைகளைகளையும் ஆராய்வோம்.

சொட்டு நீர் பாசனம்: ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

சொட்டுநீர் பாசனம் தாவரங்களின் வேர் மண்டலத்திற்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான துல்லியமான மற்றும் நீர் சிக்கனமான முறையாகும். பெரிய பரப்பளவில் தண்ணீரை பாய்ச்சும் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளைப் போலல்லாமல், சொட்டுநீர் பாசனம் தனிப்பட்ட தாவரங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து, குழாய்கள், உமிழும் கருவிகள் மற்றும் சொட்டுநீர்க்குளாய்களின் வலையமைப்பு மூலம் மெதுவாகவும் நிலையான முறையிலும் தண்ணீரை வழங்குகிறது. இந்த முறையில் ஆவியாதல் மற்றும் நீரோட்டத்தால் ஏற்படும் நீர் இழப்பைக் குறைக்கப்படுவதுடன் இதன் விளைவாக அதிக நீர் பயன்பாட்டுத் திறன் மற்றும் மேம்பட்ட பயிர் வளர்ச்சி ஏற்படுகிறது.
 

கரும்பு விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள்

1. நீர் பாதுகாப்பு: கரும்பு நீர் அதிகம் தேவைப்படும் ஒரு பயிராக இருப்பதால் உகந்த வளர்ச்சிக்கு கணிசமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் நீர் பயன்பாட்டின் மீது துல்லியமான கட்டுப்பாட்டை வழங்கி தாவரங்களின் வேர் மண்டலத்திற்கு நேரடியாக நீர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த இலக்கு அணுகுமுறை நீர் விரயம் மற்றும் ஆவியாதலைக் குறைக்கிறது, இதன் விளைவாக வழக்கமான நீர்ப்பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க நீர் சேமிப்பு ஏற்படுகிறது. இந்த முறையில் நீர்ப்பயன்பாடு 60% அளவில் குறைக்கப்படுகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. பயிர் விளைச்சல் அதிகரிப்பு: சொட்டுநீர் பாசனம் கரும்பு செடிகளுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து வழங்க உதவுவதுடன் ஒரு சிறந்த வளரும் சூழலை உருவாக்குகிறது. உகந்த மண்ணின் ஈரப்பதத்தை பராமரிப்பதன் மூலம், சொட்டுநீர் பாசனம் ஆரோக்கியமான வேர் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி தாவரங்களின் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த காரணிகள் கூட்டாக கரும்பு விளைச்சல் அதிகரிப்பதற்கும் ஒட்டுமொத்த பயிர் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கின்றன.
3. திறமையான ஊட்டச்சத்து மேலாண்மை: தண்ணீருடன், சொட்டுநீர் பாசனத்தின் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக முறை உரங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் துல்லியமான மற்றும் திறமையான பயன்பாட்டை அனுமதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை நேரடியாக வேர் மண்டலத்திற்கு வழங்குவதன் மூலம், ஊட்டச்சத்து கசிவு மற்றும் வீணாகும் ஆபத்து குறைக்கப்படுகிறது. இந்த இலக்கு அணுகுமுறை கரும்பு செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் பெறுவதை உறுதி செய்கிறது, இது சிறந்த தாவர ஆரோக்கியம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கிறது.
4. களை கட்டுப்பாடு: தண்ணீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளிக்காக பயிருடன் போட்டியிடும் களைகள் கரும்பு விளைச்சலுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும். பயிர் வேர்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்குவதன் மூலம் களை வளர்ச்சி குறைகிறது. இதன் விளைவாக, களைக்கொல்லிகள் இரசாயனம் மற்றும் களைக் பிடுங்குவது ஆகியவற்றின் தேவை குறைவதால் செலவு குரைவதுடன் சுற்றுச்சூழல் நன்மைகளும் ஏற்படுகின்றன.
5. குறைந்த சக்தி நுகர்வு: பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது, சொட்டுநீர் பாசனத்திற்கு குறைந்த மின்சக்தி அல்லது வேறு பெட்றோலிய செலவு தேவைப்படுகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோக அமைப்பு மற்றும் குறைக்கப்பட்ட நீர்த் தேவைகள் சக்திச் சேமிப்பிற்கு பங்களிப்பதன் ஊடாக சொட்டுநீர் பாசனம் கரும்பு விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றது.

முடிவாக-

சொட்டுநீர் பாசனம் கரும்பு சாகுபடிக்கு பல நன்மைகளை வழங்குகிறது, இது ஒரு திறமையான மற்றும் நிலையான நீர்ப்பாசன முறையாக அமைகிறது. தண்ணீரை சேமிப்பதன் மூலமும், பயிர் விளைசலை மேம்படுத்துவதன் மூலமும், ஊட்டச்சத்து மேலாண்மையை அதிகரிப்பதன் மூலமும், களைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஆற்றல் நுகர்வைக் குறைப்பதன் மூலமும், சொட்டுநீர் பாசனம் கரும்பு உற்பத்தியை மேம்படுத்த ஒரு சிரந்த தீர்வை வழங்குகிறது. கரும்புக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சொட்டுநீர் பாசன நுட்பங்களைப் பின்பற்றுவது கரும்பு விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் மிகவும் நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
-குமாரவேலு கணேசன்-

Friday, June 23, 2023

 டைட்டான் நீர்மூழ்கி விபத்து- என்ன நடந்தது?

டைட்டானிக் என்ற பெயர் டைட்டான்ஸ் என்ற கிரேக்க கடவுள்களில் இருந்து வந்தது. அத்திலாந்திக் கடலில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பாக மூழ்கி 3800 மீட்டர் ஆழ்த்தில் கிடக்கும் டைட்டானிக்கின் எச்சங்களை  சுற்றுலாப்பயணம் செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த  டைட்டான் என்னும் நீர்மூழ்கிக் குடுவை (submersible) ஆகும். இது ஒரு சிறிய மினிவானின் அளவானது. இப்படியான நீர்மூழ்கிக்குடௌவகள் பல பாவனையில் இருந்தாலும், அவை பெரும்பாலும் உருக்கு, அலுமினியம், டைட்டீனியம் போன்ற உலோகங்களாலேயே செய்யப்படும். அண்மைக்கலமாக கார்பன் பைபர் கொம்பொசிட் என்னும் மிகவும் பாரம் குறைந்த பைபர் கிளாஸ் போன்ற ஒரு மூலப்பொருளால் செய்ய ஆரம்பித்தனர். இந்த கார்பன் பைபர் தான் டைட்டானுக்கு எமனாகியிருக்கின்றது என்று நிபுணர்கள் கருதுகின்றன்ர். உடைந்த பாகங்களை வெளியில் எடுக்கும்போது இது உறுதிசெய்யப்படும், 

காபன் பைபரின் (carbon fibre)- நன்மையும் தீமையும்

இவை உலோகங்களை விட 70% பாரம் குறைந்தவையாகவும் உறுதியானவையாகவும் உள்ளதால்  காபன் பைபரை தற்போது கார்களின் பொடி, பொனட் போன்ற பகுதிகளிலும், விமானங்களில் வெளிப்பகுதி, டென்னிஸ் றக்கெட், பட்மிண்டன் றக்கெட், கொக்கி ஸ்டிக் போன்ற விளையாட்டுப்பொருட்கள், காற்றாலையின் விசிறிகள், நீரின் கீழ் சுழியோடுபவர்களுக்கான ஒக்சிஜன் சிலிண்டர்களை செய்யவும் தற்போது  பெருமளவில் உபயோகிக்கின்றனர். 

இப்படியான கார்பன் பைபரினால் செய்யும் ஒக்சிஜன் சிலிண்டர் போன்றவை 5 வருடத்திற்கொரு முறை ஹைறோ டெஸ்ட் என்னும் அமுக்கச் சோதனை செய்து சான்றிதல் பெற வேண்டும் என்ற விதிமுறை பல நாடுகளில் உள்ளது. சிலிண்டரில் மனிதக் கண்களுக்கு தெரியாமல் ஏற்படும் சிறிய சேதம் கூட பேரழிவு விபத்தை (catastrophic failure) தோற்றுவிக்கும்.

கார்பன் பைபரை டைட்டான் போன்ற நீர்மூழ்கி குடுவைகளில் பாவிப்பது ஆபத்தானது என்று முன்பே பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கார்பன் பைபர் சுவர்களில் ஏற்படும் சிறிய சேதம் ஒரு உள்நோக்கிய வெடிப்பை (implosion) ஏற்படுத்தி பேரழிவு விபத்தை தோற்றுவிக்கும் என்று கூறியிருந்தனர். 

ஆனால் இந்த OceanGate நிறுவனம் எந்தவொரு நாட்டின் சட்டதிட்டங்களிலும் அடங்காது சர்வதேச கடற்பரப்பில் தனது உல்லாசப்பயண தொழிலை செய்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு சாதாரணமான பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறவேண்டிய தேவை இருக்கவில்லை. இவர்களுக்கு காப்புறுதி கூட இருந்திருக்காது! 


படம்: ஹைறோ டெஸ்ட் என்றழைக்கப்படும் சோதனையில் பேரழிவு வெடிப்பை சந்தித்த ஒரு ஒக்சிஜன் சிலிண்டரின் படம்.


Friday, June 16, 2023

யூதர்களின் வரலாறு-19

19 ஆம் நூற்றாண்டானது யூதர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். சியோனிச சித்தாந்தங்களின் தோற்றமும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அரசியலில் பங்கெடுக்கும் முன்னேற்றமும், முதலாவது சியோனிச காங்கிரசின் தோற்றமும், நிலவங்கிகளின் உருவாக்கமும், இதைத்தொடர்ந்தான அலியா என்ற இஸ்ரேல் நோக்கிய பயணமும் வரலாற்றில் முக்கியமானவையாகும்.
19 ஆம் நூண்றாண்டின் ஆரம்பத்தில் பழமைவாத யூத மதம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மதப்பிரிவைப்பற்றி முன்னைய அத்தியாயம் “யூதர்களின் வரலாறு-16” இல் குறிப்பிட்டிருந்தேன்.
1830 களில் யூதர்களுக்கெதிரான இரண்டு இனக்கலவரங்கள் ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேல் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியர்களாலும், முஸ்லிம்களாலும் முன்னெடுக்கப்பட்டது. இதில் யூதர்கள் பலர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டும் உள்ளது பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் இஸ்ரேலின் கலிலி பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பூகம்பமும் யூதர்களின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்பட்டுத்தியது. இப்பூகம்பத்தில் 5000-6000 மக்கள் இறந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்கின்றன.
1960 ஆம் ஆண்டு யூத காங்கிரஸ் என்று அழைக்கப்படும் Alliance Israélite Universelle (AIU) என்னும் ஒரு அமைப்பை பாரிஸ் நகரில் நிறுவினார்கள். இது உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. யூத அடையாளம், கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் இவ்வமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததுடன் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களில் மிகப்பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு முழுமையாக வெளியேற்றப்பட்ட யூதர்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை திரும்ப அனுமதிக்கப்படவில்லை. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறி வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). இவர் ஒரு யூத பெற்றோருக்கு 1804 இல் பிறந்து பின்பு ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறி, 1874 –1880 வரை பிரித்தானியாவின் பிரதம மந்திரியாக உயர்வடைந்திருந்தார். இதே காலப்பகுதியில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பாராளுமன்றங்களுக்கு பல யூதர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இது பல யூதர்களுக்கும் அவர்களின் தாயகம் நோக்கிய போராட்டதிற்கும் உத்வேகத்தைக் கொடுத்தது.
சியோனிசம் என்பது யூதர்களின் பூர்வீக நிலத்தில் யூத தாயகத்தை நிறுவுவதற்கும் பாதுகாப்பதற்குமாக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சித்தாந்த இயக்கமாகும். நவீன சியோனிசம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சியோன் (Zion) என்பது யூதர்களின் பூர்வீக நிலத்திற்கான இன்னொரு பெயராகும். இவ்வியக்கத்தின் முக்கியமான அம்சமாக அலியா (aliya) என்ற தாயகம் நோக்கிய பயணம் முக்கியமானாது. அலியா என்றால் ஹீபுரு மொழியில் மேலே செல்லுதல் என்னும் அர்த்தம் ஆகும். நவீன சியோனிசத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் தியோடர் ஹெர்ஸால் (Theodor Herzl) என்பவரே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத மக்களை வழிநடத்தியோர்களில் முக்கியமானவராவார்.
1897 இல் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற முதல் சியோனிச காங்கிரஸ், யூதர்களின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்க்கல்லாகும். இது பாலஸ்தீனத்தில் யூத தாயகத்தை நிறுவுவது குறித்து விவாதிக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு நாடுகளில் இருந்து யூத அமைப்புக்களை ஒன்று சேர்ப்பதற்குமாக தியோடர் ஹெர்ஸாலால் ஏற்பாடு செய்யப்பட்டது . இம்மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் ஊடாக உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களை ஒன்றிணைக்கவும் அணிதிரட்டவும், சியோனிச இலக்குகளை அடைவதற்குமான ஒரு விரிவான திட்டத்தை வகுக்கவும் இந்த மாநாடு பயன்பட்டது. முக்கியமாக நிலவங்கி என்றழைக்கப்படும் Jewish National Fund என்னும் நிதி நிறுவனத்திற்கான விதை இம்மாநாட்டிலேயே போடப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே, 1901ஆம் ஆண்டில், இந்நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் பின்பு அவ்வங்கியினூடாக பாலஸ்தீன நிலங்களை வாங்கிக்குவித்ததும் வரலாறு. இந்நிதி நிறுவனம் இன்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இயங்குகின்றது.
 
படம்: The first Jewish National Congress - Basel, Switzerland.- 1897 
  
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுகூடல் எதிர்கால சியோனிச நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்ததுடன் இறுதியில் 1948 இல் இஸ்ரேல் அரசை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
19 ஆம் நூற்றாண்டின் யூதர்களின் சியோனிச சிந்தாந்தத்தை தமிழ் விடுதலை இயக்கங்களும் பின்பற்றி பலவற்றை செய்ய முயற்சித்தனராயினும் ஒற்றுமையின்மை என்ற ஒரு முக்கிய காரணத்தால் அவையெல்லாம் அடிபட்டுப்போயின. யூதர்கள் மதம் என்ற ஒரு விடயத்தை ஒற்றுமைக்கு உபயோகித்தனர் என்று கூறுவோரும் உள்ளனராயினும் அதே மதம் பாலஸ்தீனியர்களுக்கு உதவவில்லை என்பது கண்கூடு. இன்று உலகமெங்கும் தமிழர்களும் அரசியலில், பொருளாதாரத்தில், கல்வியில் கொடிகட்டிப்பறக்கின்றனர். முதல் சியோனிச காங்கிரஸ் நடைபெற்ற அதே பாசல் நகர் இன்று யூதர்கள் இல்லாமல் தமிழர்களால் நிறைந்துள்ளது.
—--------------------------------------------
யூத வினோதங்கள்
யூதர்கள் நீண்ட பயணங்களிற்கு முன்பாக சட்டைக் கொலர் அல்லது வேறோர் இடத்தில் சட்டை ஊசி ஒன்றை வெளியில் தெரியாத மாதிரி குத்திக்கொள்வார்களாம். உலோகம் தீய சக்திகளை வெற்றிகரமாக விரட்டும் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்புப் பொருளாக அவர்களால் கருதப்படுகின்றது.
—----------------------------------------------




கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...