Thursday, June 29, 2023

சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு விவசாயம் - 60% நீர் சேமிப்பு

அறிமுகம்

கரும்புப்பயிர் உலகளவில் மிகவும் பரவலாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்றாகும். இது சீனி, சர்க்கரை, சாராயம் போன்ற குடிவகைக்கு தேவையான எதனோல் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
வடமாகாணத்தைப்பொறுத்த அளவில் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறி வரும் நிலையில், சொட்டுநீர் பாசனம் போன்ற விவசாய முறைகள் பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் போன்ற ஆதாரங்களை பாதுகாக்கவும், கரும்பு அறுவடையை மேம்படுத்தவும் ஒரு நிலையான தீர்வை வழங்குகின்றன. தாய்லாந்து, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் கரும்புப்பயிர்ச்செய்கைக்கு சொட்டு நீர்ப்பாசனம் பாவிக்கப்படுகின்றது. இந்த கட்டுரையில், கரும்புப் பயிர்ச்செய்கையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாட்டையும் அதன் நன்மைகளைகளையும் ஆராய்வோம்.

சொட்டு நீர் பாசனம்: ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

சொட்டுநீர் பாசனம் தாவரங்களின் வேர் மண்டலத்திற்கு நேரடியாக தண்ணீரை வழங்குவதற்கான துல்லியமான மற்றும் நீர் சிக்கனமான முறையாகும். பெரிய பரப்பளவில் தண்ணீரை பாய்ச்சும் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளைப் போலல்லாமல், சொட்டுநீர் பாசனம் தனிப்பட்ட தாவரங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளை குறிவைத்து, குழாய்கள், உமிழும் கருவிகள் மற்றும் சொட்டுநீர்க்குளாய்களின் வலையமைப்பு மூலம் மெதுவாகவும் நிலையான முறையிலும் தண்ணீரை வழங்குகிறது. இந்த முறையில் ஆவியாதல் மற்றும் நீரோட்டத்தால் ஏற்படும் நீர் இழப்பைக் குறைக்கப்படுவதுடன் இதன் விளைவாக அதிக நீர் பயன்பாட்டுத் திறன் மற்றும் மேம்பட்ட பயிர் வளர்ச்சி ஏற்படுகிறது.
 

கரும்பு விளைச்சலுக்கு சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள்

1. நீர் பாதுகாப்பு: கரும்பு நீர் அதிகம் தேவைப்படும் ஒரு பயிராக இருப்பதால் உகந்த வளர்ச்சிக்கு கணிசமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் நீர் பயன்பாட்டின் மீது துல்லியமான கட்டுப்பாட்டை வழங்கி தாவரங்களின் வேர் மண்டலத்திற்கு நேரடியாக நீர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த இலக்கு அணுகுமுறை நீர் விரயம் மற்றும் ஆவியாதலைக் குறைக்கிறது, இதன் விளைவாக வழக்கமான நீர்ப்பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க நீர் சேமிப்பு ஏற்படுகிறது. இந்த முறையில் நீர்ப்பயன்பாடு 60% அளவில் குறைக்கப்படுகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. பயிர் விளைச்சல் அதிகரிப்பு: சொட்டுநீர் பாசனம் கரும்பு செடிகளுக்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து வழங்க உதவுவதுடன் ஒரு சிறந்த வளரும் சூழலை உருவாக்குகிறது. உகந்த மண்ணின் ஈரப்பதத்தை பராமரிப்பதன் மூலம், சொட்டுநீர் பாசனம் ஆரோக்கியமான வேர் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி தாவரங்களின் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த காரணிகள் கூட்டாக கரும்பு விளைச்சல் அதிகரிப்பதற்கும் ஒட்டுமொத்த பயிர் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கின்றன.
3. திறமையான ஊட்டச்சத்து மேலாண்மை: தண்ணீருடன், சொட்டுநீர் பாசனத்தின் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக முறை உரங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் துல்லியமான மற்றும் திறமையான பயன்பாட்டை அனுமதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை நேரடியாக வேர் மண்டலத்திற்கு வழங்குவதன் மூலம், ஊட்டச்சத்து கசிவு மற்றும் வீணாகும் ஆபத்து குறைக்கப்படுகிறது. இந்த இலக்கு அணுகுமுறை கரும்பு செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் பெறுவதை உறுதி செய்கிறது, இது சிறந்த தாவர ஆரோக்கியம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கிறது.
4. களை கட்டுப்பாடு: தண்ணீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளிக்காக பயிருடன் போட்டியிடும் களைகள் கரும்பு விளைச்சலுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும். பயிர் வேர்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்குவதன் மூலம் களை வளர்ச்சி குறைகிறது. இதன் விளைவாக, களைக்கொல்லிகள் இரசாயனம் மற்றும் களைக் பிடுங்குவது ஆகியவற்றின் தேவை குறைவதால் செலவு குரைவதுடன் சுற்றுச்சூழல் நன்மைகளும் ஏற்படுகின்றன.
5. குறைந்த சக்தி நுகர்வு: பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது, சொட்டுநீர் பாசனத்திற்கு குறைந்த மின்சக்தி அல்லது வேறு பெட்றோலிய செலவு தேவைப்படுகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோக அமைப்பு மற்றும் குறைக்கப்பட்ட நீர்த் தேவைகள் சக்திச் சேமிப்பிற்கு பங்களிப்பதன் ஊடாக சொட்டுநீர் பாசனம் கரும்பு விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றது.

முடிவாக-

சொட்டுநீர் பாசனம் கரும்பு சாகுபடிக்கு பல நன்மைகளை வழங்குகிறது, இது ஒரு திறமையான மற்றும் நிலையான நீர்ப்பாசன முறையாக அமைகிறது. தண்ணீரை சேமிப்பதன் மூலமும், பயிர் விளைசலை மேம்படுத்துவதன் மூலமும், ஊட்டச்சத்து மேலாண்மையை அதிகரிப்பதன் மூலமும், களைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், ஆற்றல் நுகர்வைக் குறைப்பதன் மூலமும், சொட்டுநீர் பாசனம் கரும்பு உற்பத்தியை மேம்படுத்த ஒரு சிரந்த தீர்வை வழங்குகிறது. கரும்புக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சொட்டுநீர் பாசன நுட்பங்களைப் பின்பற்றுவது கரும்பு விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் மிகவும் நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
-குமாரவேலு கணேசன்-

Friday, June 23, 2023

 டைட்டான் நீர்மூழ்கி விபத்து- என்ன நடந்தது?

டைட்டானிக் என்ற பெயர் டைட்டான்ஸ் என்ற கிரேக்க கடவுள்களில் இருந்து வந்தது. அத்திலாந்திக் கடலில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பாக மூழ்கி 3800 மீட்டர் ஆழ்த்தில் கிடக்கும் டைட்டானிக்கின் எச்சங்களை  சுற்றுலாப்பயணம் செய்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த  டைட்டான் என்னும் நீர்மூழ்கிக் குடுவை (submersible) ஆகும். இது ஒரு சிறிய மினிவானின் அளவானது. இப்படியான நீர்மூழ்கிக்குடௌவகள் பல பாவனையில் இருந்தாலும், அவை பெரும்பாலும் உருக்கு, அலுமினியம், டைட்டீனியம் போன்ற உலோகங்களாலேயே செய்யப்படும். அண்மைக்கலமாக கார்பன் பைபர் கொம்பொசிட் என்னும் மிகவும் பாரம் குறைந்த பைபர் கிளாஸ் போன்ற ஒரு மூலப்பொருளால் செய்ய ஆரம்பித்தனர். இந்த கார்பன் பைபர் தான் டைட்டானுக்கு எமனாகியிருக்கின்றது என்று நிபுணர்கள் கருதுகின்றன்ர். உடைந்த பாகங்களை வெளியில் எடுக்கும்போது இது உறுதிசெய்யப்படும், 

காபன் பைபரின் (carbon fibre)- நன்மையும் தீமையும்

இவை உலோகங்களை விட 70% பாரம் குறைந்தவையாகவும் உறுதியானவையாகவும் உள்ளதால்  காபன் பைபரை தற்போது கார்களின் பொடி, பொனட் போன்ற பகுதிகளிலும், விமானங்களில் வெளிப்பகுதி, டென்னிஸ் றக்கெட், பட்மிண்டன் றக்கெட், கொக்கி ஸ்டிக் போன்ற விளையாட்டுப்பொருட்கள், காற்றாலையின் விசிறிகள், நீரின் கீழ் சுழியோடுபவர்களுக்கான ஒக்சிஜன் சிலிண்டர்களை செய்யவும் தற்போது  பெருமளவில் உபயோகிக்கின்றனர். 

இப்படியான கார்பன் பைபரினால் செய்யும் ஒக்சிஜன் சிலிண்டர் போன்றவை 5 வருடத்திற்கொரு முறை ஹைறோ டெஸ்ட் என்னும் அமுக்கச் சோதனை செய்து சான்றிதல் பெற வேண்டும் என்ற விதிமுறை பல நாடுகளில் உள்ளது. சிலிண்டரில் மனிதக் கண்களுக்கு தெரியாமல் ஏற்படும் சிறிய சேதம் கூட பேரழிவு விபத்தை (catastrophic failure) தோற்றுவிக்கும்.

கார்பன் பைபரை டைட்டான் போன்ற நீர்மூழ்கி குடுவைகளில் பாவிப்பது ஆபத்தானது என்று முன்பே பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கார்பன் பைபர் சுவர்களில் ஏற்படும் சிறிய சேதம் ஒரு உள்நோக்கிய வெடிப்பை (implosion) ஏற்படுத்தி பேரழிவு விபத்தை தோற்றுவிக்கும் என்று கூறியிருந்தனர். 

ஆனால் இந்த OceanGate நிறுவனம் எந்தவொரு நாட்டின் சட்டதிட்டங்களிலும் அடங்காது சர்வதேச கடற்பரப்பில் தனது உல்லாசப்பயண தொழிலை செய்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு சாதாரணமான பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறவேண்டிய தேவை இருக்கவில்லை. இவர்களுக்கு காப்புறுதி கூட இருந்திருக்காது! 


படம்: ஹைறோ டெஸ்ட் என்றழைக்கப்படும் சோதனையில் பேரழிவு வெடிப்பை சந்தித்த ஒரு ஒக்சிஜன் சிலிண்டரின் படம்.


Friday, June 16, 2023

யூதர்களின் வரலாறு-19

19 ஆம் நூற்றாண்டானது யூதர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். சியோனிச சித்தாந்தங்களின் தோற்றமும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அரசியலில் பங்கெடுக்கும் முன்னேற்றமும், முதலாவது சியோனிச காங்கிரசின் தோற்றமும், நிலவங்கிகளின் உருவாக்கமும், இதைத்தொடர்ந்தான அலியா என்ற இஸ்ரேல் நோக்கிய பயணமும் வரலாற்றில் முக்கியமானவையாகும்.
19 ஆம் நூண்றாண்டின் ஆரம்பத்தில் பழமைவாத யூத மதம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மதப்பிரிவைப்பற்றி முன்னைய அத்தியாயம் “யூதர்களின் வரலாறு-16” இல் குறிப்பிட்டிருந்தேன்.
1830 களில் யூதர்களுக்கெதிரான இரண்டு இனக்கலவரங்கள் ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேல் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியர்களாலும், முஸ்லிம்களாலும் முன்னெடுக்கப்பட்டது. இதில் யூதர்கள் பலர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டும் உள்ளது பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் இஸ்ரேலின் கலிலி பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பூகம்பமும் யூதர்களின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்பட்டுத்தியது. இப்பூகம்பத்தில் 5000-6000 மக்கள் இறந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்கின்றன.
1960 ஆம் ஆண்டு யூத காங்கிரஸ் என்று அழைக்கப்படும் Alliance Israélite Universelle (AIU) என்னும் ஒரு அமைப்பை பாரிஸ் நகரில் நிறுவினார்கள். இது உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. யூத அடையாளம், கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் இவ்வமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததுடன் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களில் மிகப்பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு முழுமையாக வெளியேற்றப்பட்ட யூதர்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை திரும்ப அனுமதிக்கப்படவில்லை. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறி வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). இவர் ஒரு யூத பெற்றோருக்கு 1804 இல் பிறந்து பின்பு ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறி, 1874 –1880 வரை பிரித்தானியாவின் பிரதம மந்திரியாக உயர்வடைந்திருந்தார். இதே காலப்பகுதியில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பாராளுமன்றங்களுக்கு பல யூதர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இது பல யூதர்களுக்கும் அவர்களின் தாயகம் நோக்கிய போராட்டதிற்கும் உத்வேகத்தைக் கொடுத்தது.
சியோனிசம் என்பது யூதர்களின் பூர்வீக நிலத்தில் யூத தாயகத்தை நிறுவுவதற்கும் பாதுகாப்பதற்குமாக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சித்தாந்த இயக்கமாகும். நவீன சியோனிசம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சியோன் (Zion) என்பது யூதர்களின் பூர்வீக நிலத்திற்கான இன்னொரு பெயராகும். இவ்வியக்கத்தின் முக்கியமான அம்சமாக அலியா (aliya) என்ற தாயகம் நோக்கிய பயணம் முக்கியமானாது. அலியா என்றால் ஹீபுரு மொழியில் மேலே செல்லுதல் என்னும் அர்த்தம் ஆகும். நவீன சியோனிசத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் தியோடர் ஹெர்ஸால் (Theodor Herzl) என்பவரே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத மக்களை வழிநடத்தியோர்களில் முக்கியமானவராவார்.
1897 இல் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற முதல் சியோனிச காங்கிரஸ், யூதர்களின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்க்கல்லாகும். இது பாலஸ்தீனத்தில் யூத தாயகத்தை நிறுவுவது குறித்து விவாதிக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு நாடுகளில் இருந்து யூத அமைப்புக்களை ஒன்று சேர்ப்பதற்குமாக தியோடர் ஹெர்ஸாலால் ஏற்பாடு செய்யப்பட்டது . இம்மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் ஊடாக உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களை ஒன்றிணைக்கவும் அணிதிரட்டவும், சியோனிச இலக்குகளை அடைவதற்குமான ஒரு விரிவான திட்டத்தை வகுக்கவும் இந்த மாநாடு பயன்பட்டது. முக்கியமாக நிலவங்கி என்றழைக்கப்படும் Jewish National Fund என்னும் நிதி நிறுவனத்திற்கான விதை இம்மாநாட்டிலேயே போடப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே, 1901ஆம் ஆண்டில், இந்நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் பின்பு அவ்வங்கியினூடாக பாலஸ்தீன நிலங்களை வாங்கிக்குவித்ததும் வரலாறு. இந்நிதி நிறுவனம் இன்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இயங்குகின்றது.
 
படம்: The first Jewish National Congress - Basel, Switzerland.- 1897 
  
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுகூடல் எதிர்கால சியோனிச நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்ததுடன் இறுதியில் 1948 இல் இஸ்ரேல் அரசை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
19 ஆம் நூற்றாண்டின் யூதர்களின் சியோனிச சிந்தாந்தத்தை தமிழ் விடுதலை இயக்கங்களும் பின்பற்றி பலவற்றை செய்ய முயற்சித்தனராயினும் ஒற்றுமையின்மை என்ற ஒரு முக்கிய காரணத்தால் அவையெல்லாம் அடிபட்டுப்போயின. யூதர்கள் மதம் என்ற ஒரு விடயத்தை ஒற்றுமைக்கு உபயோகித்தனர் என்று கூறுவோரும் உள்ளனராயினும் அதே மதம் பாலஸ்தீனியர்களுக்கு உதவவில்லை என்பது கண்கூடு. இன்று உலகமெங்கும் தமிழர்களும் அரசியலில், பொருளாதாரத்தில், கல்வியில் கொடிகட்டிப்பறக்கின்றனர். முதல் சியோனிச காங்கிரஸ் நடைபெற்ற அதே பாசல் நகர் இன்று யூதர்கள் இல்லாமல் தமிழர்களால் நிறைந்துள்ளது.
—--------------------------------------------
யூத வினோதங்கள்
யூதர்கள் நீண்ட பயணங்களிற்கு முன்பாக சட்டைக் கொலர் அல்லது வேறோர் இடத்தில் சட்டை ஊசி ஒன்றை வெளியில் தெரியாத மாதிரி குத்திக்கொள்வார்களாம். உலோகம் தீய சக்திகளை வெற்றிகரமாக விரட்டும் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்புப் பொருளாக அவர்களால் கருதப்படுகின்றது.
—----------------------------------------------




Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -09

----------------------------------
எனது காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் பிரசன்னத்தில் நடந்த விவகாரங்களில் பொபி-தாஸ் மோதலும் அதன் பின்பான டெலோவின் அழிப்பும் நினைவு கூரத்தக்கன. 1986 இன் முதற்பாதியில் நடந்த இச்சகோதர படுகொலைகள் பல எமது கண்கள் முன்பாகவே நடந்தேறின. 
படம்: இடமிருந்து வலமாக. 1. சிறி சபாரத்தினம், 2. வே. பிரபாகரன் 3. வே. பாலகுமார் 4. K. பத்மனாபா


வடமராட்சியின் டெலோ பொறுப்பாளரான தாஸ் என்பவருக்கும் இன்னொரு தளபதியான பொபி என்பவருக்கும் இடையில் பலகாலம் நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ள தேநீர்ச்சாலையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வைத்தியசாலையாகையால் ஒருவரும் ஆயுதத்துடன் வரமுடியாது என்பதால் இந்த ஏற்பாடு. தாஸ் குழு அங்கு நிராயுதபாணிகளாக வந்து இருந்தபோது, பொபி குழு வெளியில் இருந்து ஆயுதங்களுடன் உட்புகுந்து அவர்களை வேட்டையாடி கொன்றது. ஈழப்போராட்டத்தில் முதல் முறையாக ஒரு வைத்தியசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தாஸ், காளி மாத்திரமல்லாமல், வைத்தியத்திற்கு வந்திருந்த ஒரு நீதிபதி, ஒரு தாதி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டு பெருமளவானோர் காயமடைந்தனர். இது நடந்தது மார்ச் 11, 1986. இது நடந்தபோது, வைத்தியசாலைக்கு அருகில் நான் நின்றிருந்தேன். தங்களின் அனுமதியில்லாமல் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரை தாஸ் கொலை செய்ததாகவும் பல கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டதாக டெலோ அறிக்கை விட்டது.
13ஆம் திகதி தாஸின் கொலைக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிறி சபாரத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு ஊர்வலமாக செல்லும்போது முத்திரை சந்தியடியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட பலர் காயமடைந்தனர். அந்நேரம் அருகில் EPRLF முகாமில் இருந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இறந்த பொதுமக்களின் உடல்கள் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பொது மக்களுக்கும் டெலோவுக்கும் சமரசம் செய்யும் கூட்டமொன்றும் நடைபெற்றது. பொது மக்கள் தம்மீது கைக்குண்டு வீசியதால் தாங்கள் சுடவேண்டி வந்ததாக டெலோ தரப்பில் சொல்லப்பட்டது எம் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அந்நேரம் 35 ஆயுத இயக்கங்கள் இருந்தாலும் பொது மக்களின் ஊர்வலம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடாத்தியது இதுதான் முதல் முறை. இந்த சம்பவங்களால் EPRLF இயக்கத்தை சேர்ந்த சோதிலிங்கம் போன்றோர் மாணவர்களிடையில் செல்வாக்குப்பெற தொடங்கினர்.
டெலோவின் மீது மக்களின் வெறுப்பு உச்சமாக இருந்த வேளையில் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 1986 ஆம் ஆண்டு புலிகளால் அவர்கள் மீது பெரும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தையாவின் குழு வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்டு இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக சொல்லப்பட்டது . எங்கிருந்து கொண்டு வந்தார்களோ தெரியாது, ஆனால் அவர்கள் ஒருவரையும் எமக்கு தெரியவில்லை.
29ஆம் திகதி காலை 7 மணி போல் திருநெல்வேலி சந்தையில் டெலோவினால் நடாத்தப்படும் சைக்கிள் பாதுகாப்பிற்கு நின்றிருந்த வெளி மாகாணத்தை சேர்ந்த 15 வயது மதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு நடத்திச் செல்லப்பட்டதையும் பக்கத்தில் சிலர் பெட்ரோல் போத்தல்களுடன் பெரியதோரு டயர் ஒன்றை உருட்டி செல்வதையும் எனது அறையின் யன்னலூடாக பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை தவிர வேறொன்றையும் செய்யமுடியவில்லை. ஆடியபாதம் வீதி-கலாசாலை வீதி சந்தியில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள மதகில் அச்சிறுவர்களை இருத்தி சுட்டு கொலை செய்து அதிலேயே டயர் போட்டு எரித்தனர். மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததை பார்த்து அடைந்த அதிர்ச்சி இன்றும் எனக்கு இருக்கின்றது.
கல்வியங்காட்டில் சிறி சபாரத்தினம் தங்கியிருந்த பிரதேசத்தை தவிர மற்றையவிடங்களில் பெரும் சண்டை நடைபெறவில்லை. சில பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் சில சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாயினும் ஒன்றும் பலனளிக்கவில்லை.
கிட்டு திருநெல்வேலி சந்தியில் பிக்கப் வாகனத்தில் இருந்து மக்களுக்கு உரையாற்றினார். கோவிலுக்கு பக்கத்தில் இக்கொலையை செய்ததை மக்கள் கண்டித்ததிற்கு, அவர்கள் விரைவில் சுவர்க்கம் செல்வார்கள் என்று கிட்டு சொன்னதை நான் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.

மே 5 ஆம் திகதி டெலோவின் தலைவர் சிறி சபாரத்தினமும் கோண்டாவிலில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார்.

குமாரவேலு கணேசன்
03/06/2023

மலரும் புலத்து நினைவுகள் -08

----------------------------------------
மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு போகலாம்.
நாம் 1985இல் புதியவர்களாக ராக்கிங்கிற்கு பயந்து நடுங்கி புகுந்த வேளையிலே அங்கு பல விதமான அரசியல் போராட்ட முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் முக்கியமாக யாழ் பல்கலைக்கழக கலாச்சார குழுவின் மண்சுமந்த மேனியர் நாடகத்தையும் அத்தோடு நடைபெற்ற கவிதா நிகழ்வையும் சொல்லலாம்.


 மண்சுமந்தமேனியர் குழந்தை சண்முகலிங்கத்தால் எழுதப்பட்டு சிதம்பரநாதனால் நெறிப்படுத்தப்பட்டது. அதன் கரு முக்கியமாக இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை ஏறி மிதித்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் மக்களை எள்ளிநகையாடுவதாகவும், இந்தியா எங்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக்கூடாது என்ற எண்ணக்கருவை மக்களிடம் கொண்டு செல்வதாகவும் இருந்தது. கவிதா நிகழ்வில் சேரன் உருத்திரமூர்த்தியினது கவிதைகள் முக்கிய பங்கெடுத்திருந்தன. நுஃமானின் ஒரு கவிதையும், ஊர்வசியின் ஒரு கவிதையும் உள்ளது.
அப்பொழுது எமக்கு அண்ணன்மாராக, அக்காமாராக இருந்த பலர் பிற்காலத்தில் நண்பர்களாக இருந்தனர். மோகன்ராஜா (அமெரிக்கா) , யோகர்& செல்வி (அவுஸ்திரேலியா), சேரன்(கனடா) ஆகியோருடன் பழகும் வாய்ப்பு பிற்காலத்தில் கிடைத்தது. கவிதா நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கவிதைகள் சுதந்திர உணர்வை ஊட்டுவதாக இருந்தன. இவற்றைப்பார்த்து அந்நேரத்தில் இருந்த 35 ஆயுத போராட்ட இயக்கங்களில் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். சேரனும், என்னைப்போன்ற மற்றவர்களும் வெளி நாட்டுக்கு தப்பியோடிவிட மிகுதியானோர் இயக்கங்களாலோ அல்லது இராணுவதாலோ கொல்லப்பட்டு, மிகுதியானோர் முள்ளிவாய்க்காலில் ஆகுதியானார்கள்.
86ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைக்கைதிகளை விடுவிக்க கோரி ஒரு சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. அதில் நானும் 3 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டேன். எனது குழுவில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் IPKF ஆல் பிரம்படியில் கொல்லப்பட்ட திருபாகரன், Dr தியாகேசன்(அவுஸ்திரேலியா), வாகீசன் (லண்டன்), பரந்தாமன்(SL), நாகேந்திரன்(AU), பிரபா(AU), மதி அக்கா (திருகோணமலை), ஸிடெல்லா அக்கா (nun, மட்டக்களப்பு) ஆகியோர் ஞாபகம் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் திரு (திருநாவுக்கரசு, அரசறிவியல் துறை உதவி விரிவுரையாளர்) அவர்களின் அரசியல் பேச்சு நடைபெறும். திரு இந்த சுழற்சி முறை உண்ணாவிரதத்தில் பேசிய பேச்சுக்கள் பின்பு புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டங்களிலும், அதன் பின்பு நடந்த பாத யாத்திரைகளிலும் மண்சுமந்த மேனியர் , கவிதா நிகழ்வில் இடம்பெற்ற கவிதைகள் முக்கிய இடம்பெற்றன. முக்கியமாக சேரனின் ‘மூன்று நூற்றாண்டுகள்’ பாடல் மிகவும் பிரபல்யம்
மூன்று நூற்றாண்டுகள் சென்றன_
ஆயினும் அம்மா அம்மா
உன்னுடைய மென்கழுத்தில்
இன்னும் விலங்கு, இன்னும் விலங்கு, இன்னும்விலங்கு- மூன்று
நேற்றொரு காலம் உனது புதல்வரின்
விழிகளை பிடுங்கியே வீசினர் ,
இன்றொரு நேரம் உனது வீட்டின்மேல்
நெருப்பே எரியும் தினமும் -மூன்று
அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நசுக்கினும்
பாடுவோம் உயர்த்திய குரல்களில்
இன்னும் எம் குருதி இந்த மண் நனைத்தபோதிலும்
நடக்கலாம் நீண்டதோர் பயணமே -மூன்று
மண்சுமந்த மேனியர் மற்றும் கவிதா நிகழ்வு 60 இற்கும் மேற்பட்ட முறை மேடையேற்றப்பட்டதாயினும், அவர்களின் பாகம்-02 ஒரு சில மேடையேற்றங்களுடன் நின்றுவிட்டது அல்லது நிறுத்தப்பட்டது. இன்றுவரை ஏன் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

மண்சுமந்த மேனியர் கவிதா நிகழ்வின் "மூன்று நூற்றாண்டு" பாடலின் youtube ஓன்று கிடைத்துள்ளது.(பின்னூட்டத்தில்) 

https://youtu.be/b93DwonWPfY 

குமாரவேலு கணேசன்
20/05/2023

மலரும் புலத்து நினைவுகள் -07

------------------------------------------------
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்பம் பற்றி எழுதியதில் தவறுகள் இருப்பதாக சில நண்பர்கள் அதிருப்தி வெளியிட்டதை தொடர்ந்து தேடலை மேற்கொண்டதன் பயனாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் Ceylon Society of Australia என்ற அமைப்பின் காலாண்டு சஞ்சிகையான The Ceylanka வில் கடந்த மாதம் அல்பிரட் என்பவர் எழுதிய (The American-Ceylon Mission and English education in Jaffna- by D.M. Alfreds -May 2020) ஆய்வுக்கட்டுரையை பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்.
முன்பே சொன்னது போல யாழ்ப்பாண கல்லூரி பங்கர் விடுதி சகல வசதிகளுடன் கூடியது. அது தான் 70களின் பிற்பகுதிகளில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் விடுதியாக(undergraduate section) இருந்தது. தற்போதைய யாழ் பல்கலைக்கழக பதில் உப வேந்தர்(competent authority-2020) பேராசிரியர் கந்தசாமி அந்த பட்டதாரி மாணவர்களில் ஒருவர் என்றும் பின்பு வார்டானாக இருந்ததாகவும் Kando go home என்று சிங்கள மாணவர்கள் தனக்கெதிராக போராட்டம் நடத்தியதாகவும் சொல்வார்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு டானியல் புவர் நூலகத்திற்கு ஒரு 100 மீட்டர் நடந்து சென்று எங்கள் பாடங்களை படிக்க வேண்டும். அதை night study time என்று சொல்வார்கள். மணியடித்தவுடன் வரிசையாக செல்லவேண்டும். சிலர் சாப்பிட்டவுடன் போய் அறையை பூட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். சப் வார்டன் வந்து கதவை தட்டி திறக்கச்செய்து நூலகத்துக்கு அனுப்பி விடுவார். நாங்கள் இருந்த காலத்தில் காராட்டியில் கருப்பு பட்டி எடுத்த ஒரு ஆசிரியர் அங்கு உப விடுதி காப்பாளராக இருந்தார். எங்களுக்கு அவரை சீண்டுவதில் ஒரு சந்தோசம். ஒரு நாள் நாங்கள் கொஞ்சப்பேர் 2ம் மாடியில் உள்ள எமது அறைகளின் கதவுகளை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு யன்னலின் ஊடாக வெளியில் போய் தண்ணீர் குழாயை பிடித்து இறங்கி போய்விட்டோம். காராட்டி மாஸ்டர் வந்து கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதை அவதானித்து தட்டியுள்ளார் (கதவுகளுக்கு ஆமப்பூட்டுதான்). ஒருவரும் திறக்காததால் கோபப்பட்டு கதவு கண்ணாடிக்கு ஒரு பன்ச் விட்டு உடைச்சு பார்த்தபோது உள்ளுக்குள் ஒருவரும் இல்லாததால் இன்னும் டென்ஷன் ஆனதுதான் மிச்சம். கண்ணாடி வெட்டி பிளாஸ்டர் போட்டிருந்ததை அடுத்தநாள் பார்த்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.
யாழ்ப்பாணக்கல்லூரியின் முதலாவது அதிபரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட டானியல் புவர் நூலகம் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இணையான மிகப்பெரிய நூலகமாகும். சுவடிகள் கூட பாதுகாக்கப்பட்டு இருந்தன. நான் அங்கு சிலகாலம் உதவி நூலகராக வேலை செய்தேன். என்னுடன் வேலை செய்த மற்றவர்களில் நீதிதேவன் (இந்தியா), தேவகி (மெல்பர்ன்), மணிமாறன்(டொரொண்டோ). லெறோய்(UK) என்பவர்கள் ஞாபகத்தில் வருகின்றனர்.
நாங்கள் கணித பாட டியூஷனுக்கு தவச்செல்வம் மாஸ்டரின் வீட்டுக்கு அயல்கிராமமான சுழிபுரத்திற்கு வாரத்தில் சில நாட்கள் செல்வதுண்டு.இதே காலப்பகுதியில் தான் (1984/85) சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்காக சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் 7 பேரை புளொட் இயக்கத்தை சேர்ந்த சங்கிலி (கந்தசாமி) தலைமையிலான குழு சித்திரைவதை செய்து கொன்று புதைத்ததும் நடந்தது. இது தான் புலிகளுக்கும் புளட்டிற்கும் இடையில் ஏற்பட்ட முதல் முறுகல் என்று நினைக்கின்றேன்.


(Photo- Daniel Poor Library,, Jaffna College)

குமாரவேலு கணேசன்
16/05/2023

மலரும் புலத்து நினைவுகள் -06

------------------------------------------------
மீண்டும் யாழ்ப்பாணக்கல்லூரி. அப்பொழுது 35 ஆயுத குழுக்கள் இயங்கிவந்த காலம். வட்டுக்கோட்டை சந்தியில் டெலோ ஒரு கொத்துரொட்டி கடை போட்டிருந்தது.
அருமையான கொத்து போடுவார்கள். படிக்கும்போது எங்களிடம் பெரிதாக காசு புளங்காது என்பதால் எப்பவாவது கொத்துச்சாப்பிடுவோம். பங்கர் விடுதிக்கு பக்கத்தில் மெத்தபால என்றோரு சிங்களவர் தேத்தண்ணி கடை வைத்திருந்தார். அங்கு பிளேன்டீ குடிப்போம். இரவு சாப்பாட்டுக்கு போய் வரும் போது அந்த ஒழுங்கையில் உள்ள வீடுகளில் உள்ள மாம்பழம், பப்பாப்பழம் எல்லாம் களவு போனது. விடுதியிலும் முட்டைமா, வீட்டில் இருந்து வந்த இறைச்சிக்கறி எல்லாம் பூட்டிய அறைக்குள் இருந்து கொள்ளை போனது. யாரோ ஹாட்லி ஹாஸ்ட்டலில் இருந்த வந்த ஒரு பூட்டு திறக்கும் எக்ஸ்பேர்ட் எல்லாற்றையும் கதவு பூட்டுக்களையும் ஒரு கீறலும் இல்லாமல் திறந்து உதவிக்கொண்டிருந்ததாக ஒரு வதந்தி உலாவினாலும் வார்டன் வரை செய்தி போகவில்ல்லை.

 
விடுதிச்சாப்பாடு பரவாயில்லை என்றாலும் ஹாட்லி விடுதியில் கொடுத்ததை விட மூன்று மடங்கு விடுதிக்கட்டணம் இருந்தது. பின்ன ஆளுக்கொரு தனியறையும் சியஸ்ற்றா மெத்தையும், buffet சாப்பாடும் எண்டால் காசும் குடுக்கோணும் தானே. ஒருமுறை அரிசி, பருப்பு சரியில்லை என்று கொடுத்த புகாரை பெரிதாக எடுக்காமல் பொறுப்பாக இருந்தவர் சிங்கங்களை சீண்டி விட்டுட்டார். அடுத்தநாள் பாடசாலையில் உள்ள எல்லா நோட்டீஸ் போர்டிலும் விடுதி சாப்பாட்டில் உள்ள குறைகள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் கவனமாக குத்தப்பட்டிருந்தன.. நோட்டீஸ் போட்டிற்கு போட்டிருந்த பூட்டு அப்படியே இருக்க துண்டுப்பிரசுரம் உள்ளுக்கு எப்படி வந்திருக்கும் என்று எல்லோரும் தலையை பிச்சுக்கொண்டனர். முழு மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப்பார்த்ததால் ரொம்ப அவமானமாகி விடயம் பெரிய இடத்துக்கு போய் உடனடியாக எல்லா அரிசி, பருப்பு மூட்டையும் புதிதாக மாற்றப்பட்டது வரலாறு. விடுதி வார்டன் தர்மன் குலோத்துங்கம் போற வாற எல்லாரையும் கேட்டு, தனது புலனாய்வு குழுக்கள் மூலம் தேடியும் நோட்டீஸ் போட்டவனை பிடிக்கமுடியவில்லை.
றக்பி உட்பட அத்தனை விளையாட்டுகளும் அங்கிருந்தன. பாட்மிண்டன், டேபிள் டெனிஸ், டெனிஸ் என்பவற்றுடன் நான் நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் கலவன் பாடசாலை என்றதால பின்னேரங்களில் கிளித்தட்டு விளையாடுவது தவிர்க்கமுடியாததாக இருந்தது. 😀. ஒவ்வொருவருடமும் நடக்கும் சென் பட்ரிக்ஸுடனான பிக் மேட்ச் பெரிய திருவிழாவாக இருக்கும்.
காரைநகரில் இருந்து வரும் நேவிக்கு கண்ணி வெடி வைக்கிறன் எண்டு பொன்னாலை - பருத்துறை ரோட்டில ஒரு இயக்கம் வைச்சுப்போட்டு காத்திருக்கும். ஊருக்கே தெரியும் எண்டால் நேவிக்கு தெரியாதே? அவங்கள் வரவே மாட்டாங்கள். அப்படியொரு சம்பவத்திலேயே டெலி இயக்கத்தலைவர் ஜெகன் மற்றொரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்னொருநாள் EPRLF இயக்கம் காரைநகர் நேவி காம்ப் மீது தாக்குதல் தோல்வியில் முடிந்தது. நேவிக்கு முதலே செய்தி தெரிஞ்சு போயிட்டுது என்று கதைத்தார்கள்.
பின்னேரங்களில் பச்சை நிற ஏசியா சயிக்கிளில் முரளி(பிரசாத்) மற்றும் மலரவன் வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாம் ஹைஏஸ், ஹோண்டா 200 CC எண்டு ஓடிக்கொண்டிருக்க அவர்கள் சைக்கிளில் திரிந்தனர். 85ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஒருநாள் பின்னேரம் சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா சுடப்பட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. எமது அதிபர் கதிர்காமரும் சென் ஜோன்ஸ் அதிபரும் நெருங்கிய உறவினர்கள். வழக்கம் போல வந்த முரளி, மலரவனை பிடித்து எமது அதிபர் என்ன நடந்தது என்று கேட்க, தமது இயக்கத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக சொல்லி சென்றனர்.
35 ஆயுதக்குழுக்கள் இருந்ததால் இளைஞர்களை கண்டால் மக்களுக்கு எப்பொழுதும் ஒரு பயம் இருந்தது. குதிரையால விழுந்து பத்து போட போனபோதும் பரியாரியார் காசு வாங்கமாட்டன் எண்டு உறுதியா சொல்லிப்போட்டார். ஒருமுறை பரீட்சை நேரத்தில் பக்கத்துக்கு கோவிலில் பெரிதாக ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் இடுப்பில் டோர்ச் லைட்டை சொருவி (ஹி ஹி பிஸ்டல்) சேர்ட்டை வெளியில் விட்டுக்கொண்டு போய் ஒரு வெருட்டு விட்டவுடன் ஒலிபெருக்கி அடங்கியது.
இன்னொருமுறை நண்பர் நீதிதேவனுடன் (Uthayan Victor) சேர்ந்து சுழிபுரத்துக்கு கிட்ட உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பிணக்கு தீர்த்தோம். என்னமோ ஒரு காசுப்பிரச்சனை. அதே டோர்ச் லைட் தான் ஆயுதம். இன்னும் வரும்.

குமாரவேலு கணேசன்
12/06/2023

மலரும் புலத்து நினைவுகள் -05

------------------------------------------------
லண்டன் AL படிக்கப்போனவன் எப்பிடி யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தான் எண்டுதானே யோசிக்கிறியள்? அது ஒரு பெரிய கதை, அதுக்கு பிறகு வருவம். பல்கலைக்கழக கதையை எழுத தொடங்க உணர்ச்சிவசப்பட்ட நண்பர்கள் திம்பு, டில்லி என்று என்னை கடத்திக்கொண்டு போனதால அவர்களை ஆசுவாசப்படுத்த பின்னுக்கு ரீவைண்ட் பண்ணவேண்டியதா போய்ச்சு.
நாங்கள் 85இல் நுழைந்தபோது பல்கலை அரசியலாலும் போராட்டங்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதற்கு முதல் வருடம் தான் ஆக்ஸ்போர்ட், ஹார்வர்ட்டில் மெத்தப்படித்த லலித் அத்துலத்முதலி தேசிய பாதுகாப்பமைச்சராக பதவியேற்று கலக்கிக்கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி உட்பட பல பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்ய சொல்லி பெரிய ஒரு போராட்டம் ஆரம்பமானது. அந்தப்போராட்டத்தின் நோக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் தான். ஐந்து நாட்கள் ஏறக்குறைய நூறு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் பாதயாத்திரையாக ஒவ்வொரு கிராமமும் சென்றோம். சனசமூக நிலையங்களில் எமக்கு உணவும் படுக்கையும் அவ்வூர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஒரு லாண்ட்மாஸ்டரில் ஸ்பீக்கர் செட் கட்டப்பட்டிருக்க, பெரிய பதாகை கட்டப்பட்ட இரண்டு கம்புகளை கைகளில் பிடித்துக்கொண்டு
'பஞ்சு முகில்கள் கொஞ்சும் மலையக மக்கள் எழுந்திடுவோம்
மீன்கள் பாடும் வாவி கடந்து கண்விழித்தே வருவோம்'
என்று தெரிந்த எழுச்சிப்பாடல்கள் எல்லாம் பாடிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். போற வழிகளில் உள்ள கிராமங்களில் இருக்கும் எமது பல்கலைக்கழக நண்பர்களை தேடினால், அங்குள்ள அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் சொல்லும் பதிலை கேட்டு கடுப்பேறும். இப்படியான சமூக பங்களிப்பை செய்ய விரும்பாத ஒரு கூட்டம் எப்போதும் தம்மை நியாயப்படுத்த "இவங்கள் வகுப்புக்களை பகிஷ்கரிக்க அல்லது பரீட்சையை பகிஷ்கரிக்க இதை செய்கின்றனர்" என்று சொல்லி வைத்திருப்பார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இக்காலப்பகுதிகளிலும் விரிவுரைகள் நடக்கும். ஆனால் நடக்காது  😀. அதாவது சில விரிவுரையாளர்கள் அந்த பகுதிகளை மீண்டும் நடத்தமாட்டார்கள். ஆனால் அப்பகுதியில் இருந்து பரீட்சை வினாத்தாளில் நிச்சயம் ஒரு வினாவாவது இருக்கும், நம்பிப் போகலாம்.

இந்த படம் 1985 இல் எடுக்கப்பட்டது. இதில் காணப்படும் விமலேஸ் அண்ணா இன்றில்லை. முன்னுக்கு நிற்பவரை பலருக்கும் தெரியும். சோதி அண்ணா என்று எங்களால் அன்று அழைக்கப்பட்ட ஜோதிலிங்கம். பதாகை பிடிப்பதில் ஒருவர் நான் மற்றவர் கொடிகாமம் தேவராஜா.
விமலேஸ் அண்ணாவின் படுகொலை இன்னொரு தனி அத்தியாயத்தில் விஜிதரன் கொலையுடன் சேர்த்து எழுதலாம் என்று இருக்கின்றேன். மிகுதி அடுத்த பகுதியில் தொடரும் ....

குமாரவேலு கணேசன்
09/05/2023


மலரும் புலத்து நினைவுகள் -04

------------------------------------------------
AL எழுதும்போது சுற்றிலும் குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. படித்ததைக்கூட எழுதமுடியாத மனநிலை. தொடர்ந்து நாட்டில் இருக்க முடியாது என்று வெளிநாட்டுக்கு போக முடிவெடுத்து லண்டன் AL படிப்பதற்காக யாழ்ப்பாணக்கல்லூரிக்கு சென்றேன். யாழ்ப்பாணக்கல்லூரி வாழ்க்கை ஒரு வருடமாகினும், பல பாகங்கள் எழுதக்கூடிய அனுபவத்தை தந்த கல்லூரி. கட்டைக்காற்சட்டை, செருப்பணியாத மாணவர்கள், டோமற்றறி விடுதி என்ற ஆண்களுக்கு மட்டுமான ஹார்ட்லி வாழ்க்கையில் இருந்து அயர்ன் பண்ணிய உடுப்புக்களுடனும் சப்பாத்துடன் வலம் வரும் ஆண், பெண் மாணவர்களுடன், ஹொட்டேல் போன்ற தனி அறையுடன் கூடிய பங்கர் ஹோல் விடுதியுடனான யாழ்ப்பாணக் கல்லூரி வாழ்க்கை உண்மையில் ஒரு ஆச்சரியமாகத்தான் முதலில் இருந்தது. 90களில் அதிபர் Dr ஜெபநேசன் மாற்றும்வரை எவரும் எதுவும் என்ன நிறத்திலும் அணியலாம் என்ற சீருடையற்ற கலாச்சாரமே அங்கு நிலவி வந்தது.



 படம்: யாழ்ப்பாணக்கல்லூரி முன்புறத்தோற்றம். இடது புறத்தில் தெரிவது டானியல் புவர் நூலகம். 

தெரியாதவர்களுக்காக இக்கல்லூரியின் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லி செல்லலாம் என்று நினைகிறேன்.
1816 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பழையில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" யூனியன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் பட்டிக்கோட்டா மதப்பள்ளி (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (Danial Poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்ததை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.
பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 இல் இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நான் கல்வி கற்ற 1984-85 காலகட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் இந்துக்களாகவே அங்கு இருந்தனர்.
அங்கும் எனது குழப்படிகள் தொடர்ந்தன. அங்குபோய் சில வாரங்களிலேயே எமது விடுதிக்கு முன்பாகவிருந்த வயல்வெளியில் நின்ற முரட்டுக்குதிரையில் ஏறி சவாரி செய்ய முற்பட்டு கை உடைந்து மூளாய் பரியாரியின் பத்து போட்டுக்கொண்டு திரிந்ததால் "குதிரை" என்ற செல்லப்பெயர் இன்றும் JC நண்பர்களிடையில் தொடர்கின்றது. இன்னும் நிறைய இருக்கு- மிகுதி அடுத்த பதிவில்.

குமாரவேலு கணேசன்
09/03/2023

மலரும் புலத்து நினைவுகள் -03

----------------------------------------------
ஒரு மாற்றத்துக்காக கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி 80களில் எனது கல்லூரிப் பிரதாபங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் O/L எடுத்தாயிற்று. அடுத்தது என்ன? சா/இ இல் தடுக்கி விழுந்தால் சொந்தக்கார டீச்சர்மார் அல்லது அப்பா அல்லது அம்மாவிண்ட சிநேகிதர்கள். நானோ படு குழப்படி. இரண்டு தரம் வெற்றியர் (அதிபர் வெற்றிவேலு) அப்பாவை கூட்டிக்கொண்டு வா எண்டு வீட்டை கலைச்சும் போட்டார். கிழமைக்கு ஒரு புகார் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. எப்பிடியாவது இங்க இருந்து தப்பிக்கவேணும் எண்டு யோசிச்சு யாழ் இந்து அல்லது சென் ஜோன்ஸ் இல் போய் சேர முடிவெடுத்து இருக்க எண்ட தாத்தா ரூபத்தில் இடி வந்து விழுந்தது. தங்கச்சி, நானும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் விடுதியில் இருந்து படிச்சனான்; அங்க உவனை விட்டிடாதை, கொண்டுபோய் பருத்துறை ஹார்ட்லியில ஹாஸ்டலில போட்டுவிடு எண்டிட்டார். பிறகென்ன தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்பட்ட அதிகாரி மாதிரி ஹாஸ்ட்டல் வாழ்க்கை 2 வருடம். ஹாஸ்ட்டல் எண்டால் அது இரண்டுமாடி டோமற்றறி வகை. மேல் மாடியில் A/L மற்றும் சில O/L மாணவர்கள். கீழ் மாடியில் ஜூனியர் மாணவர்கள். இனி சொல்லப்போற விவகாரங்களை இதயம் பலவீனமானவர்கள் வாசிக்கவேண்டாம்.
யாராவது ஒரு மாணவனை கொண்டு வந்து பெட்டி படுக்கை எல்லாம் வைத்துவிட்டு வார்டனுடன் அவர்கள் அதிபரை பார்க்க போய்விடுவார்கள். நாங்கள் அதுக்கிடையில் எங்கள் கைவரிசையை காட்டி விடுவோம். எந்த பூட்டையும் ஒரு கீறல் இல்லாமல் திறக்கும் கில்லாடியான "ஒருவர்" திறந்து விட, பெட்டியில் இருக்கும் முட்டை மா, பொரிவிளாங்காய், எள்ளுப்பாகு எல்லாம் வானரப்படை கொள்ளை அடிச்சு சாப்பிட்டு போத்தல்களை கழுவியும் வைச்சு திரும்ப பூட்டியும் வைச்சிடுவாங்கள். இது போதாதென்று அந்த மாணவன் வந்தவுடன் அவனை பக்கத்தில வைச்சுக்கொண்டே அந்த கட்டிலிலே முன்பு ஒருவன் தூக்கு மாட்டி செத்தவன் எண்டு அவனுக்கு கேக்கிறமாதிரி சொல்லி பின்பு பயப்பிடாதை எண்டு ஆறுதலும் சொல்வார்கள். அநேகமாக இதெல்லாம் விளையாட்டாகவே போயிடும். சிலவேளைகளில் அதிபர் WNS Samuel இடம் இப்படியான சில குற்றச்சாட்டுக்கள் போய் விடும். அவர் ஒருவருக்கும் அடிக்கமாட்டாரெண்டாலும் அவரின் பேச்சு உணர்ச்சிபூர்வமாக எங்களுக்கு கண்ணால் தண்ணி வர வைக்கும். இந்தக்குழப்படியெல்லாம் bullying என்ற வகை என்று சத்தியமாக வெளிநாட்டுக்கு வரும் வரை உணர்ந்ததே இல்லை.
விடுதியில் இருந்த காலத்தில் வார்டன் மகேசன், அருமைநாயகம் சேர் ஆகியோரை ஏமாத்தி வட்டப்பாறைக்கு குளிக்க, நண்டு பிடிக்க போறது, இரவில் மதில் பாய்ந்து நெல்லியடி காந்தி சினிமாவில் அடல்ட்ஸ் ஒன்லி படம் பாக்கிறது, ஹாஸ்ட்டல் கிணத்துக்க குதிச்சு நீந்திறது, விடிய 4 மணிக்கு வியாபாரி மூலையிலுள்ள வர்ணத்தின் வீட்டுக்கு பௌதீகவியல் பாட டியூசனுக்கு போகும்போது போற வழியெல்லாம் குழப்படி பண்ணிக்கொண்டு போறதெண்டு எங்கள் திருகுதாளங்கள் ஒரு 'எல்லைக்குள்ளே தான்' இருந்தன.
ஹார்ட்லியிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணக்கல்லூரிக்கு போனபோது அது முற்றிலும் வேறுபட்ட உலகமாக இருந்தது. சுவாரசியமான வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வாழ்க்கை பற்றி எனது அடுத்த பதிவில்.

படம்: நாங்கள் இருந்த விடுதி குண்டுத்தாக்குதல்களால் சேதமடைந்து விட்டது. இது ஹார்ட்லி பழைய மாணவனும் ஜெர்மனியில் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் இயன் கரண் அவர்களால் கட்டி கொடுக்கப்பட்ட புதிய விடுதி.


மலரும் புலத்து நினைவுகள் -02

----------------------------------------------
இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என்ற பெயரில் கிழட்டு நரி(old Fox) என்று பலராலும் வர்ணிக்கப்படும் ஜே ஆர் ஜெயவர்தனாவால் ஜூலை 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மே 1990 இல் இலங்கையை விட்டு போகும் வரை நடந்த சம்பவங்கள் பற்றியது இப்பதிவு.
வடமராட்சி ஒப்பரேஷன் என்ற வடமராச்சியை கைப்பற்றுவதற்கான போர் நடந்துகொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் இருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சாட்டாக வைத்து ராஜீவ் காந்தி (இந்திரா காந்தி அம்மையார் edited) ஒப்பரேசன் பூமாலை என்றொரு விமானத்தில் இருந்து நிவாரணப்பொதிகளை போடும் திட்டத்தை நிறைவேற்றி இலங்கையை அடிபணிய வைக்க நினைத்தார். அதை JR இலாகவமாக விடுதலை இயக்கங்களுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கு பாவித்தார்.
இந்திய இராணுவம் வந்ததில் இருந்து இந்திய செஞ்சிலுவை சங்கம் வடக்கு கிழக்கில் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்து நடாத்தி வந்தது. அவர்களுடன் ஒரு மாதமளவில் தொண்டராக பல பல்கலைக்கழக நண்பர்களுடன் வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
11ம் திகதி ஒக்டொபர் மாதம் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் 13 ஆவது சீக்கிய ரெஜிமெண்டின் 50 பேரைக்கொண்ட பரா கொமாண்டோக்கள் எமது பல்கலைக்கழக மைதானத்தில் நடுச்சாமத்தில் Mi 8 ஹெலிகளில் இருந்து இறக்கப்பட்டத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கும் IPKF க்கும் நேரடிச்சண்டை ஆரம்பமானது. இது நான் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம். இதற்கு நானே நேரடி சாட்சி.
அங்கு ஏன் 50 பரா கொமாண்டோக்களை நடுச்சாமத்தில் ஹெலியில் இருந்து இறக்கிவிட்டனர் என்பது பலருக்கு புதிராக இருந்தாலும் அதற்கு பல காரணங்களை சொல்வார்கள்.
1. பிரபாகரன் கொக்குவிலில் உள்ள ஒரு முகாமில் பல தளபதிகளுடன் இருந்ததாகவும் அவரையும் அவரின் தளபதிகளையும் உயிருடன் பிடிப்பதற்கு கொமாண்டோக்கள் இறக்கப்பட்டதாக ஒரு கதை.
2. அவர்கள் பல்கலைக்கழக கட்டிடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவுடம் மேலும் பல கொமாண்டோக்கள் இறக்கப்பட்டு படிப்படியாக யாழ் நகரை கைப்பற்றுவது தான் திட்டம் என்று ஒரு கதையும் உள்ளது.
எது எப்படியாயினும், கொமாண்டோக்கள் இறக்கப்படப்போவது புலிகளுக்கு முதல் நாளே தெரியவந்துவிட்டது. இராமநாதன் விடுதி, மற்றும் குமாரசாமி விடுதியில் இருந்து மாணவிகளும் மாணவர்களும் வெளியேற்றப்பட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பூட்டப்பட்டதை நான் நேரடியாக பார்த்தேன். ஆனால் சரியான காரணம் எங்களுக்கு சொல்லப்படவில்லை. அன்றிரவு நிலவு வெளிச்சத்தில் இறக்கப்பட்ட பரா கொமாண்டோக்கள் 35 பேர் குருவி சுடப்படுவது போல் சுடப்பட்டு இறந்தனர். அதில் ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்ட்டார். அதில் இருந்து தப்பி சென்ற சிலர் பிரம்படி லேனில் அன்று தங்கியிருந்த எனது நல்ல நண்பனும் சென் ஜோன்ஸ் பழைய மாணவனும் கோப்பாயை சேர்ந்தவருமான இன்பராஜ் உட்பட எனது சக 3 பல்கலைக்கழக மாணவர்களை கத்தியால் குத்தி கொன்றார்கள். மேலும் பலர் இவர்களை மீட்க பலாலியில் இருந்து தண்டவாளத்தால் கவசவாகனத்தில் வந்த டெல்டா போர்ஸ் படையால் கொல்லப்பட்டு அவர்களின் மீது கவச வாகனம் (Tank) ஏற்றி சென்றார்கள்.


ஒவ்வொரு நாளும் காலையில் ஹோட்டல் அசோக்கின் முன்பாக செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை சந்தித்து அவர்களின் வாகனங்களில் பல பகுதிகளுக்கும் சென்று நிவாரணம் கொடுப்பதுதான் எமது வேலை. புலிகளுடனான சண்டை தொடங்குவரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
ஒரு நாள் வரணியில் ஒரு பாடசாலையில் வைத்து நிவாரணம் வழங்கும்போது SLAF ஹெலி சுடத்தொடங்கிவிட்டது. உடனே எமது சிறிய மினிபஸ்/மினிவான் ஐ எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினோம். எமது கண்ணுக்கு முன்பாகவே ஹெலி சூட்டினால் சுட்டிபுரம் கோவிலில் முன்பாக அமைத்திருந்த கிடுகுக் கொட்டகை தீப்பற்றியெரிந்தது. இந்திய அதிகாரிகள் உட்பட நாம் எல்லோரும் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து சேர்ந்தோம். இவ்வளவுக்கும் எமது வாகனத்தில் சிவப்பு க்ரோஸ் அடையாளம் இருந்தது.

குமாரவேலு கணேசன்
04/03/2020

மலரும் புலத்து நினைவுகள் -01

----------------------------------------------

கோவிட்-19 லொக்டவுனுக்க இருந்து என்ன செய்யிறது என்று யோசிச்சு, நானும் எனது இளமைக்கால நினைவுகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். எனது புலத்திலான வாழ்க்கை மலையும் மலைசார்ந்த தென் மாகாண ஊரான ஹுலந்தாவ என்ற ஊரில் ஆரம்பித்து, 80களின் ஆரம்பத்தில் ஹார்ட்லி, யாழ்ப்பாணக்கல்லூரி ஆகியவற்றிலும் அதன் பின்பு யாழ் பல்கலைக்கழகத்திலும் அதன் பின்பு 10 வருடங்கள் வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் 2000 ஆண்டளவில் நாட்டை விட்டு வெளியேறும் வரை தொடர்ந்தது. எழுதுவதற்கு நிறைய இருந்தாலும் ஒரு போட்டோவை இன்று எனது நண்பர் Nagendram இன் facebook இல் பார்த்தவுடன் அதைப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். அடுத்த பதிவுகளில், வெலிக்கடை சிறைக்கைதிகள் போராட்டம், விஜிதரனை விடுவிப்பதற்காக நாம் செய்த போராட்டங்கள், பின்பு கிழக்கில் எமது வாழ்வுக்கான போராட்டங்கள் என்று தொடரும்.
இந்திய செஞ்சிலுவைச்சங்கமும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து வடமாகாணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதம் எமது விரைவுரைகளுக்கு சமூகமளிக்காது அதில் ஈடுபட்டோம். இந்தப்படம் ஹோட்டல் அசோக்கின் முன்பாக இந்திய செஞ்சிலுவை சங்க அதிகாரி சைகால் (Saigal?) உடன் எடுத்த படம். அந்த அனுபவம் பற்றி அடுத்த பதிவில்----
04/03/2020




Sunday, June 11, 2023

கிறைச்சேச் தமிழ்ச் சங்க சஞ்சிகை தமிழருவி- 2005 இல் நான் எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டதால் அதை இங்கு மீண்டும் பதிகின்றேன். இது எனது தொலைந்து போன புளொக்கிலும் இருந்தது.  

நியூசிலாந்தின் கிறைச்சேச் வாழ் தமிழர்களிடையே விட்டமின்-D  பற்றாக்குறை – குமார் கணேசன் 

அண்மையில் கிறைச்சேச் வாழ் தமிழர்கள் பலர் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் வயது ஒன்றில் இருந்து எழுபது வரை வேறுபடும். இதுவரை செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளின் படி (ஏறக்குறைய 20 பேர்)  100% ஆனவர்கள் விட்டமின் D பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. 

இந்தக்கட்டுரையின் பெரும்பகுதி THE HEALING POWER OF SUNLIGHT & VITAMIN D, An exclusive interview with Dr. Michael Holick-2005 என்ற ஆங்கில கட்டுரையின் சுருக்கம் ஆகும்.


என்புருக்கி, மனவழுத்தம்(depression), புறஸ்டேட் ஆண்குறி புற்றுநோய், மார்பு புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடற்பருமன்(obesity) போன்ற வியாதிகளை விட்டமின் D தடுக்கின்றது. விட்டமின் D ஆனது விட்டமின்களிலேயே மிகவும் குறைவாக கவனத்தில் எடுக்கப்பட்ட  விட்டமின் ஆகும். இது இலவசமாக கிடைப்பது காரணமாக இருக்கலம். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களின் ஒரு பகுதியான UVB உங்களது தோலில் படும்போது உங்கள் உடல் இதனை உற்பத்தி செய்கிறது.  மருந்துக் கம்பனிகள் சூரிய ஒளியை விற்பனை செய்வதில்லையாதலால்  இதன் மருத்துவ பலாபலன்கள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை.  பெரும்பாலான மக்கள் விட்டமின் D இனதும் உடல் ஆரோக்கியத்தினதும்  உண்மையான கதையை அறிந்து இருப்பதில்லை என்பதே உண்மை ஆகும். 


விட்டமின் D  யும் சூரிய வெளிச்சமும் பற்றிய நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத பதினைந்து உண்மைகள்

1. விட்டமின் D ஆனது சூரிய கதிர்களில் உள்ள புற ஊதா கதிர்கள்(UVB) உங்கள் தோலில் படும்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

2. விட்டமின் D ஐ உற்பத்தி செய்யத் தேவையான புற ஊதாக்கதிர்கள் சதாரண கண்ணாடியை ஊடுருவுவதில்லை. இதனால் நீங்கள் காருக்குள் இருக்கும் போதோ அல்லது வீட்டினுள் இருக்கும்போதோ விட்டமின் D ஐ பெறப்போவதில்லை. 

3. தேவையான அளவு விட்டமின் D ஐ சாப்பாட்டின் மூலம் பெறுவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத விடயம் ஆகும்.  விட்டமின் D ஐ பெறுவதற்கு சூரிய ஒளியே ஒரேயொரு  நம்பிக்கையான வழியாகும்.

4. தேவையான அளவு விட்டமின் D ஐ பெறுவதற்கு மாத்திரம் ஒருவர் பத்து உயரமான கிளாஸ் விட்டமின் D சேர்க்கப்பட்ட  பாலை ஒவ்வொரு நாளும் அருந்துதல் வேண்டும்!

5. விட்டமின் D ஐ பெறுவதிற்கு பூமத்திய ரேகைக்கு தூரத்தில் வசிப்பவர்களுக்கு நீண்ட நேர சூரிய வெளிச்சம் தேவை ஆகும்.  கனடா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் பல பகுதிகள் பூமத்திய இரேகைக்கு மிக தூரத்தில் அமைந்த்துள்ளன.

6. ஒரே அளவு விட்டமின் D ஐ பெறுவதிற்கு  கருப்புத்தோல்களை உடையவர்களுக்கு வெள்ளைத்தோல்களை உடையவர்களிலும் பார்க்க 20-30 மடங்கு அதிக அளவான சூரிய வெளிச்சம் தேவையாகும். இதனாலேயே புரஸ்டேட் புற்றுநோய் கருப்பினத்தவர்களிடையே ஒரு கொள்ளை நோயாக காணப்படுகிறது. இதற்கு சூரிய வெளிச்சம் போதாமையே காரணம் ஆகும்.  

7. கல்சியம் உள்ளெடுக்கப்படுவதற்கு போதிய அளவு விட்டமின் D அதியாவசியமாகும். போதிய அளவு விட்டமின் D இல்லாவிடின் உங்கள் உடல் கல்சியத்தை உள்ளெடுக்கமுடியாது கல்சியம் விரயமாக்கப்படும்.

8. நீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையை ஒரே இரவில் குணப்படுத்த முடியாது. உங்கள் எலும்புகளையும் நரம்புத்தொகுதியையும் மீளமைப்பதற்கு பல மாத கால விட்டமின் D மருந்தும் சூரிய வெளிச்சமும் தேவையாக இருக்கும்.

9. மிக பலவீனமான சண்ஸ்கிறீன் (SPF=8) கூட உங்கள் உடல் விட்டமின் D உற்பத்திசெய்வதை 95% வீதத்தால் குறைக்கும்.

10. சூரிய வெளிச்சத்தின் மூலம் அளவுக்கதிகமாக விட்டமின் D உற்பத்தி செய்வது சாத்தியமில்லை. உங்கள் உடல் தானாகவே மட்டுப்படுத்தி தனக்குத் தேவையானதை மாத்திரமே உற்பத்தி செய்யும். 

11. உங்கள் மார்பெலும்பை அழுத்தும்போது நோவு ஏற்பட்டால் நீங்கள் நீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையால் இப்பொழுது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

12. விட்டமின் D ஆனது உபயோகப்படுத்தப்படுமுன் உங்கள் சிறுநீரகத்தாலும் ஈரலாலும்  தூண்டப்படுகிறது. 

13. சிறுநீரக நோய்களும் ஈரல் பாதிப்பும் உங்கள் உடலில் விட்டமின் D இன் தூண்டலை பெரிதும் பாதிக்கும். 

14. உங்கள் உடலுக்கு சூரிய வெளிச்சம் தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வதை சண் ஸ்கிறீன் உற்பத்தியாளர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் இது அவர்களின் விற்பனையை பெரிதும் பாதிக்கும். 


15. விட்டமின் D ஆனது மிகவும் சிறந்த நோய் நிவாரணியாக இருந்த போதிலும், உங்கள் உடல் இதனை முற்றிலும் இலவசமாக உற்பத்தி செய்கிறது.

விட்டமின் D பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களும் அதன் அறிகுறிகளும். 


விட்டமின் D பற்றாக்குறையால் சாதரணமாக ஏற்படும் நோய் “ஒஸ்ரியோபோரசிஸ்” என்பது ஆகும். இது கல்சியம் உறிஞ்சப்படுவதை பெரிதும் பாதிக்கும்.  

ஆண்குறி புற்றுநோய் (prostate cancer), மார்பு புற்றுநோய், சூலக புற்றுநோய், குடல் புற்றுநோய், மனவழுத்தம் மற்றும் மூளைக்கோளாறு ஆகிய நோய்களை போதுமான அளவு விட்டமின் D தடுக்கின்றது.

என்புருக்கி ("Rickets") என்பது விட்டமின் D பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு சிதைவடையும் ஒரு நோய் ஆகும். 

விட்டமின் D பற்றாக்குறை நீரிழிவு நோயை (type 2 diabetes) தீவிரமாக்குவதுடன் இன்சுலின் உற்பத்தியையும் பாதிக்கிறது. 

உடற்பருமன் நோய் விட்டமின் D இன் பயன்பாட்டை பாதிப்பதால் அவர்களுக்கு இரண்டு மடங்கு விட்டமின் D தேவைப்படுகிறது. 

Psoriasis என்ற சொறி நோயை குணப்படுத்த விட்டமின் D உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.

விட்டமின் D பற்றாக்குறை மூளைக்கோளாறு நோயை உருவாக்குகின்றது.

பருவகால உணர்ச்சிக் கோளாறு (Seasonal Affective Disorder) ஆனது சூரிய வெளிச்சம் போதாததால் ஏற்படுகிறது. 

வாரத்தில் 2-3 தடவை அளவான சூரிய வெளிச்சத்தில் நிற்பது நீரிழிவு, புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் உருவாவதற்கான அபாயத்தை 50%-80% ஆக குறைக்கிறது.  

ஒவ்வொரு நாளும் விட்டமின் D (2000 IU) உட்கொளும் குழந்தைகளுக்கு அடுத்த 20 வருடங்களில் நீரிழிவு நோய் (type 1 diabetes) ஏற்படுவதற்கான அபாயம் 80% ஆல் குறைக்கப்படுகிறது. 

விட்டமின் D பற்றாக்குறையின் அதிர்ச்சியான புள்ளிவிபரம் (ஐ.அமெரிக்கா)


32% ஆன மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40% ஆன அமெரிக்க மக்கள் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

42% ஆன குழந்தை பெறும் வயதினரான ஆபிரிக்க அமெரிக்க பெண்கள்  விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

48% ஆன் இளம் பெண்கள் (9-11 years old) விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

60% ஆனவரை எல்லா வைத்தியசாலை நோயாளர்களும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

76% ஆன கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். இக்குழந்தைகள் அவர்களின் வாழ்வின் பிற்பகுதியில் நீரிழிவு, முடக்குவாதம், மூளைக்கோளாறு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

80% வரை ஆன விடுதிகளில்(nursing home) வதியும் நோயாளிகள் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் என்ன செய்யலாம்

அளவான சூரிய வெளிச்சத்தைப் பெறுவது உங்கள் ஆரோக்கியத்தைப் பெருக்க மிகவும் இலகுவான வழி ஆகும். இதற்கு முடியாதவர்கள் கொட்லிவர் ஓயில் (codliver oil) போன்ற விட்டமின் D செறிந்த உணவுப்பொருள்களை நாளாந்தம் உட்கொள்ள வெண்டும். ஆனால் விட்டமின் D இன் அளவை சோதனை செய்யாமல் நீங்களாகவே கொட்லிவர் ஓயில் உட்கொள்வது நல்லதல்ல. 


Saturday, June 10, 2023

 யூதர்களின் வரலாறு-18


இடைக்காலம் (Medieval Period) முழுவதும் யூதர்கள் ஐரோப்பாவில் அடிக்கடி வெளியேற்றப்படுவதை எதிர்கொண்டனர். இதற்கு காரணங்களாக  பயிர் அழிவுகள் மற்றும் நோய்கள் பரவுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு மத, பொருளாதார, சமூகக்காரணங்களுக்காக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 13ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்தும் 15 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜேர்மனி ஆகிய நாடுகள் இருந்தும் யூதர்கள் வெளியேற்றப்பட்டது இவற்றில் முக்கியமானவையாகும்.  

நித்தியானந்தா சுவாமிகள் போல டுபாக்கூர்கள் சாமிகளும் அந்நேரத்திலும் இருந்தார்கள் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். 2000 ஆண்டுகளாக ஒரு இறைதூதரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூத மதத்தவர்களுக்கு 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நான் தான் அந்த இறை தூதர் என்று கரடி விட்டார் துருக்கியைச் சேர்ந்த  Sabbatai Zevi என்னும் ஒரு யூத மதகுரு. பல யூத மக்கள் அவரைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் போது விடயம் அப்போதைய இஸ்லாமிய பேரரசின் சக்கரவர்திக்கு சென்றது. மதகுருவுக்கு  இரண்டு தெரிவுகள் மன்னனால் கொடுக்கப்பட்டது. ஒன்று- மரண தண்டனை, இரண்டாவது இஸ்லாத்துகு மதம் மாறுவது. அவரின் தெரிவு இரண்டாவது என்றதும் அவரை இறைதூதர் என்று நம்பியவர்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்பு தலைப்பாகையை கட்டிக்கொண்டு குர்ரானுடன் அவர் காணப்பட்டாராம். 

17 ஆம் நூறாண்டில் உக்ரேனிய பேரரசில் நடந்த இன்னொரு யூத இன அழிப்பைச் சொல்லலாம். போஹ்டன் (Bohdan Khmelnytsky) என்னும் உக்ரேனிய தளபதியால் போலந்து-லித்துயேனியா, ரஸ்யா நாடுகளில் வாழ்ந்த கொசாக்குகளின் அரசுகளிற்கெதிரான  கலகங்களில்  ஒரு இலட்சம் யூதர்கள் கொல்லப்ப்பட்டனர். 

18ஆம் நூற்றாண்டின் முடிவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நடந்த பிரெஞ்சுப்புரட்சி மொத்த ஐரோப்பாவிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரான்ஸில் ஏறக்குறைய 1% ஆகவிருந்த பிரபுக்களும், மத குருக்களும் 40% ஆன சொத்துக்களை அனுபவித்துக்கொண்டும், மக்களுக்கு மேல் அதி கூடிய வரிகளை விதித்துக்கொண்டும் இருந்ததால் இந்த புரட்சி ஏற்பட்டது. புரட்சியின்போது 1792 இல்  பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனராயினும் புரட்சி 1799 வரை தொடர்ந்தது. அதன் பின்பு நெப்போலியன் மன்னனாக முடிசூடிக்கொண்டான், 

எகிப்தையும், இஸ்ரேலை உள்ளடக்கிய கலிலீ, சிரியா ஆகிய நாடுகளை ஆண்ட ஒட்டோமான் பேரரசையும்  வெல்ல வேண்டிய தேவை இருந்ததால் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பரந்து வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களை தன்னுடன் சேர்ந்து போரிட நெப்போலியன் அழைப்பு விட்டான். போரில் வெற்றி பெற்றால் ஜெருசலேம் யூதர்களிடம் கையளிக்கப்படும் என்று பகிரங்கமாக விளம்பரமும் கொடுத்தான். ஆனால் இது ஒரு கபட நோக்கமே என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தபோதும் நெப்போலியனால் எகிப்து, சிரியா, இஸ்ரேலை முழுமையாக கைப்பற்ற முடியாமல் பிரான்ஸுக்கு திரும்பவேண்டியேற்பட்டது. அதன் பின்பு பெல்ஜியம், இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், ஒல்லாந்து, போலந்து ஆகிய முக்கிய நாடுகளை கைப்பற்றி குறுகிய காலம் ஆண்ட நெபோலியன் 1815ஆம் ஆண்டு வோட்டர்லூ போரில் 7 ஐரோப்பிய நாடுகளின் கூட்டிடம் தோற்கவேண்டியேற்பட்டது.  கிட்டத்தட்டநெப்போலியனின்  35 ஆண்டு கால ஆட்சியில் யூதர்கள் பெரிதாக துன்புறுத்தப்படவில்லை.

19ஆம் நூற்றாண்டு யூதர்களுக்கு மிக முக்கியமானதொரு காலப்பகுதியாகும். பல நாடுகளில் அவர்கள் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அரசியலிலும் ஈடுபட ஆரம்பித்தனர். அந்த விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.   

—----------------

படம்: THE TEMPLARS’ TUNNEL, AKKO (ACRE)- வட இஸ்ரேலில் கடற்கரையாக அமைந்துள்ள Acre என்னும் நகரில் 1000 வருடங்களுக்கு முன்பாக சிலுவை யுத்த காலத்தில் தேவாலய புனித வீரர்களால் அமைக்கப்பட்ட நிலத்தடி சுரங்கப்பாதை.தேவாலய புனித வீரர்கள் (Knight Templers) என்பது பாப்பரசரின் இராணுவ துறவற அமைப்பு. 1799 இல் நெப்போலியனின் இஸ்ரேல், சிரியா படையெடுப்பின்போது  இங்கு தான் தோல்வியடைந்து பிரான்ஸுக்கு திரும்பினான். 

—----------

யூத வினோதங்கள்


யூதர்கள் கல்லறைகளுக்கு அல்லது அவர்களின் சுடலைகளுக்கு சென்றபின் நேர் வழியில் வீடு திரும்ப மாட்டார்கள். கல்லறைகளை சுற்றி கெட்ட ஆவிகள், பேய்கள் நிரம்பியிருக்கும் என்றும் நேரே வீட்டிற்கு சென்றால் உங்கள் பின்னால் அவை வீடிற்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றனர். 

-குமாரவேலு கணேசன் -



Friday, June 9, 2023

 ஆடு கதறியது- நவாலியூர் சோமசுந்தரப்புலவர்


சில சைவக்கோயில்களில் ஆடுகோழிகளைப் பலியிடு கிறார்கள். பிள்ளையைப்போல வளர்த்த ஆடுகளைப் பலியிடும் இக்கொடுஞ்செயல் நரகத்துன்பத்தைத் தரும். தன் மகன் பலி செய்யப்பட்டதை அறிந்த தாயாடு மன முருகிப் புலம்புகின்றது.




1,

ஆசை மகனேயென் அன்பான கண்மணியே 

நேசத் துரையே நெடும்பயணம் போனாயோ

2

ஓராறு மாதம் உடம்புநொந்து பெற்றெடுத்த 

சீராளா! தெற்குத் திசைப்பயணம் போனாயோ

3

நேராத கோவிலெல்லாம் நேர்ந்து தவமிருந்தே 

ஆராத காதலுடன் ஐயோ நான் பெற்றெடுத்தேன்

4.

கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகுவித்து நோன் பிருந்து 

செல்வக் குமரா சிறப்புடனே பெற்றெடுத்தேன்

5

ஆரக் கழுத்தழகா அஞ்சனப்பூக் கண்ணழகா 

வார நடையழகா மாராப்பு மேனியனே!

6.

துள்ளு நடையழகுஞ் சோதி முகத்தழகுங் 

கொள்ளுஞ் செவியழகுங் கோமளமே காண்பதெப்போ

7

நீல மயிரழகும் நெற்றிச் செகிலழகுங் 

கோல மருப்பழகுங் கோமளமே காண்பதெப்போ

8

பூங்கரும்பே தேனேயென் பொன்னே நவமணியே 

தாங்கிச் சுமந்தகுடல் தழலா யெரியுதடா

9

யாழுங் குழலுமென மின்பக் குதலைமொழி 

நாளும் பொழுதுமினி நான்கேட்ப தெந்நாளோ

10

அம்மா வெனவழைக்கும் ஆசைத் திருக்குரலை 

எம்மா தவக்கொழுந்தே நான்கேட்ப தெந்நாளோ

11

புல்லுந் தவிடும்நல்ல பிண்ணாக்குந் தீற்றியுனை 

அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்தாரோ

12

அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்ததெலாங் 

கல்லுங் கரையக் கழுத்தவெட்டு வெட்டிடவோ

பாஅய் பாஅய்

13

கிம்புரிப் பூணணிந்து கிண்கிணிப்பொற் றார்சூட்டி வரிசரவு? 

வம்ப ரலங்கரிக்கப் பார்த்து மகிழ்ந்தேனே!!

14

வன்னப்பொற் றேரேறி மாப்பிளைபோற் சென்றாயே 

இன்னும் வரக்காணேன் எங்குற்றாய் எங்குற்றாய்

15

பெண்ணை மணந்தெனது பிள்ளைவரு வானென்றே 

எண்ணி யிருந்துநா னேமாந்து போனெனெடா

16

காக்கைக் கரைவும் கனாவும் பலித்ததடா 

ஆக்கை துடிக்குதடா அடிவயிறு வேகுதடா

-பாஅய் பாஅய்

17

காரியமொன் றின்றியிந்தக் கன்னெஞ்சப் பேதையர்கள் 

மாரியம்மன் கோவிலிலே வாட்பலிக்கு வைத்தாரோ

18

பிள்ளையைப் போல்வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர் 

துள்ளித் துடிதுடிக்கத் துண்டாக வெட்டினரோ

19

காலிலொரு பாவி கழுத்திலொரு மாபாவி 

கோலி யிழுக்கக் கொடும்பாவி வெட்டினனோ

பாஅய் பாஅய்

20

கோலி யிழுக்கக் குளறி மனஞ்சிதறி 

ஆரை நினைந்தோ வழுதாயென் கண்மணியே

21

ஓங்கிய கத்தி விழும்போ துடல் நடுங்க 

ஏங்கி யெனைநினைந்தென் னம்மாவோ வென்றாயோ!

22

தூவாரும் மேனி சுழன்று துடிதுடிக்க 

ஆவாவென வாய்விட் டையா விறந்தனையோ

23 

நெஞ்சந் துடிக்குதடா நினைவுதடு மாறுதடா 

பஞ்சிலே தீப்போற் பாழ்வயிறு வேகுதடா -பாஅய் பாஅய் -


24 

உன்றன் றசையரிந்தே யோலைக் குடலைகட்டிச் 

சென்றுசென்று விற்றனரோ தின்றுபசி யாறினரோ

25 

ஆசாரி மேலோ அதிகாரி தன்மேலோ 

மாமாரி மேலோவிவ் வன்பழிதான் சேருமடா

26 

கொன்றவன் மேலோ கொடுத்தவன் தன்மேலோ 

தின்றவன் மேலோவித் தீயபழி சேருமடா

27

வாயில்லாச் சீவன் வதையாதீர் என்று சொல்ல 

வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ

28 

சைவமு மில்லையோ சான்றோரு மில்லையோ 

தெய்வமு மில்லையோ வென்மனது தேற்றிடவே 

பாஅய் பாஅய்.




யூதர்களின் வரலாறு-17


ரோம, இஸ்லாமிய பேரரசுகளால் அவர்களின் தாயக பூமியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்கள் 300 ஆண்டுகால சிலுவைப்போரின் பின்னான காலத்தில் உலகமெங்கும் சிதறி வாழ்ந்துகொண்டிருந்தனர். ஆனால் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் செல்வந்தர்களாக வாழ்வதைக்கண்ட ஆட்சியாளர்களும் மற்றைய இனத்தவர்களும் அவர்கள் மீது காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். குறிப்பாக, இயேசுவின் கொலைக்கு காரணமானவர்கள் என்ற பழிச்சொல் அவர்களை விடாமல் துரத்தியது. கிறிஸ்துவிற்கு பின்பு அவரின் சீடர்களால் உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்று முன்பே பார்த்தோம். 6ம் நூற்றாண்டளவில் பழமைவாத கிறிஸ்தவம், கத்தோலிக்கம் என்று பிளவுபட்டு பின்பு 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் என்னும் ஜேர்மானிய பாதிரியாரால் புரட்டஸ்தாந்து என்னும் சீர்திருத்தப்பட்ட கிறிஸ்தவம் தோற்றுவிக்கப்பட்டது. அவரால் எழுதப்பட்ட 95 ஆய்வுகட்டுரைகள் (Thesis) புரட்ட்சஸ்தாந்தின் அடைப்படையாகும்.
கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து என்பவற்றில் பெரிய வித்தியாசம் இல்லாவிடினும் அதிகாரம் மற்றும் பாரம்பரியம் என்பவற்றில் சிறிய வித்தியாசங்கள் உள்ளன. புனித பீட்டரின் வாரிசாக கருதப்படும் பாப்பாண்டவரின் (Pope) அதிகாரத்திற்கு கத்தோலிக்க திருச்சபை வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. அதேவேளை புரட்டஸ்தாந்து மதமும் அதன் பிரிவுகளும் வேதாகமத்தின் அதிகாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன.
முக்கியமாக, கத்தோலிக்க துறவிகள் திருமண பந்தத்தில் ஈடுபடமுடியாது. ஆனால் புரட்டஸ்தாந்து துறவிகள் திருமண பந்தந்தில் ஈடுபடலாம். இலங்கையில் 19ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அங்கிலிக்கன் சபை புரட்டஸ்தாந்து மதத்தின் ஒரு பிரிவாகும். American Ceylon Mission, Church of South India, Methodist Church of Ceylon, Ceylon Pentecostal Mission என்பன இலங்கையில் காணப்படும் சில புரட்டஸ்தாந்து மதப்பிரிவுகளாகும்.
மார்ட்டின் லூதர் தனது பிற்காலத்தில் யூதர்களுக்கெதிராக பெரும் பிரச்சாரத்தை செய்தார். கிறிஸ்தவ நாடுகளில் இருந்து யூதர்களை முற்றாக வெளியேற்றமுடியவில்லை என்ற கவலையில் “யூதர்களும் அவர்களின் பொய்களும்” (On the Jews and Their Lies) என்ற தலைப்பில் அவர் எழுதிய 65,000 சொற்கள் அடங்கிய ஒரு கடிதம் பிரபலமானது.
இச்செயற்பாடுகள் நம்முடைய கர்த்தருக்கும் கிறிஸ்தவ மண்டலத்திற்கும் மரியாதை செலுத்துவதற்காக செய்யப்பட வேண்டும், இதனால் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை கடவுள் பார்க்க வேண்டும் என்று மேலும் சொல்லும் அவர் அக்கடிதத்தில் எழுதியவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
1.யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு (synogog) தீ வைக்க வேண்டும்.
2.யூதர்களின் வீடுகளும் இடித்து அழிக்கப்பட வேண்டும்.
3.யூதர்களின் புனித நூலான தோரா மற்றும் தால்முடிக் என்பவற்றை அழிக்க வேண்டும்.
4.யூதர்களின் மத போதகர்களான ரபிக்களை தடை செய்ய வேண்டும்.
5.நெடுஞ்சாலைகளில் யூதர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது.
6.அவர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்குவது தடை செய்யப்பட வேண்டும். மேலும் வெள்ளி மற்றும் தங்கம், பணம் மற்றும் பொக்கிஷங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து பறிக்க வேண்டும்.
7.இளம், வலிமையான யூத ஆண் பெண்களின் கைகளில் கோடாரி,, மண்வெட்டி ஆகியவற்றை கொடுத்து அவர்களுக்கான உணவை அவர்களே வியர்வை சிந்தி உழைக்க பரிந்துரைக்கிறேன். ... ஆனால் நாம் அவர்கள் நம்மையோ அல்லது நம் மனைவிகள், குழந்தைகள், வேலையாட்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று பயப்பட்டால், பிரான்ஸ், ஸ்பெயின், பொஹேமியா(தற்போதைய செக் குடியரசு) போன்ற பிற நாடுகள் செய்தது போன்று நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற்றவேண்டும்.
மார்ட்டின் லூதரின் பிரச்சாரம் அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு மில்லியன் கணக்கான யூதர்கள் கொல்லப்படுவதற்கு உந்துசக்தியாக அமைந்தது என்றும், குறிப்பாக இதுவே 400 ஆண்டுகளுக்கு பின்பாக ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் அதன்காரணமான ஹோலொக்கோஸ்ட்டுக்கும் அடிப்படை என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். புரட்டஸ்தாந்து மதத்தவர்கள் அதிகமாக வாழ்ந்த ஜேர்மனியிலும் அதன் சுற்றுப்புற ஐரோப்பிய நாடுகளிலும் 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூத இன மக்கள் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கொல்லப்பட்டனர். இதைப்பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம்.
—----------
யூத வினோதங்கள்: பயங்கரமான ஒரு விடயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அல்லது படித்தாலோ மூன்று முறை தூ தூ தூ என்று துப்பும் வழக்கம் யூதர்களிடையே உள்ளது. அதே போல நல்ல செய்திகளை கேட்டவுடனும் கண்ணூறு படாமல் இருக்க மூன்று முறை தூ தூ தூ என்று துப்பும் வழக்கமும் அவர்களிடம் உள்ளது.
—------------
Photo: The Via Dolorosa in Jerusalem. துன்பப் பாதை என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்டு, சிலுவையினை சுமந்து சென்ற, ஜெருசலேம் பழைய நகரிலுள்ள ஒரு ஒடுங்கிய வீதி.
குமாரவேலு கணேசன்
9/06/2023

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...